Thursday, February 27, 2014

நான் ஹீரோ(வுடன்)….

ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளும் ஹீரோ என்ற அசைக்கமுடியா ஏதோ ஒரு ஒற்றை உருவம் பதிந்திருக்கும் என்பது கொஞ்சம் மறுக்க முடியா உண்மை தான். அந்த உருவத்தை கண்ணெதிரே காணும் நேரங்களில் திக்குமுக்கடித்தான் போவோம்.

எனது ஹீரோவும் என்னை சிறுவயதிலிருந்தே பாதித்தவர் தான்.அதீதப்பட்ட இளைஞர்களை பாதித்தவர் என்றே தெளிவாய் கூறிவிடலாம். சச்சின் இது பெயரல்ல – ஒரு சாம்ராஜ்யம். அவரை பார்த்துவிட வேண்டும்,பேசி விட வேண்டும் என்று வெகுநாட்களாய் ஏங்கியிருக்கிறேன். காலத்திற்காய் காத்திருந்தேன் ஒரு நாள் நிச்சயம் கனியுமென்று.

அன்றொருநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருப்பதாய் அறிந்தேன். நடக்கவிருக்கும் ஒரு பந்தையத்திற்கு ஒருநாள் முன்பே வந்துவிட்டதை அறிந்தேன். அதுமட்டுமன்றி பந்தையத்திற்கு முந்தைய நாள் பயிற்சி ஆட்டம் ஆடுவதாக அறிந்தவுடன் மைதானம் நோக்கினேன். மைதான அலுவலகத்துக்கு விரைந்தேன். மன்றாடினேன் காணவேண்டுமென. அலுவலரோ, இந்த பயிற்சி ஆட்டத்தை யாரும் பார்க்க முடியாதென்றும், யாருக்கும் அனுமதி இல்லை என்றும், கூறி முடித்த பிறகும், வெகுநேரமாய் கவலை தேய்ந்த முகத்துடன் காத்திருந்தேன்.தீடிரென என்னை அழைத்து “ட்ரிங்க்ஸ்” கொடுக்க போவாங்க பசங்க, அவுங்க கூட போயிட்டு வந்திடு என்றார்.ஒன்றும் புரியவில்லை, சந்தோசத்தில் மைதானத்தின் உள்ளே சென்றேன் குதித்துக்கொண்டே. வீரர்களை நெருங்க நெருங்க, அத்தனை அதிகபட்ச சந்தோசம், சுவாசம்விட சிரமப்படுத்தியது.

எனது ஹீரோவை நெருங்கிவிட்டேன். கண்ணிமைக்காமல் பார்த்தேன்,அத்தனை அழகு. இந்த கரங்களா இத்தணை ரன்களை அடித்தது என்று பிரம்மித்த நொடியில், பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடி ஓடி நின்றேன் அவர் முன்பு. என்னை கவனித்த அவர் புன்னகை செய்தபடி அருகில் பிடித்து என்னை நிறுத்தினார். ஐயோ அத்தனை சந்தோசம், என்ன சொல்ல?-வார்த்தைகளற்று நின்றேன். என்ன பண்றீங்க?, எப்படி இருக்கீங்க?, என்ற தமிழ் வார்த்தைகளை அவர் உதிர்க்க உதிர்க்க ஓடி பிடித்துகொண்டிருந்தேன் அவர் உதிர்த்த வார்த்தைகளை.சந்தர்பத்தை நழுவவிடக்கூடாதென ஒரு வேண்டுகோள் விடுத்தேன் அவரிடம், one snap please ? என்றதும், சரி என்றவரிடம் என் மட்டற்ற மகிழ்ச்சியை உதிர்த்துவிட்டு, எனது செல்போனில் படம் பிடித்துகொண்டேன் வேறொருவர் உதவியுடன்.

“One minute” என்று சச்சின்,அவரது செல்போனை நீட்டினார் படம்பிடிக்கும் நபரிடம். எதற்கு என்ற கேள்வியுடன் பார்த்த என்னை நெருக்கமாய் அணைத்துக்கொண்டு please one snap என்றார். அவ்வளவு தான் அவ்வளவு நீளமாய் சிரித்ததில்லை என நினைக்கிறேன். போட்டோ எடுத்து முடித்ததும்,நான் பேச ஆரம்பித்தேன் அவரிடம்., நான் facebookல போட்டு கலக்கபோரேங்க என் friends கிட்ட காட்டி,ஆனா நீங்க எடுத்த போட்டோவ என்ன செய்ய போறீங்க? என்ற, எனது கேள்விக்கு புன்னகையை மட்டும் உதிர்த்தார் பதில் பேசாமல்.

தீடிரென எனக்குள் ஒரு சந்தேகம், இப்போ நடப்பதெல்லாம் உண்மை தான, என்று கில்லிபார்த்துகொண்டேன்-உண்மை தான் என்று புரிந்தது.சரி நகரலாம் என்ற நேரத்தில் அத்தனை ஏக்கம் ஏனோ நெஞ்சில் ஒட்டி இருந்தது. வேகமாய் ஓடி அவரிடம் நிச்சயம் நானும் உங்கள மாதிரி celebrity ஆவேன் என கூறி முடிக்கும்பொழுது அத்தனை நம்பிக்கை என்னுள் இருந்தது. சச்சின்,”Surely you will update this photo in ur profile that time” என்று அவரிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டேன்.

திரும்பி நடந்துவரும்பொழுது செல்போனில் எடுத்த போட்டோவை பார்த்தேன். திடுக்கிட்டேன், என்ன எடுத்து வைச்சுஇருக்கான்?, எதோ morphing பண்ணின மாதிரி இருக்கு, இதை Facebookல போட்ட எவனாவது நம்புவான? என்ற எனது கவலையில் அடுத்த போட்டோ நன்றாக இருந்ததில் அத்தனை சந்தோசம். போட்டோவை பார்த்த கொண்டே வந்தபொழுது நிலைதடுமாறி கீழே விழுந்தேன் தீடிரென.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். ஒரு நிமிடத்தில் அனைத்தும் மாறியிருந்தது. கையில் செல்போனே இல்லை, இருட்டாய் இருந்தது. அறைகாற்றாடியின் சப்தம் அனைத்தையும் உடைத்தது என்னுள் , இத்தனையும் கனவு என்று ஏற்றுகொள்ள மனம் அடம்பிடித்தது.கண்ணீர்சிந்தாத நிலை மட்டுமே. அத்தனை ஏமாற்றம் என்னுள் உடைந்து உருகத்தொடங்கியது ஒவ்வொரு நிகழ்வாய்..கில்லி எல்லாம் பாத்தோமே அப்புறம் எப்படி என்ற எனது கேள்வியிலேயே பதில் இருந்தது கனவில் கில்லினால் வலிக்காதென்று.. celebrityயாக ஆகுவேன் என்று வாக்குறுதியெல்லாம் கொடுத்தோமே என்று நினைக்கையில் அத்தனை நிகழ்வும், கனவு எனும் நிகழ்வில் ஏமாற்றியிருக்கிறது என்பதை தெளிவாய் உணர்ந்தேன். மெதுவாய் படுக்க ஆரம்பித்தேன் ஏக்கத்தில்.

கனவு, களையும் நிமிடங்களில் ஒவ்வொரு மனிதனும் நொறுங்கித்தான் போகிறான் ஒரு சில நிமிடங்களுக்கு.எட்டிபிடிக்க முடியா சிகரங்களை எட்டிபிடித்து விட்டதாய் சந்தோசத்தில் திளைக்கும் நேரத்தில் கனவென்ற ஒற்றை யதார்த்தத்தில், மிச்சம் வைக்காமல் தூக்கியெறிய, உடைந்து போகிறது உள்ளம்.

எனது ஹீரோவுடன் நடந்ததை நினைத்துகொண்டே உறங்க மறுத்தது உடல்.மெதுவாய் புரண்டுபடுத்தேன். சிறிது நேரத்தில் என்னை இருக்கமாய் பிஞ்சுவிரல்களால் அழுத்திபிடித்து, பிஞ்சுகால்களை என்மீது இட்டு இருக்கமாய் பிண்ணிக்கொண்டு, என் முகமருகே அவனது முகம் வைத்து, முனக ஆரம்பித்தான் தூக்கத்தில், யாழின் எனும் ஒருவயது நிரம்பிய எனது மகன்.

சந்தோஷ பூரிப்பில் மெதுவாய் உறங்க ஆரம்பித்தேன், இப்பொழுது நானும் ஒரு celebrity என்பதை தெளிவாய் உணர்ந்தவனாய்.



Tuesday, February 25, 2014

ஞாயிற்றுகிழமை, நான்கு மணி…


தனிமையில் அமர்ந்து, மௌனமாய் நமது வாழ்க்கையை பின்னோக்கி பார்ப்பதில் அத்தனை ஆனந்தம்.,ஏதோ ஒரு மாலைநேரத்தில், மெதுவாய் சாரல்கள் தூவிட, பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, மழைநீரின் ஒவ்வொரு துளியை ரசித்துக்கொண்டு,தேநீரின் ஒவ்வொரு துளியை பருகிட கிடைக்கும் ஆனந்தம், வாழ்க்கையை பின்நோக்கி பார்ப்பதிலும் கிடைப்பதாய் உணர்கிறேன்.

பதின் வயதுகளில், நம்மில் அதிகபட்ச நபர்களுக்கு கல்வி கற்றல் என்பது கம்பி மேல் நடப்பது போன்று தான். அப்பாக்களின் அதட்டல்களிலும் அம்மாக்களின் எதிர்பார்ப்புகளில் பாதி வயதை பயத்தின் கையில் கொடுத்துவிட்டு பாவமாய் நின்று கொண்டிருந்தோம் என்பதே நிதர்சனமான உண்மை.கொத்தடிமைகளாய் பள்ளியை நோக்கி நகர்வோம் தினந்தோறும். நண்பன் ரமேஷ், சதீஷ் என நீண்டுகொண்டே பட்டியல் சென்றாலும் ஒருத்தருக்கொருத்தர் உதவிட முடியா நிலை தான் அப்பொழுதெல்லாம். பள்ளியை நோக்கி நடந்து செல்லும் போதும் அத்தனை பயம், இப்பொழுது நினைத்துபார்க்கும் தருணங்களில் கூட அதன் வலியை உணரமுடியும். ஒரு நாளைக்கு 8 வகுப்புகள், ஒவ்வொன்றிலும் தினசரி தேர்வுகள். இந்த தினசரி தேர்வின் முடிவும் அன்றே கைகள் சிவக்க சிவக்க கிடைத்துவிடும் பாரபட்சமின்றி அனைத்து நண்பர்களுக்கும்.

ஒருவழியாய் திகில் பயத்தில் ஆரம்பிக்கும் திங்கள், கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து வெள்ளியில் நிற்கும். வெள்ளிகிழமைகள் ஒவ்வொன்றும் தேவநாட்களாய். சிரித்துகொண்டே இருப்போம் எத்தனை அடிவாங்கினாலும், சனி- ஞாயிறு விடுமுறை என்ற கனவிலே. நாங்கள் கேட்ட மிகச்சிறந்த சுதந்திர முழக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை கடைசி மணி என்றே ஆணித்தரமாய் கூறிவிடலாம். சிறை திறந்த கைதிகளாய் சிதறி ஓடுவோம் பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு.

பள்ளியின் எதிரிலிருக்கும் வாரச்சந்தையை சுற்றி திரிவோம் கையில் காசு இல்லாமலே ஆனந்தமாய்.ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் நிறையும் எங்கள் இதயங்களில் ஆழமாய். வீடு சென்று விழும் எங்களின் வயிறுகள் உண்ணாமலே நிறையும் சந்தை தின்பண்டங்களின் வாசணையில். ஊர்முற்றத்து கோவிலில் ஒன்று கூடி ஆசை தீர விளையாண்டு தீர்த்துவிட்டு,திட்டம் தீட்டுவோம் அடுத்த நாள் கிரிக்கெட் விளையாட்டுக்கு. நாங்கள் விளையாடிய விளையாட்டுகளை விட, ஓட்டிச்சென்ற ஆடுமாடுகள் விளையாடும் விளையாட்டிற்கு அளவில்லை.எப்படியோ சனி முடிந்துவிடும் விளையாட்டு களைப்பில்.

ஞாயிற்றுகிழமை -இது நாள் அல்ல, ஒரு மந்திரம். இந்த மந்திரத்தில் பதின் வயதுகள் மட்டுமல்ல, ஆதி தொடங்கி, அந்தம் முடியும் வயதுவரை மயங்கித்தான் போயிருந்தார்கள். வாரம் முழுவதும் உழைத்து களைத்து, ஒய்வெடுப்பதற்காய் ஒதுக்கிவிடப்பட்ட இந்த நாளில் துவக்கமே அத்தணை மங்களகரமாய் இருக்கும். கோதுமையும்,நெல்லிலும் வளர்ந்த நாட்டுகோழிகள், மஞ்சளில் குளித்து, கொத்தமல்லிசாந்தில் மணக்க ஆரம்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஊரெங்கும். ஆர அமரஉண்ணும் அழகை ஊரின் எல்லா திசைகளிலும் உணரமுடியும். உண்டு முடித்த நொடியினில் வேலைகள் அணைத்தும் வேகமாய் முடியும் இவர்களது ஆர்வத்தில்.

பொழுது சாய்வதற்குள் முடித்து விடு என்று ஊரின் ஒவ்வொரு தெருவிலும் கேட்கலாம் சிறுசு பெருசுகளின் கட்டளைகளை. இன்னும் சில தெருக்களில், நாலு மணிக்குள்ள ஆகணும் வேலை என்று அபாயமணி கூட அடிக்கும். இந்த ஆபாயமணியின் காரணங்கள் அத்தணை வயதிற்கும் தெரியும்.

நேரம் நான்கு மணி-என் தமிழினத்திற்கே உரிய கலை ரசணை ஒவ்வொருவரின் மனதிலும் மெதுவாய் துளிர்விட ஆரம்பிக்கும் மணி நான்கை நெருங்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பே. ஊரே ஒன்று கூட ஆரம்பிக்கும், இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன் என ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் சத்தம் வரும் தருணங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் இருக்கும் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு இருந்திருப்பார்கள்.பதின்வயது பருவங்கள் படிய வாரிய தலையுடன், பவுடர் பூசிக்கொண்டு ஊர்முற்றத்து கோவிலுக்கு வந்து சேர்ந்துவிடும். எல்லோரும் வந்தாச்சாப்பா என்ற ஊர் பெரியவரின் சத்தம் உதட்டை விட்டு நகர்வதர்க்குள், எல்லோரும் வந்தாச்சுன்னு சொல்லும் ஊர் மக்களின் வார்த்தைகளில் அவசரம் நன்றாய் தெரியும்.கிளம்ப ஆரம்பிக்கும் கூட்டத்தை ஊர்பெரியவர் வழிநடத்தி செல்வார். அத்தணை கூட்டமும் அவரின் வீட்டை சென்றடைந்திருக்கும். யார் அவர்?.- “ஒரு பணத்தான் செட்டியார்”, வசதி கம்மியாய் இருந்தாலும் ஊரைவிட்டு அதிக தூரம் பயணித்து நாட்டு நிலவரங்களை தெரிந்து வைத்துகொண்டு, வெகு தூரம் சென்று புதிது புதிதாய் பொருட்களை வாங்கிகுவித்திருக்கும் கிட்டத்தட்ட ஊர் பிரபலர்.

நெருங்கிய கூட்டத்தை கதவை திறந்து வரவேற்று அத்தணை கூட்டத்தையும் பெரிய அகன்ற கார வாசலில் அமரவைத்து, ஊர் பெரியவருக்கு நாற்காலி போட்டு அமரவைத்துவிட்டு நகருவார். ஊரே அவரை உற்றுப்பார்க்கும் தருணத்தில், உணர்ந்தவராய் மெதுவாய் வீட்டின் உள்ளிருந்து நகர்த்தி வருவார் அந்த கருப்புவெள்ளை தொலைகாட்சியை.அத்தணை கம்பீரம் அந்த தொலைக்காட்சிப்பெட்டி மரதிறப்பானுக்கு .இரண்டு கைகளில் பிடித்து மரதிரப்பானை திறக்க, அத்தணை வயது உதடும் மலரும் மெதுவாய். தொலைகாட்சியை செயல்பெற செய்ததும் “வாசிங் பவுடர் நிர்மா, வாசிங் பவுடர் நிர்மா” விளம்பரம், அதைத்தொடர்ந்து “கோல்கேட்” விளம்பரம் என ஒவ்வொன்றாய் மாறி.படம் ஆரம்பித்ததும் “20 ரீல்” என்பதை விவரம் தெரிந்த பெரியவர் படித்ததும், கைதட்டும் சத்தம் காதை பிளக்கும்.

படம் என்ன என்பதை காண ஆவலாய் ஊர் பெரியவர்கள். யார் நடிகர்கள் என்பதை காண ஆவலாய் பதின் வயதின் பெற்றோர்கள்,”சண்டை பயிற்சி” எனும் வார்த்தையை காண ஆவலாய் பதின்வயதுகள். படம் ஆரம்பித்ததில் தொடங்கி முடியும் வரை அத்தணை நிசப்தம் காதல் காட்சிகளில் , அத்தணை திட்டல்கள் ஹீரோயினை வில்லன் இழுத்து செல்லும் நேரங்களில். அத்தணை பாராட்டுகள் வில்லனை ஹீரோ அடிக்கும் போதெல்லாம், அத்தணை சிரிப்புகள் காமெடி வெடிக்கும்பொதெல்லாம்.

செய்திகளுக்கு பின் திரைப்படம் தொடரும் என்ற எழுத்தின் முடிவில் அத்தணை விவாதங்கள், அத்தணை எதிர்பார்ப்புகள் அணைத்தும் அழகிய உணர்வுகளை தந்திருக்கிறது ஓவ்வொருவருக்குள்ளும். தண்ணி வேணும் என்று கெஞ்சுவது ஒவ்வொன்றாய் முளைக்கும் கூட்டத்தின் நடுவிலிருந்து.முகம் கோணாமல் தண்ணீர்கொடுக்கும் “தவமணி” அக்கா, மரியாதைக்குரியவராய் வாழ்ந்தார் ஒவ்வொருவரின் உள்ளத்திலும். “திரைப்படம் தொடரும்” எனும் எழுத்து மீண்டும் நிமிர்ந்து எழுந்துவிட செய்துவிடும்.”வணக்கம்” எனும் அந்த வார்த்தை செய்யும் மாயாஜாலங்களை எளிதாய் விவரித்து விடமுடியாது.

இந்த நான்கு மணி படத்தின் “வணக்கம்” எனும் சொல், பெரியவர்களின் மனிதில் ஏக்கத்தையும், பெற்றோர்களின் மனதில் அடுத்தவாரத்தின் பொறுப்பை நிணைவுபடுத்துவதோடு நில்லாமல்., என் பதின்வயதுகளின் “திங்கட்கிழமை” பயத்தை ஒட்டிவிட்டுவிடும், மூச்சுவிட முடியா கணத்துடன் ஒவ்வொருவரின் இதயத்திலும்..

Friday, February 21, 2014

கிறுக்கி மவ கிறங்கித்தான் போவா எம்மேல..




சில நேரத்துல எல்லாம் கோவிச்சுகிட்டு இருக்கேனுங்க, இந்த பால போன வருமை என் படிப்பை தின்னு ஏப்பம் விட்டுடுச்சுங்களே, இது இல்லைனா எப்படியாவது மேல வந்திருப்பனுங்களே, என்ன சொல்றது சொல்லுங்க?,அன்னாடங்காட்சி வயித்துல பொறந்ததுக்கு பண்ணையாரு வீட்டு நாயா பொறந்திருக்கனும்னு நினைச்சிருக்கேனுங்க.அது எல்லாமே  அவள பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் தானுங்க.

கிழக்கு கண்மாய் ஓரம் சுட்டெரிக்கும் வேகாத வெய்யலிலும்,குத்தவைச்சு குந்தி குந்தி தேய்ந்துபோன இடுப்பு கயித்துல, தண்ணிய கட்டிக்கிட்டு ஆடு மாட்ட மேய்ச்சுகிட்டு காஞ்சி போகும் எங்களுக்கெல்லாம் ஏதுங்க கஞ்சி?, ஆடுமாடுக அது வயிறு நிரையிற வரைக்கும்.சொந்த பந்தம் தொலைச்சு பண்ணயத்துல பாதி வயச தொலைச்சுபுட்டு பக்கியா திரியற எங்களுக்கு ஏதுங்க ஆசை பாசம்லாம்.

காலம் கடந்த பாதியில, காத்தா வந்தாலையா அந்த ஒத்த சாமந்தி நெத்திபொட்டலகி. 

“உங்க ஆடுமாடு மேயாம என் ஆடுமாட்ட கெடுக்குதுங்க, கொஞ்சம் தனியா ஓட்டி போரிகலா, இல்ல நான் போகவான்னு” 

எடுத்த எடுப்புல பட்டுன்னு கேட்டுபுட்டுவ அவ தானுங்க.
“நீ எந்த ஊருகாரி இங்க வந்து அதிகாரம்பண்றவ?”, 

கேட்ட கேள்விக்கு நறுக்குன்னு பதில போட்டவ. 

“இந்தாரு அவ இவனு சொன்னீகன்னா பண்ணையாருகிட்ட சொன்ன அவ்ளோ தான்”. 

சொல்றப்பவே நம்ம சாதி இவ தான் புரிஞ்சுபுட்டேன்.ஆச பாசமா பேசுலாம்னு அடங்கி போக ஆரம்பிச்சேனுங்க.

“கொஞ்சம் தண்ணி இருக்குமுங்கலா?, இந்த முரட்டு கருவாயன் முரண்டு புடிச்சு பறந்து வர முந்தானைல முடிச்சுவைக்குர தண்ணிய மறந்துட்டு வந்துட்டேனுங்கன்னு,”

கொம்பை காட்டி மிரட்ட கருவாயனும் பறந்தடிச்சு ஓடுவான், அவ கோவ கண்ணா பாத்து, இத்தன வருசமா இடுப்புகையித்துல கிடக்குற தண்ணிக்கு கூட நல்ல நேரம் வருது நமக்கு வர மாட்டிங்குதே என்னத்த செய்ய, கூவிகிட்டே தண்ணியகொடுக்க. 

“நாளைக்கு வாங்கிக்கோங்க, மருவாதை தெரிஞ்சவ நானு பாத்துகிடங்கன்னு”, வேயக்கானம் பேசுனவ அவ.

“நீங்க எந்த ஊருக்காரங்கன்னு கேட்டதுக்கு, தெரிஞ்ச என்ன செய்ய போறீக?., பொண்ணு பாக்கவா வரப்போறீங்கன்னு”

எகத்தாளம் பேசிபுட்ட போனவள. சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன், இந்த நக்கல் எல்லாம் என்கிட்டே வேண்டாம் தாயி, உன் சோலிய பாருன்னு ஒரு பக்கம் கோவமா சொன்னாலும், எதோ சொகமாத்தான் கிடந்தது நெஞ்சுக்குள்ள அவ பேசின எகத்தாளம் எல்லாம். காலம் கொஞ்சம் கொஞ்சமா காத்துல பறக்க என்பக்கம் வந்தா காதலோட, அட நிசமாத்தான் சொல்றேனுங்க.

கல்லப்பருப்ப தொலிச்சு முந்தானைல முடிச்சு வந்தா எனக்காக. கடிச்சுக்க கருப்பட்டியும் கொண்டு வந்தா. 

“இந்தாருங்க தெரியாம கொண்டு வந்து இருக்கேன், பண்ணையாருக்கு தெரிஞ்சா  ஊருக்கு கிளம்புன்னு ராவோடு ராவ ஊர்பக்கம் அனுப்பிவைசிருவாக. ஆத்தாளும் அப்பனும் கொன்னே போற்றுவாக என்ன, கஞ்சிக்கு தவிச்சுகிடக்குரப்ப காதல் கேட்குதாடின்னு.”

அவ வார்த்த கேட்டு கண்ணுகலங்க,”எதுக்கு அழுரீகன்னு” அவ கேட்க கருவேலங்காட்டு கருக்குருவிக கூட கத்துரத நிருத்திபுடுமுங்க. அத்தன காதல கண்ணுல காட்டிபுட்டு, “உன்ன எவ காதலிப்பானு” பொய் சொல்லி ஓடிப்போரப்ப எல்லாம் உடம்பு முழுசும் அத்தனை சொகம் சொக்கவைக்கமுங்க.ஆடு மாடு மேய்க்கவா பொறந்தோம்னு நினைச்ச மனசுகூட, குளிர்ந்துபோகுமுங்க அவ முகத்த பாத்து, அவ மடியில படுத்தா.”எப்போ பொண்ணு பாக்க வரீக எங்க ஊருக்குன்னு” அவகேட்க, நான் வரமாட்டேன்னு சொல்ல,அழுதுகிடக்கும் அவமுகத்த தொடைச்சு சும்மா சொன்னேன்னு சொல்லும்போதும் மனசு கனமா கனக்குமுங்க.

அவளக் கானத இந்த ரெண்டு நாளும் சொடுங்கிப்போயி நடந்து தவிச்சேனுங்க.உச்சி மரமேறி, தூரத்து அவ உருவம் தேட தேட, மனசுடைஞ்சு பாவி வெய்யில்ல காஞ்சிப்போனேன் கருவாடா.பாவி மக்கா ஆட்டை பாதியிலே விட்டுபுட்டு பண்ணையாரு வீடு தேடி பறந்து போனேன் என் உசிர தேடி. அவ முகம் பாத்துபுட்டா அத்தனையும் மறந்துபோவும், முல்லுதச்ச காலுகூட முழுசா மாறிப்போவும். தூரத்து பண்ணையாரு வீட்ட பாக்கும்போதே படபடக்குது பாவிமனசு அவமுகத்த பாத்துபுட. மாட்டுகொட்டாயி தாண்டி மதில் மேல ஏறிபார்த்தப்ப அப்படியே நொறுங்கிப்போச்சி மனசு சுக்கு சுக்கா. பாவி மக்கா, பச்ச புள்ளைய, பல்லு இல்லா பண்ணையாருக்கு பங்கா கொடுக்க பாக்குறீங்களே. அழுதழுது வீங்கிப்போன அவ முகம் பாக்கவா பல மைல் பறந்துவந்தேன்.

எட்டிகுதித்து அவ முன்ன நின்னேன், எட்டிகரம்பிடித்து தைரியமா சொன்னேன், என் பொஞ்சாதி இவதான்னு. முகம்மலர்ந்து அவகொடுத்த முத்தத்துல அத்தனை பேரையும் அடிச்சு சாய்ச்சேன். எனைக்காக்க வந்த சாமி நீதான்னு அவ சொன்ன வார்த்தைல, என் உசிரு நீ தான்னு கரம் பிடிச்சு காத்தா பறந்தோம்.

நான் மேய்ச்ச ஆடு வீடுபோயி சேர, நான் போயி சேர்ந்தேன் அவளோட பல ஊரு.ஐஞ்சு புள்ள பெத்துபுட்டோம் ஆசைக்கு ஒண்ணா..அவ மடியில நான் தூங்க, கிறுக்கி மவ கிறங்கித்தான் போவா எம்மேல..

Thursday, February 20, 2014

சில நேரங்களில் சில அசாத்திய மனிதர்கள் - என் தேசத்து வீரன்



வெற்றி என்பது எதிரியை சாய்க்கும் நொடியில் மட்டுமே என்றால் வெற்றிக்கான பரிசு எதிரியின் கண்ணீரோ அல்லது ரத்தமாய் மட்டுமே இருக்க முடியும்.ஒரு நொடியில் வெளிப்பட்டுவிடும் நிகழ்விற்கு பெயர் வெற்றி என்பதினில்லை, அந்த ஒரு நொடி நிகழ்விற்காய் தன்னை தினமும் தயார்படுத்தி தன்னை அர்பணித்து பழகிய மிகச்சிறந்த அசாத்திய தைரிய குணமே வெற்றி.

என் தேசத்துக்கே உரிய வீரம், ஆளுமை, இந்த மண்ணை தாண்டி எங்கு தேடியிருந்தாலும் நிச்சயமாய் கிடைத்திருக்காது நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில். அடங்கா முரட்டு குதிரையையும் அடக்கி கடிவாளமிட்டு, அதன் மீது அமர்ந்து தனது முரட்டுதோள்களில் ஈட்டி ஏந்தி புயலென கிளம்பி, புலியென எதிரிகளை தும்சம் செய்துவிட்டு வெற்றி கூச்சலிடும் நமது முன்னோர்களின் மிகப்பெரிய வீரமும் வெற்றியும் ஒருநாளில் உறுதிசெய்யப்பட்டதன்று, பலமாதங்களாய் தோள்களை கேடையமாய், எலும்புகளை ஈட்டியாய் பதம் செய்ய தவறாமல், செதுக்கிவிட்ட ஒரு மிகப்பெரிய ஆற்றலே வீரமாகவும், வெற்றியாகவும் வெளிவரும் போர் நாட்களில்.

எதிரி யாரெனவும் , பலமென்னவென்றும் தெரிந்துகொள்ளும் முன்பே தீயென கிளம்பி, சரித்திரம் படைக்க துடித்த ஒவ்வொரு வீரனும் மிகச்சிறந்த அசாத்திய மனிதனே. எத்தனை பெரிய வீரம் இருந்திருந்தால் முன்னும் பின்னும் முரண்பாடற்று கரடு முரடாய் வெட்டி சாய்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் பம்பரமாய் சுழன்று வெட்டுகளையும் கீறல்களையும் தோளில் பரிசாய் சுமந்துகொண்டு,நொடிகளில் கூட கண் அயராமல், கூர்மையாக்கி,கொன்று குவித்திருக்க முடியும்.

தனது ஒவ்வொரு முன்னோக்கி நகரல்கலும் எத்தனை இன்றியமையாதது என்று நன்றாய் தெரிந்து வைத்திருப்பான். தனது வெற்றிகள் யாவும் தனது ஆளுமை சொந்தக்காரரான அரசனுக்கு சேரும் என்பதை தெரிந்திருந்த போதும் வீரம் என்பதை அளவில்லாமல் உருக்கி ஊற்றிக்கொண்டவன் உடல்முழுவதும்.ஒவ்வொரு அயல் நாட்டு மனிதனையும் தன் மண்ணில் கால் தடம் பதிக்கவிடாமல் போராடியவன். குடும்பம் என்ற அழகிய வட்டத்தை தனது வீரத்துக்காய் விட்டுகொடுக்காமல் போராடியவன்.

எதோ இனத்துக்கான போராட்டமாய் பாராமல் அவமானமாய் பார்த்து தன் தோளில் வெற்றியை சுமந்துகொண்டு வீழும் வரை போராடி ஜெயம் எனும் வார்த்தையை கேட்டு முடித்தபின்னரே உயிரை மண்ணில் சாய்க்கும் அசாத்திய மனிதன்.தன்னோடு முடியாமல் தனது வீரத்தை விதைத்துவிட்டு மண்ணின் மானம் காக்க போராடியவன்.

போர் என்று முழங்கும்போதெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி, புருவம் உயர்த்தி, நான் தயார் என்ற கர்ஜனையில், புலி பாய்ச்சலை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வீரம் அவனது உயரிய அடையாளம். அத்தனை வீரத்தையும் சில நேரங்களில் பிய்த்து வைத்துவிட்டு தனது துணையின் காதலை அறிந்து வாழ்வியலை அழகாய் ரசித்து வாழ்ந்துவிட்டு, மண்ணிற்கான மானம் காக்க நேரிடும் நேரங்களில் வீரத்தை தன்னில் பூட்டிக்கொண்டு அசரா நெஞ்சோடு கொஞ்சம் விளையாடிவிட்டு வர கிளம்பிவிடுவான்.

வெற்றியா தோல்வியா என்ற முரண்பட்ட இருவேறு கருத்துகளை இவனில் வைத்திருப்பதில்லை. முடியும் வரை முடித்துதள், எத்தணை பேரை கிழித்தது தன் வாள் என்பதே இவனது கணக்கு.பயம் என்ற ஒற்றை உணர்வு இவனது நாடி நரம்புகளை தொடக்கூட நினைத்ததில்லை இவனின் வீரம் கண்களில் பொறியாய் தெறிக்கும் வரை.

ரத்தம் சிந்த வைப்பது என்பது கொடூரமான நிகழ்வாய் தெரிந்தபோதும், இனத்திற்கான, மண்ணிற்கான போராட்டம் என்றபோது இனம்தலைக்க சீறிடும் ஒவ்வொரு வீரனின் மார்பிலும் விளைந்திருக்கும் வீரம் நியாயத்திற்கு உரியதே என்பது இவனின் உணர்வு.

தன்னை போர்க்களத்தில் தேடும் தாய்க்கோ, தாரத்திற்கோ, வேல்கம்பை மார்பில் சுமந்திருக்கிறேன், முதுகில் அல்ல என்று தனது வீரத்தை பாய்ந்த வேல்க்கம்பில் மாட்டிவிட்டு விதையாகியிருப்பான், இன்னொரு முறை இதே வீரத்தை, வீழ்ந்த மண்ணிற்கு புதியதாய் விளைச்சலாக்கி விட..

Wednesday, February 19, 2014

காலணி மந்திரம்..

சில நேரங்களில் சில மனிதர்கள் தோற்றுபோவதுண்டு சந்தோசமாய். வீழ்த்தியவன் எதிரியாகினும், அன்னியனாகினும் வீழ்ந்ததின் அர்த்தம் புரியும் தருணங்களில் தோல்வியும் கூட வெற்றியே. ஒவ்வொரு சராசரி மனிதனும் எமாற்றம் எனும் வாழ்வியல் கூறை முத்தமிட்டு இருக்கிறான் என்பதை உள்ளில் ஒப்புக்கொள்வான்.

நம்மையும் மீறிய சில திட்டமிடல்களில் சரிக்கி தான் போயிருப்போம், அப்படி தான் அன்றைக்கு முதல் நாள் திட்டமிடல் அன்று தோற்றுப்போனது. நாளை காலை 9 மணிக்கெல்லாம் புறப்பட்டு வீட்டை விட்டு கிளம்பிடனும் என்ற முதல் நாள் திட்டமிடல் தோல்வியை தழுவியது. சரி எப்படியோ 9 மணி என்பது 11ஐ நெருங்கியிருந்தது. வீட்டிற்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிவிட கடையை நெருங்கிய நேரம் போதுமானதாய் இல்லை. என்ற போதும் வேறு வழியின்றி அவசர அவசர தேடல்கள் தொடங்கியது கடையினுள்.

ஒன்றின் தேடல், மற்றதின் வழியாய் இழப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். அவசர தேடலில் புத்தம் புதிய காலணி கூட அறுந்து, நிதானம் தேவை என்றதொரு பாடத்தை புகட்ட மறக்கவில்லை.எதிர்பாராத சூழல் நிகழும் போதே நமது சகிப்புத்தன்மையின் அளவு தரமாய் மதிப்பிடப்படும்.கொஞ்சம் கோபத்தின் உச்சிக்கே சென்றேன் என்பது, உயிரில்லா, பொறுப்பாளியாகமுடியாத காலணியை திட்டும்போது உணர்ந்துகொண்டேன்.”இந்த செருப்பு வேற நேரம் கெட்ட நேரத்துல அறுந்து போயி உயிரை வாங்குது ,அஹ அஹ அஹ….” திட்டிமுடித்து விட்டு மனைவியின் பக்கம் திரும்பி ” எல்லாம் உன்னால தான் கொஞ்சம் நேரத்துல கிளம்பி இருந்தா இவ்ளோ அவசரம் தேவை இல்லை “

என்று கூறி முடிப்பதற்குள் “அவள் , குழந்தையை நோக்கி, எல்லாம் உன்னால தான், நீ ஒழுங்கா விளையாடாம சீக்கிரம் சமத்தா சாப்பிட்டு இருந்தா இத்தனையும் நடந்திருக்காது” என்று காரணத்தை விளக்கிவிட்டாள். “சிறிது நேரத்தில் அவனும் அடுக்கிவைத்திருந்த பொம்மைகளை நோக்கி எதோ சைகையில் சிணுங்க ஆரம்பித்தான். புரிந்தது எனக்கு முப்பதுகளை தாண்டிய எங்களுக்கு தெரிந்திருக்கிறது தன் தவறுக்கு, யாரை கை காட்டவேண்டும் என, ஒரு வயதை மட்டுமே தாண்டிய அவனுக்கு தெரியவில்லை யாரை கை காட்ட வேண்டும் என, அதலால் பொம்மையை நோக்கி.

அய்யயோ பொம்மை யார கைகாட்ட போகுதோ, அதற்கு முன் நாமே சரி செய்து விடுவோம் என்று கடையை விட்டு வெளிவர எத்தனிக்கிறேன் சிறு புன்னகையுடன். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் நமது அருகிலே என்பது போல் எனக்கான பிரச்சனைக்கும் தீர்வு அந்த கடையின் முற்றத்திலே அமர்ந்திருந்த செருப்பு தைப்பவரை பார்த்ததும் புரிந்தது. அகமகிழ்ச்சியுடன் நெருங்கிய தருணத்தில், அவரை சுற்றி ஒரு தம்பதியும், அவருக்கு அருகே அவரை கட்டிபிடித்துகொன்டு ஏறக்குறைய 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி.

சிறுமியை பார்த்ததும் தெரிந்துவிட்டது அவரின் பேத்தியாய் இருக்கலாமென்று. “சிலேட்டு பென்சில் வாங்க காசு இருந்தா கொடு தாத்தா” என்ற அவளது கோரிக்கை உறுதி செய்து விட்டது பேத்தியே தான் இவள் என்று.

அவள் கெஞ்சிக்கொண்டிருக்க, எனக்கு முன் அவரை நெருங்கிய தம்பதியர் அவரிடம் காலணி கொடுத்து தைத்துகொடுக்க கோரினர். செய்யும் வேலையை திருத்தமாய் செய்ய முயலும் சில மனிதர்களில் இவர் என புரிய வைத்தது அவரது தெளிவான தையல்கள். “அவ்ளோ எல்லாம் தையல் போட வேண்டாம், அசிங்கமா இருக்கும்,சும்மா அந்த செருப்பு கடைக்கு போகுற வரைக்கும் தாங்கினா போதும்” என்று கொஞ்சம் தமிழும் ஆங்கிலமும் கலந்த அவர்களது வார்த்தைகளில் தெரிந்தது, வறுமைக்கோட்டை பற்றி கனவிலும் கேள்விபட்டிறாத மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் என.

“இல்ல சாமி தையல் முழுசா போட்ட தான் செருப்பு அறுந்து போகமா , ரொம்ப நாளைக்கு வரும் ” என்று முடிப்பதற்குள் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மா லைட்டா பண்ணுங்க” போதும் என்று முடித்தனர்.அரை மனதுடன் அவர்கள் கேட்டது போன்றே தைத்து முடித்தார் பெரியவர்.இடை இடையே சிறுமி தனது கோரிக்கையை நினைவு படுத்த மறக்கவில்லை,”தாத்தா, தாத்தா” என்று.தைத்து முடித்ததும், “இந்தாங்க சாமி, 20 ரூவா ஆச்சு”. என முடிப்பதற்குள் இருவரும் உரத்த குரலில், 20 ரூபாயா?, அநியாயமா இருக்கே என திட்ட ஆரம்பித்த நிமிடத்தில் பெரியவர் குறிக்கிட்டு பேச ஆரம்பித்தார். ” செருப்பு முழுசா தையல் போட்டா 20 ரூவா வாங்குறேன் சாமி, நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க, சரி 10 ரூவா கொடுங்க என்றார்..

அதெல்லாம் முடியாது என பல ஆயிரங்களை தாண்டிய மதிப்புமிக்க தனது பணப்பையிலிருந்து தேடிப்பிடித்து ஒரு ஐந்து ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை வீசினார் அவரை நோக்கி..” என்னங்க சாமி 5 ரூவா தரீங்க என்று வாழ்க்கையில் ஏழ்மை இருந்த போதும், வார்த்தைகளில் ஏழ்மை இன்றி மரியாதையாய் கெஞ்சினார். இதுவே அதிகம் என்று கர்ஜித்து விட்டு காரில் ஏறி விற்ரென பறந்தனர்.

கனத்த இதயத்துடன் அவர் முன் நெருங்க ஆரம்பித்தேன் “அதிகமாய் கொடுக்ற அந்த பத்து ரூபாய்ல “ஆடி காரும், ஐம்பது லட்ச ரூபாய் பிளாட்டுமா வாங்க போறாரு பாவம், மிஞ்சி மிஞ்சி போன ஒரு பத்து சிலேட்டு பென்சில் சேர்த்து வாங்கி தருவாரு பேத்திக்கு” என எண்ணிக்கொண்டே.

கலங்கிய அவரிடம் எனது காலணியை கொடுத்து, ” நிறையா தையல் விடுங்க, பத்து இருபது சேர்த்துகூட வாங்கிக்கங்க பெரியவரே. எப்படி தையல் போடணுமோ அப்படி போடுங்க என்றேன்”.

புன்னகையுடன் தைக்க ஆரம்பித்த அவரது நிறைவான தொழில் பக்தி என்னுள் ஊடறுவ ஆரம்பித்தது மிகச்சிறந்த காலணி மந்திரமாய்…



Monday, February 17, 2014

வேறெங்கு தேட உனையன்றி…

மனிதன், தான் பயணிக்கும் வாழ்க்கை நிகழ்வுகளில் அத்தணையையும் மனிதிலும் நினைவிலும் அடைத்துவைத்துக் கொள்வதில்லை என்ற போதும் சிற்சில நிகழ்வுகள், தானாய் சிம்மாசனம் அமைத்து தங்கிவிடும் மனதிலும், நினைவிலும்.

தனக்கென சுய வாழ்க்கையை அமைத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில், கல்லூரிப்படிப்பை முடித்து சென்னை திரும்பிய நாளில், அத்தனை தெளிவாய் தெரியாது வாழ்க்கை என்பது எத்தணை கடினமான, எளிதான ஒன்று என்று.

"போயிட்டு வா ராசா, கெட்ட பழக்கம் ஏதும் பழகிக்காத, நம்ம உண்டு நம்ம வேலை உண்டு அப்டின்னு இருக்கணும் , என்ன புரிஞ்சுதா, நான் சொல்றது?" என்று எப்பொழுதும் வாழ்க்கையில் நெறிமுறை தவற முயற்சிக்க கூடாது என்று உள்ளத்தில் பதிய வைத்து விட்டு, அனுப்பி வைக்கும்போது கொஞ்சம் கலங்கித்தான் போனாள்.

சரி என்று தலையை ஆட்டிவிட்டு,எத்தணை முறை தான் சொல்லுவியோ என்று சலித்துக்கொண்டு பேருந்தை பிடித்த போது கூட தெரியவில்லை,வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது என்று. நண்பர்கள் இருக்கிறார்கள், பத்தோடு பதினொன்னாய் இருக்கபோகிறோம் அவ்வளவு தான், எதற்கு பயம்?. எல்லோரும் போக போறான், நம்மளும் கூட போகபோறோம். வேலை கிடைக்க போகுது அவ்வளவு தான் என்று பயணித்த பயணம், என்னை எத்தணை சீர்படுத்த வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்திருக்கும். எத்தணை சுரேஷ், ரமேஷ் கள பார்த்து இருக்கும்,சென்னை நோக்கி பறந்தவர்களையும், வீழ்ந்தவர்களையும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா?.

எத்தணை கற்றல்கள் சென்னையில் கால் பதித்தது முதல் என எண்ணிக்கையைத் தொடங்கினால் வாரங்களில் தொடங்கி மாதங்களில் முடியும், அத்தணை கற்றல்கள். மணிக்கொருமுறை அழைபேசியில் என்னை அழைத்து நலம் விசாரித்த அம்மாவின் அன்பை கூட கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, போராடும் குணத்தை கற்றுகொடுத்தது சென்னை.

என் கால்தடம் பதிந்து பதிந்து சென்னை வீதிகள் தேயத்தொடங்கின எனக்கான அங்கீகாரத்தை தேடிய நேரங்களில்.

ஒவ்வொருவனும் வேலை கிடைக்கபெற்று தனக்கான அங்கீகாரத்தை தக்கவைத்துகொள்ளும் தருணங்களில், ஏதோ ஒரு இனம் தெரியாத கரடு முரடான வெறி கொண்ட தேடலிலும் வெற்றியை ருசிக்க முடியாத சமயங்களில் கொஞ்சம், பயம் கூட மனதில் ஒட்டி இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை. கூட்டியும் கழித்தும் வேலைக்கான தேர்வுகளில் போராடும் நிலைகளில், இதயம் கொஞ்சம் இரும்பாய் கூட மாறி இருந்தது என்பது மறுக்கமுடியாத ஒன்றே. தைரியம் மட்டுமே உனக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் என என்னுள் விதைத்துக்கொண்டு மீண்டும் பயணிக்க தொடங்கிய எனக்கு இந்த சென்னை நிறைய கற்றுக்கொடுக்க மறக்கவில்லை.

அன்றைய புதியமுயர்ச்சியும் அப்படிதான் எதிர்நோக்கி இருந்தது எனக்காய். " தம்பி, என்ன கண்ணு ஒருவாரமா போன் பண்ணினா எடுக்க மாட்டுற, என்ன ஆச்சுடா?. வேலை இல்லைன்னு கலங்கிபோயிட்டியா?, அம்மா இருக்கேன் கண்ணு, நம்ம குல சாமி கைவிடாது. அதுக்காக போன் பண்ணினா எடுக்காம, சாப்பிடாமகொள்ளாம இருக்காதடா". என்றவளிடம், சரி நான் பாத்துக்கிறேன், இண்டர்வீவ்க்கு போகணும் நேரம் ஆச்சு, அப்புறம் பேசுறேன். என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு கிளம்ப செய்யும் நிலைக்கு இரும்பாய் மாறி இருந்தது மெல்லிய மனம் கூட.

ஒவ்வொரு படியாய் மேலே நகர ஆரம்பித்தேன் வெற்றியுடன் அந்த நேர்முகத்தேர்வில்.கடைசி சுற்றை முடித்துவிட்டு காத்திருக்கையில் கடந்த வினாடிகளில் என்னுள் நகர்ந்த உணர்வுகளை ஒவ்வொரு வேலை தேடிய மனிதனும் அனுபவித்திருப்பான். சிறிது நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதை அறிந்த நொடியில் அத்தனை கர்வமும், ஆணவமும் தலைக்கேறி மொத்தமும் அடங்கிப்போக ஒரு சில நிமிடங்கள் பிடித்தது.



அவசர அவசரமாய் தெரிவிக்க அம்மாவை அழைத்த நிமிடத்தில் அத்தணை மெல்லியதாய் மென்மையானதாய் மாறியது இதயம்.

"அம்மா, வேலை கிடைச்சிருச்சு , இப்ப தான் செலக்ட் ஆனேன்". என்று வென்றதை தெரிவித்தேன்.

" கண்ணு, செலக்ட் ஆகிட்டியா?, சந்தோசம். நான் சொல்லுல, நம்ம குல சாமி கைவிடாதுன்னு, பாத்தியா. சரி சீக்கிரம் கிளம்பி வா ஊருக்கு,அம்மா உனக்கு சுத்திபோடனும். எல்லைக்கருப்பனார்க்கு கெடா வெட்டனும்.வந்திடு இந்த வாரம்". என்று சொல்லி முடிக்க முடிக்க நீ அழுத அழுகையில் புரிந்தது, "வேலை வாங்கிகிட்டே ஊருக்கு வா ஒன்னும் அவசரம் இல்ல "அப்டின்னு நீ கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பொய் வார்த்தைகள் என்று. மகன் ஜெயித்துவிட உன் மனதை தோற்க்க செய்து இருக்கிறாய் என்று புரிந்த நிமிடத்தில், துடைத்த என் விரல்களை நனைத்தது கண்ணீர்.

பிறகென்ன, உனக்காய் ஒரு உள்ளம் அழுது துடிக்கையில் , இரும்பு மனிதனையும் நொடியினில் சாய்த்து, உள்ளம் உருகி உடைத்துக்கொண்டு வெளிவரும் அன்பிற்கோ, காதலிற்கோ, நட்பிற்கோ மறுபெயர் தான் "கண்ணீர்"..

"மறந்துடாத கண்ணு, முதல்ல பக்கத்துல ஏதாவது கோயில் இருக்கான்னு கேட்டு, சாமிய பாத்து கையெடுத்து கும்பிட்டுட்டு, அப்புறம் போ கண்ணு ரூம்க்கு. சாமியே இல்லைன்னு எப்பவும் போல எகத்தாளம் பேசிகிட்டு போகமா விட்றாத " என கெஞ்சிய அம்மாவிடம், சரிம்மா என என முனகிக்கொண்டே

"மெதுவாய் சட்டைப்பையில் கைவிட்டு பணப்பையை எடுத்து விரித்து, நிழற்படத்தில் உன் முகம் பார்த்து வணங்க ஆரம்பித்தேன் "அம்மா, தெய்வம் நீ அல்லவா, வேறெங்கு தேட உனையன்றி ".

Friday, February 14, 2014

பிப் 14 …

மிக வேகமாய் உருண்டோடிக்கொண்டிருக்கும் நமது வாழ்க்கை பயணத்தில் சில முக்கியமான பயணிகளை ஏற்றிக்கொள்ள மறந்துவிடுகிறோம், சில சமயங்களில் மறுத்தும் விடுகிறோம். நுகர்ந்துவிட மறந்துவிட்டோம் என்பதற்காய் பூக்கள் வாடுவதில்லை என்றாலும், சில பூக்கள் மரித்தே விடுகின்றன என்பதை தெளிவாய் உணர்ந்தவனாய் எழுத ஆரம்பிக்கிறேன். 

அலுவலுகத்தில் அவ்வப்பொழுது வருச கடைசியில கிடைக்குற அதே உற்சாக ரேட்டிங்க்ஸ் இந்த வருசமும் வந்துச்சு, எதிர்ப்பார்ப்பில் கொஞ்சம் குறைச்சும் கூட்டியும் வந்துச்சு. மெதுவா நகர்ந்த அந்த நேரத்தில் எனது அழைப்பேசி கத்த தொடங்கியது. “அமுதா” அக்காகிட்ட இருந்து வந்த அந்த அழைப்பை ஏற்க தொடங்கியதும், ” எதிர்முனைக்குரல் கதறி அழுதுகொண்டே பேச ஆரம்பித்தது, “செல்லம்மாள்” மருந்துகுடிசுட்டா தம்பி, ஹாஸ்பிட்டல்ல சேத்து இருக்கோம். “உடனே உன்ன பாக்கணும் அப்டின்னு அடம்பிடிக்கிறா தம்பி என்றதும், உடைந்த மனதுடன் அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாய் கிளம்பி சேலம் பேருந்தை பிடித்து அமர்ந்து எதிர்நோக்கினேன் எனது தாய்மண்ணை. 

“செல்லம்மாள்” என்பவள் வேறு யாரும் இல்லை எனது அக்காள் மகள். எங்க ஆச்சி பேரைத்தான் வைக்கனும்னு என் அக்கா சாதிச்ச பிடிவாதத்தின் வெற்றி தான் இந்த “செல்லம்மாள்”.என்னைவிட நான்கு வயது சின்னவள். “செல்லம்மாள்” அப்டிங்கற பெயர்  fancyஅஹ இல்ல அப்டின்னு தினமும் அடம்பிடிச்சவ. என் ஊருக்கும், அவ ஊருக்கும் ரொம்ப தூரம்லாம் கிடையாது. ஒவ்வொருநாளும் அதிகபட்சம் ஐந்து முறையாவது எங்களை தொந்தரவு பண்ணாம தூக்கத்தை பெற்று இருக்கமாட்டாள். 

சிறிய வயதிலிருந்து எங்க வீட்டு திண்ணையை விளையாடி தேய்த்து தேய்த்து வாசல் ஆக்கிவிட்ட பெருமை அவளையே சேரும். பல்துலக்க போறதுல இருந்து பள்ளிக்கூடம் கிளம்புற வரைக்கும், எங்க கிளம்பிட்ட மாமா, எங்க கிளம்பிட்ட மாமா என்ற அவளது கேள்வியை கேட்டு கேட்டு மண்டையே வெடிச்சிரும். 

அச்சாங்கல் ஆடும்போதும் சரி, திருடன் போலீஸ் ஆடும்போதும் சரி, கண்ணாமூச்சி ஆடும்போதும் சரி, சதுரங்கம் ஆடும்போதும் சரி, கேரம் விளையாடும்போதும் சரி., நான்,  மாமா பக்கம் தான் கூட்டு, மாமாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் என்று அத்தனை அன்பை கொட்டுவாள். “நீங்க எல்லோரும் செல்லம்மாள் அப்டினே கூப்பிடுங்க”, எங்க மாமா மட்டும் என்னை செல்லமா “செல்லம்” அப்டின்னு கூப்பிடட்டும் என்பாள். 

விளையாட்டாய் “மாமா நாளைக்கு கல்யாணங்கட்டிக்கிட்டு மெட்ராஸ் போய்ட்டா அப்போ யாருகூட விளையாடுவ, யாருக்கு சப்போர்ட் பண்ணுவ” என அக்கா கூறும்போதெல்லாம் “ம்ம்ம் அப்படியா, அப்போ பாத்துக்கலாம்” என்பாள். துருதுருவென கேள்வியை கேட்டு என்னை அறிவில் கொஞ்சம் நிமிர்ந்து நிக்க செய்தவள்.பத்தாம் வகுப்பை தாண்டிய பொழுது தனது குரும்பை கட்டிபோட்டுவிட்டாள், அனால் தொந்தரவு செய்வதை நிப்பாட்டவில்லை அடக்கத்துடன். 

ஒருவழியாய் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் பள்ளிக்கூட சிறந்த மாணவன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டு கல்லூரியை நோக்கி பயணமானேன். நன்றாய் படித்துவிடவேண்டும் என்ற இலக்கில் தவறவில்லை கடைசி வருடம் வரை. கேம்பஸ் இண்டர்வீவ்ல எப்படியாவது தேர்வு ஆகிடவேண்டும் என்ற எண்ணமும் செயலும் வெற்றி அடைய செய்தது. 

கிட்டத்தட்ட இந்த ஆறு வருடங்களில் அதிகபட்சமாய் ஒரு ஆறேழு முறை பார்த்திருப்பேன் செல்லம்மாவை. வேலை நிமித்தமாய் மாற்றாலாகி தூரத்து ஊருக்கு குடிபெயர்ந்திருந்தார்கள் அக்காவும், மாமாவும், செல்லம்மாவும். கிட்டத்தட்ட கல்லூரி முடியும் தருணம், வேலைக்கு தயாராகும் தருணம், வந்தாள் திரும்பி “செல்லம்மாள்” அத்தணை அமைதியுடன், அடக்கத்துடன்.. மாமா உங்களுக்கு வேலை கிடைச்சுருசாமே, வாழ்த்துக்கள் மாமா என்றாள். சரி என்று அவசர அவசரமாய் கிளம்பிய என்னிடம் எப்போ வருவீங்க மாமா என்றாள்.6 மணிக்கு என்று பதிலை கூறி விட்டு ஓடினேன். 

இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு காரணத்தை கைகாட்டி அவள் (தேவி) என்னிடம் பேசியதுண்டு , நானும் பேசியதுண்டு. ஒரே கல்லூரி வகுப்பில் படித்தாலும் சில சமயங்களில் மட்டுமே பேசியதுண்டு உதடுகளும், கண்களும். அப்பொழுதெல்லாம் பல காதல்கள் நண்பர்கள் விளையாட்டாய் முருக்கிவிடும் உற்சாகத்தில் தான் வளர்ந்தது என்றே அடித்து கூறிவிடலாம்.அப்படி தான் அந்த எனக்கான நாளும் நெருங்கியது. 

மச்சி கலக்குற கேம்பஸ்லையே செலக்ட் ஆகிட்ட, இனி அடுத்தது என்ன, லவ் அஹ சொல்லிடவேண்டியது தானே, அதுவும் பிப் 14 வருது, என்ற நண்பர்களுக்கு, யாருடா, யாருக்குடா சொல்றது என்ற என்னை, அந்த பெண்ணுடன் சேர்த்து வைச்சு முருக்க ஆரம்பித்தார்கள்.விளைவு, என்னிடம் அதிகம் பேசாத அந்த பெண்ணிடம் காதலை தெரிவிக்க ஆயுத்தமானேன். 

அடுத்த நாள் ஏதோ ஒருவித பயங்கர ஆவலுடன், எதிர்பார்ப்புடன் கிளம்பிய தருணத்தில் வந்து நின்றாள் செல்லம்மாள். கல்லூரி கிளம்பிட்டீங்களா மாமா என்றாள்,ஆமா செல்லம் என்றவனிடம், பிப் 14 ,ஏதாவது இன்னைக்கு special உண்டா மாமா என்றவளிடம் , கொஞ்சம் மறைக்க முயற்சித்து கடைசியில் உண்மையை அவளிடம் ஒப்பித்தேன். சற்று நிமிடம் காத்திருங்க என்ற கூறிவிட்டு வீட்டினில் ஓடி சென்று திருநீரை வைத்துவிட்டாள், வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தாள்.ரெட் ரோஸ் வேண்டாம் மாமா, வெள்ளை ரோஸ் கொண்டு போயி கொடுங்க என்றவள். அவள் ஆசிர்வாதமோ என்னவோ இன்று அந்த பெண் என்னோடு இருக்கிறாள் மனைவியாய் . 

இப்படி என்மீது அக்கறையை கொட்டியவளை தான், அத்தணை கண்ணீரோடு, வழிநெடுக காணும் தெய்வங்களை எல்லாம் கெஞ்சிக்கொண்டு செல்கிறேன்.வேகமாய் சென்றடைந்தேன் மருத்துவமணையை.அத்தணை அழுகையோடு அங்கும் இங்கும் பதட்டத்துடன் நடமாடும் அக்காவை சந்தித்து நடந்ததை கேட்டறிந்தேன். ” என்ன தம்பி பண்ண சொல்ற எங்கள, இத்தனை வருசமா கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா சரி, இப்போ வயசாகுதுல்ல, இப்படியே தள்ளிப்போட்ட யாரு கல்யாணம் பண்ணிப்ப வயசாகுதுல அப்டின்னு, நேத்து இவளுக்கே தெரியாம நிச்சியம் பண்ணினோம்”. அதுக்கு மருந்த குடிச்சிட்டா தம்பி, என்புள்ள பொளைச்சா போதும்னு இருக்கு” 

“ஏன் லூசு மாதிரி பண்ணுனீங்க” என்ற கோபத்துடன் நான் “செல்லத்தை” பாக்கணும் என்றேன். ” கண்ணா முளிக்கிறா, அப்புறம் எதுவும் பேசாம கிடக்குறா தம்பி, டாக்டர் வேற அரைமணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்லமுடியும், பாக்கலாம்னு இருக்காரு தம்பி” என்ற அக்காவிடம் நான் பாத்தே ஆகணும் என்று உள்ளே சென்று, சிறிதுநேர காத்திருத்தலுக்கு பிறகு கண்விழித்த அவளிடம் “மாமா வந்திருக்கேன் செல்லம், ஒன்னும் பயப்பட தேவை இல்லை” என்றேன்.எனக்கு தெரியும் மாமா எவ்ளோ நேரம் இருப்பேன் என கலங்கிய அவளிடம் “ஒன்னும் ஆகாது என்றேன்”. 

“நல்லா இருக்கீங்களா  எல்லோரும்” என்றாள்.. எங்களுக்கென்ன நல்லா இருக்கோம் என்றேன். ” மாமா, நான் பிழைக்கமாட்டேன் ” என்றதும் என்னையும் மீறிய அழுகை வெடித்தது. “மாமா ,அழாதீங்க.கொஞ்சம் கிட்ட வாங்க என்றாள், அருகே சென்ற என்னிடம் “தப்பா எடுத்துக்காதீங்க, என்று என் கன்னத்தில் முத்தம் பதித்தவளிடம்”., நான் ஆச்சர்ய கேள்வியை கேட்பதற்கு முன்பே பேச ஆரம்பித்தாள் தடுமாறியபடி ,” எப்பவோ ஆசைப்பட்டேன், வெட்கம் மறைத்து விலகுவதற்குள் பிப் 14 வந்துவிட்டது, அனைத்தும் மாறியது ஒற்றை நாளில் என்றாள். மேலும் பேச ஆரம்பித்த அவளின் சுவாசம் தடுமாறியது. கண்கள் மேலும் கீழும் உருண்டோட துடிக்க ஆரம்பித்த அவளிடம் “ஒன்னும் ஆகாது செல்லம்” என்றபடி டாக்டரை அழைத்தேன். அரைமணி நேரம் காத்திருந்தேன் அவளிடம் திரும்ப பேச.அவள் காத்திருக்கவில்லை என்னிடம் பேச.கடைசியாய் என்னை பார்த்த கண்களை இமைக்க கூட மனமில்லாமல் திறந்தே மரித்திருந்தாள் “செல்லம்”. 

இன்னும் எத்தனை, ஒரு(தலை) காதல்களை அழித்து, மற்றொரு காதலை புதுப்பிக்குமோ இந்த பிப் 14. 

Tuesday, February 11, 2014

திருத்தலும், அடித்தலும்…


எழுத்தின் வழியாய் அனைத்து பாதைகளிலும் பயணிக்க வேண்டும் என்ற ஆவல் என்னில் இருந்ததுண்டு. சிலரது எதிர்பார்ப்புக்காய் “இல்லறம்” என்ற பாதையில் பயணிக்க முற்படுகிறேன் இப்பொழுது.

குறைந்தது 26 வருடங்கள் தனிமையிலும், அவ்வப்பொழுது சில நண்பர்களுடனும், பயணித்த எனது வாழ்க்கை, புதிதாய் ஒரு துணையுடன் வாழ்நாள் முழுவதும் நகரப்போகிறது என்பதை உணர்ந்த தருணத்தில், எதோ அழகிய கற்பனையும், நெஞ்சை கனக்க வைக்கும் பயமும், சிறியதாய் ஏதோ எதிர்பார்ப்பும் என்னில் கனந்து கொண்டே இருந்தன.

திருமணம் முடிந்து, இல்லற வாழ்க்கையும் நன்றாக நகர்ந்துகொண்டிருந்தது. நாட்கள், வாரங்களாய் மாறின. வாரங்கள் மாதங்களாய் மாறும் தருணத்தில் அன்றொருநாள்,

சிறியதாய் கருத்துக்கள் பரிமாறியதில் ஆரம்பித்து, பெரிய வாக்குவாதத்தில் நின்றது. முரண்பாடான எதிர்பால் விளக்கத்தை ஏற்க மறுத்தது உள்ளம் இருபுறமும். விளைவு விரிசல் விழத்தொடங்கியது அன்பில். பெரியவன்(ள்) யாரென்ற தொடர்ச்சியான விவாதத்தில் உடைந்தே போய்விட்டது அழகிய துணை இவன்(ள்) என்ற புதிதாய் அரும்பிய துளிர். சிறியதாய் மௌனம் நிலவிய தருணத்தில் தனியாய் கதவை தாளிட்டு அமர்ந்ததும் மனம் உடைய ஆரம்பித்தது.

பெரிய தவறு செய்ததாய் நினைவுகள் நெறித்தன மூளையை. பொருத்தமற்ற துணையை தேர்வு செய்ததாய் எண்ணி உதடுகள் திட்டிக்கொண்டன என்னுள்.ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறிப்பெடுக்கும் எனது நெருங்கிய பழக்கம் கூட என்னை விட்டுப்போனது இந்த சில மாதங்களில். மீண்டும் புதிய டைரி ஒன்றில் எனது மௌனத்தை எழுத தொடங்கினேன். தவறு செய்துவிட்டதாகவும், இவள் எனக்கு சரியான பொருத்தமானவள் அல்ல, இவளை விட்டு விலக வேண்டும் என்றெல்லாம் மனது உடைத்து போட்ட வார்த்தைகளால் நிரப்பினேன் டைரியின் பக்கத்தை.

பிறகு அவசரமாய் கிளம்ப ஆரம்பித்தேன் அலுவலகம். படிக்கட்டை தாண்டிய நேரத்தில் அவளது சத்தம் கேட்க, சமையலறை ஓடினேன். இருக்கிபிடித்த விரலில் ரத்தம் வடிய, கலங்கிப்போனேன். அவசர அவசரமாய் மருந்திட்டுவிட்டு நகர ஆரம்பித்த கணம், அன்பாய் பேசிவிட தோன்றிய உள்ளத்திற்கு உன் வாக்குவாதம் சரியே என்று உடலின் எங்கோ இருந்து வந்த சொல்லிற்கு தலையாட்டியது போல் கிளம்பிவிட்டேன் அன்பாய் பேசிவிடாமல்.

அழைப்பேசியை முடக்கம்செய்து வைத்தேன், நாட்கள் முழுவதும் எனது பார்வையிலே நகர்ந்தது. எப்பொழுதும் 8 மணிக்கு கிளம்ப முயற்சிக்கும் நான், அன்று இரவு உணவையும் அலுவலகத்திலே முடித்துவிட்டு கிளம்பினேன் 10 மணி அளவில் கிளம்பினேன். ஏதோ இருமனதில் பைக்கை நகர்த்தி, நினைவுகளை அங்கும் இங்கும் அலசிக்கொண்டு விரட்ட ஆரம்பித்தேன் பைக்கை வேகமாய்.

சிறிய தடுமாற்றம் நினைவிலும், நிஜத்திலும். பாடரென்று மோதினேன் சாலையோர விளக்கு கம்பத்தில் வேகமாய். தூக்கிஎறியப்பட்டு கணுக்கால், கணுக்கை என பல இடங்களில் குருதி கொட்டத்தொடங்கியது.மெதுவாய் அனைத்தையும் துடைத்துவிட்டு வலியை சுமந்து கொண்டு வீட்டை நோக்கினேன். வீட்டிற்குள் நுழைந்த மறுநிமிடம், பதறியடித்து ஓடிவந்து என்னை அமரச்செய்து, அழுதுகொண்டே காயங்களுக்கு மருந்தை தடவினாள் மளமளவென சிந்தும் கண்ணீரை துடைக்க நேரமில்லாமல், கண்ணீரையும் சேர்த்தே மருந்திட்டாள் காயங்களுக்கு. இடை இடையே தன்னையும் திட்டிக்கொண்டாள், தன் தவறென்று தன்னையே குற்றம் சாட்டிகொண்டாள்.

உடனே மருத்துவமணை கிளம்பலாம் என்று கெஞ்சியவளிடம், உடலில் வலி கொஞ்சம் குறைவு தான் உள்ளத்தில் இருப்பதை விட என்று சொல்லாமல் சொல்லிவிட்டு , கொஞ்சம் ஓய்வு வேண்டும் என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தேன் படுக்கையறை நோக்கி, சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்கள் என்று அவள் கெஞ்சியதையும் நிராகரித்துவிட்டு..

அவள் அன்பை கண்ணீரில் பார்த்துகொண்டே கதவை தாளிட்டு, கலங்கிய கண்களுடன் டைரியை தேடிப்பிடித்து நேற்றைய அத்தனை எழுத்துகளையும் அடித்து திருத்துவிட்டு, தாளையும் கிழித்து கசக்கி எறிந்தேன். அவள் அன்பில் வலிக்க ஆரம்பித்தது இதயம். எனக்கான சரியான துணை இவள் என்ற நினைவில் உறங்க ஆரம்பித்தேன்.

அதற்குபிறகு மீண்டும் இதே போல் சண்டைகள் முளைப்பதும், கலையப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்தன. இல்லறம் என்பது அடித்தலும் திருத்தலும் கலந்த கலவை என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் அறியத்தொடங்கினேன்.இல்லறம், இல்லத்தரசி என்பவள் சாமான்ய மனிதனையும் சர்வமும் தாங்கும் சரித்திர நாயகனாய் மாற்றுபவள் என்பதை உணர ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு பிறகு….



இன்று எனது மகள் சுவரில் கிறுக்கிக்கொண்டு இருந்தாள். கிறுக்கிகொண்டிருந்த அவளிடம் சுவற்றில் கிறுக்காதே, உள்ள போயி ஏதாவது notebook கிடந்தா எடுத்துவந்து அவற்றில் எழுதிப்பழகு என்றேன்.

சரிப்பா என்றவள் கை நிறைய டைரிகளோடு வந்து நின்றாள். ஒவ்வொன்றாய் விரித்து பார்த்துவிட்டு என்னிடம் முறையிட ஆரம்பித்தாள், ” அப்பா, ஒரு டைரியில் கூட தாளே இல்லை, எல்லாத்தையும் யாரோ கிழிச்சுட்டாங்க போல இருக்கு, நான் எப்படி எழுதி பழகுறது என்றாள்?….”

சிறிய புன்னைகையுடன் மனதில் முனகிக்கொண்டேன், “அப்பா வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டு இருந்தேன், எப்படி கூறுவேன் உன்னிடம், அத்தனை முறை வாழ்க்கையை அப்பா கற்று பழகி இருக்கிறார் என்று.. இன்று காலையிலும் கூட இன்னொரு புதிய டைரியில் எழுதிவைத்துவிட்டு தான் வந்து இருக்கிறேன், “நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்” என.

:) இல்லறம் என்பது புதிதாய் கற்றலே..



Monday, February 10, 2014

எப்பொழுது வருவாய்?….. :(


உன் கரம் பிடித்து சாலையில் நடக்கும்பொழுதெல்லாம் குட்டிக்கதைகளை, கொஞ்சி கொஞ்சி என் மழலை மொழியில் ஊட்டி விடுவாய். கடைவீதி பொம்மைகளை பார்த்து நான் கை நீட்ட முனைகையிலெல்லாம் நாளை வாங்கித்தருகிறேன் என்று கெஞ்சி ஒப்பேற்று விடுவாய்.

எதற்காகவோ அழுது அடம்பிடிக்கும் தருணங்களிலெல்லாம், “செல்லம் நீ அப்படியே அப்பாவின் சாயல் என்பாய்”.அப்பா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அப்பா என்றால் யாரம்மா? என்ற கேள்வியை தொடுக்கும்பொழுதெல்லாம்,ஏனோ மௌனத்தை மட்டுமே தருவாய் பதிலாய்.

என் சொந்தம் நீ மட்டும் என நன்றாய் புரிந்துவிட்டது எனக்கு, இந்த சாலையோர நமது சேலை வீட்டிலிருந்தே… நான் கண்விழிக்கும் பொழுதெல்லாம்,சேலை தலைப்பை எனதருகே வீசிக்கொண்டே, திட்டிக்கொண்டு இருப்பாய்- என்னில் காயம் பதிக்கும் பூச்சிகளையும், ராட்சச கொசுக்களையும்.

பசிக்கிறது என்று எச்சிலை விலுங்கும்பொழுதெல்லாம், இதோ வருகிறேன் செல்லம், அதுவரை சமத்தாய் இருக்கணும் என்று அருகில் இருக்கும் பேருந்து நிறுத்த சிக்னலை நோக்கி சிட்டு குருவியாய் பறப்பாய்.என்ன செய்வாய் என்று தெரியாது, சில மணி நேரங்களில் பாலும் ரொட்டியுடனும் வந்து, உண்ணு முடிக்கும் வரை என் முகம் பார்த்து மகிழ்வாய்.

இன்றும் அப்படித்தான் காலையிலே கிளம்பிவிட்டாய், இன்னும் உன்னைக்காண முடியவில்லை.குடலைத்தின்னும் பசி மறைந்து விட்டது எப்பொழுதோ. எத்தனையோ நாட்களில் என் முகம் பார்த்து நீ பசியாறி இருப்பாய், இன்று எனது முறையாய் இருந்துவிட்டு போகட்டும். உன்னைக்காணும் ஏக்கத்தில் காத்திருக்கிறேன் அம்மா. சீக்கிரம் வந்துவிடு பயமாய் இருக்கிறது…

எப்பொழுது வருவாய்?…

இடம்: அரசு மருத்துவமணை,பிணவறை.

“யோவ் மருதமுத்து, சாப்பிட்டுட்டு வரேன், அதுவரைக்கும் பாத்துக்கையா இந்த பிணத்தை, சிக்னல்ல அடிபட்டு முடிஞ்சுருச்சு, இங்க தான் கிடக்கு காலைல இருந்து, ஒருத்தரும் வருல,எதோ அனாதை போல இருக்கு, “.



Thursday, February 6, 2014

நட்பிற்கும் காதலிற்கும்…



ஒவ்வொரு மனிதனையும் சில இனம் புரியாத உறவுகளும், உணர்வுகளும் கடந்து சென்றிருக்கும். இன்னதென்று அறிவதற்குள் மின்னலாய் மறைந்திருக்கும் நம்முள் காயத்தை பதித்துவிட்டு. காயங்களும், தழும்புகளும் நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவ்வப்பொழுது நம்மில் வந்து போவதுண்டு அந்த அழகிய நினைவுகள்.

இயற்கையில் பெண்ணும் ஆணும் கவரப்பட வேண்டும், இணைதல் நடைபெற வேண்டும், இனம் தழைக்க வேண்டும் என்ற காரணத்தினாலோ என்னவோ ஆணைக்கானும் தருணத்தில் பெண்ணுள்ளும், பென்னைக்கானும் தருணத்தில் ஆணுள்ளும் சில வேதியியல் மாற்றம் அரங்கேற இயற்கை வழி செய்திருக்கிறது. ஆனால் அந்த மாற்றத்தை எதுவரை கொண்டு செல்ல வேண்டும் என்பது அதன் ஆணையும் பெண்ணையும் பொறுத்தே என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

புதிதாய், நிறுவனத்தில் சேர்ந்து சில நாட்கள் தான் இருக்கும். ஒரு இரண்டு நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்தாள் அவள்.அவள் என்பதை விட அவுங்க என்று மரியாதையாய் சொல்லுமளவிற்கு அமைதியான நடை உடை பாவனைகள். கடந்து போகையில் திரும்ப நினைக்கும் மனதை சில நாட்கள் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடிந்தது. பெண் என்பவளிற்கு மட்டும் ஏனோ அத்தனை பெரிய சக்திகளை கொடுத்து இருக்கிறது இயற்கை என்று எனக்குள் பலமுறை கேள்விகள் கேட்டு இருக்கிறேன்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், என்னையும் நகரவைத்தது இயற்கை, அவளருகே. ஹலோ என்றதில் ஆரம்பித்தது. என்ன இன்னைக்கு நேரத்திலே வந்துட்டீங்க என்ற சாங்கிய சம்பிரதாய வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு மெதுவாய் வளர்ந்தது. சில உதவிகள், சில தியாகங்கள், நட்பு என்ற வட்டத்தில் கொண்டு வந்துவிட்டது எங்களை.

அத்தனை அழகாய் உதவினாள் எதிர்பார்ப்பு இல்லாமல். இதே உதவியை தான் என் ஆண் நண்பனும் ஆயிரம் தருணங்களில் கொடுத்து இருப்பான். உணர்வுகள் வேறாய் இருந்தது. பிரித்தறிய தடுமாறினேன், எங்கோ கொண்டு சென்றுவிடும் என்பதின் பயத்தினாலோ என்னவோ, ஒவ்வொருமுறையும் நட்பு என்ற வட்டத்தை சரிபார்த்துகொண்டே இருந்தேன். நாட்கள் நகர ஆரம்பித்த நேரங்களில் ஒவ்வொரு உதவிகளும், தியாகங்களும் இன்னும் அழுத்தமாய் எதோ ஒரு உரிமையுடன்.

திடீரென ஒருநாள்,டெல்லிக்கு மாற்றலாகி போகிறோம் என்றாள்.எதற்காக, என்ன ஆச்சு என்ற கேள்விக்கு, பதிலாய் சில அலுவலக பிரச்சனைகளால என்றாள்.எப்போ?, என நான் முடிப்பதற்குள்,நாளை முதல் வர மாட்டேன், வேலைய விடுறதா முடிவுபண்ணிட்டேன் என்றாள். சரி என்று தலையாட்டிவிட்டு, திரும்பிக்கொண்டு எனக்குள் விசாரிக்க தொடங்கினேன். ஏதோ இனம் புரியாத பிரிவை உணர்ந்த உள்ளத்தில் சில கேள்விகளை வைத்து தெளிவாக்கிக்கொள்ள தொடங்கினேன். நிச்சயம் காதல் இல்லை என்னுள். உணர்வுகளைத்தாண்டி உடல்களும் ஒன்றாகும் நிலையை எதிர்பார்த்தது இல்லை அவளிடத்தில் எப்பொழுதும்.

காதல் என்பது உணர்வுகளை தாண்டி, உடல்கள் இணைய சம்மதிக்க தயாராகும் நிலையின் ஆரம்பம் என்று நன்றாய் தெரியும். உன்னிலும் என்னிலும் பேதம் இல்லை. என்னில் உள்ள உன்னை உயிராய் நேசிக்கிறேன், உன்னில் உள்ள என்னை உயிராய் நேசிப்பாய் என்ற அசைக்கமுடியாத ஒரு உன்னத நிலை தான் காதல்.இந்த உன்னத நிலையின் அடுத்த கட்டம் என்பதை விட, மிக நெருங்கிய நிலை என்றே அழுத்தமாய் சொல்ல முடியும் அதுவே உணர்வுகளோடு உடலையும் தந்துவிடும் கடைசி நிலை.

நட்பை தாண்டி விட்டேன் என்று சரியாகச்சொல்லமுடியும். காதலை தொடவில்லை, தொடவிரும்பியதில்லை என்று சத்தியமாய் சொல்ல முடியும்.

உணர்வுகளை மட்டும் பரிமாறும் நட்புநிலைக்கும், உயிருடன் உடலையும் பரிமாறிக்கொள்ளும் காதல் நிலைக்கும் நடுவில், பெயரே சூட்டப்படாத, இன்னதென்று அறியாத, அறியமுடியாத அழகிய நிலை ஒன்று இருப்பதாய் உணர்கிறேன்.



Wednesday, February 5, 2014

கதவு எண் 8/242, கண்ணகி தெரு..


இதயம் பாதித்த நிகழ்வுகளை பகிர்தலின் ஊடே சில கேள்விகளை சமுதாயத்தை நோக்கி ஆணித்தரமாய் அறைந்துவிடுதல் போல் கேட்டுவிடுவதில் ஒரு ஆத்ம திருப்தி. அதைத்தான் எழுத்தால் பதிய முற்படுகிறேன்..

பள்ளியறை தின்றது போக மீதமான நேரங்களில், விளையாடுவதில் அத்தனை ஆர்வம் தெரியும் எனது சக பள்ளிகூட நண்பர்களின் கண்களில், என்னையும் சேர்த்து தான். அவசர அவசரமாய் வீடுவந்து புத்தக்கப்பை எனும் பாவச்சுமையை தூக்கிஎரிவதில் அத்தனை சுகம்.அடுத்த கணம் எதையாவது உண்டுவிட்டு ஓட ஆரம்பிப்போம். நண்பர்கள் ஒன்று சேரும் தருணத்தை அனுபவிக்க ஊர் முற்றத்து கோவிலும் கூட காத்திருக்கும் எங்களுக்காய், ஏன் சில நேரங்களில் கடவுளும் காத்திருந்தது உண்டு பிஞ்சுகுழந்தைகளின் கபடமற்ற உரையாடல்களை கேட்க.

அவன் வந்துட்டான?, இவன் வந்துவிட்டான?, அமுதா வந்துவிட்டாளா?,, தேவி வந்துவிட்டாள?. என்ற எண்ணிக்கை சத்தத்திற்கு பிறகு ஒரு அமைதி நிலவும். சரி இவன் எல்லாம் என் பக்கம், அவன் எல்லாம் உன் பக்கம் என்று பாகபிரிவினை நடக்கும் போதே, கட்டி உருண்டு கொண்டு இருப்பான் சில பேரு, நான் அவன் பக்க போக மாட்டேன், உன் பக்கம் வரேன் அப்டின்னு..ஒவ்வொன்னா சமாதானப்படுத்தி விளையாட்ட ஆரம்பிப்பதற்குள்ள கடவுளே confuse ஆகிடுவாரு(பாவம் அவரே confuse ஆகிட்டாரு).

ஆட்டம் ஆரம்பிக்கும், ஆட்டத்தோட பேரு திருடன் போலீஸ்..சரி நீங்க எல்லாம் போயி ஒளிஞ்சுக்குங்க அப்டின்னு தலைவன்கிட்ட இருந்து அனுமதி கிடைத்ததும் சிட்டாய் பறப்போம்.அவ்வப்போது கடவுளும் கெஞ்சியதுண்டு என நினைக்கிறேன்,திருடனாய் இருக்க. அது என்னமோ தெரியல கடவுளோட கெஞ்சல் கடைசி வரைக்கும் எங்க காதுல விழவே இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு போலீஸ் நகர ஆரம்பிக்கும் தேடலை தொடங்க. கிட்டத்தட்ட ஆறேழு தெருக்கலையெல்லாம் தாண்டியும் கூட சில நேரங்களில் இந்த தேடலும், மறைதலும் நடக்கும்.

கொஞ்ச நேரத்துல ஏதாவது ஒரு நண்பனோட அம்மா இப்படி கத்துவாங்க ” கண்ணகி தெரு” பக்கம் போகாம விளையாடு, மீறி போன அப்டினா காலுக்கு சூடு வைச்சிடுவோம் அப்டிங்கற எச்சரிக்கை மணி கேட்டுகொண்டே இருக்கும் சில நேரம் தேவி அம்மாவிடம் இருந்து, சில நேரம் கார்த்திக் அம்மாவிடம் இருந்து.. மணி ஒலிக்கும் திசை வேறாக இருக்கலாம் அவ்வப்பொழுது, ஆனால் ஒலித்துகொண்டே தான் இருக்கும் இந்த எச்சரிக்கை மணி.

துரத்தலில் சில சமயம் இந்த நிகழ்வு நடந்து விடுவதுண்டு, கண்ணகி தெருப்பக்கம் போகும் சூழ்நிலை அதுவும் கதவு எண் 8/242 ல் ஒளிந்துவிடும் சந்தர்ப்பம். அவ்வளவு தான் அடுத்த ஒருவாரத்துக்கு அந்த நண்பன் விளையாட்டுல இருக்க மாட்டான், கால் காயத்தோடு வீட்டில் அமர்ந்திருப்பான் ஏனென்றால் அம்மாவின் கரத்தில் இருக்கவேண்டிய தோசை திலுப்பி, இவன் காலில் பதிந்து இருக்கும் அத்தனை சூட்டோடு…

எங்களை பொருத்தவரை அபாயகரமானபகுதி அந்த தெருவும், அந்த வீடும், அவ்வளவு தான் தெரியும் அப்பொழுது. காரணங்கள் புரிய சில வருடங்கள் பிடித்தன. யமுனா என்பது அவளது பெயர், அவளது ரத்தத்தோடு தொடர்புற்ற உறவினர்கள் யாரும் இல்லை அவளது வீட்டிற்கு அண்மையில். கூடப்பொறந்த சாதிசனமும் பக்கத்துல இல்லை அவளுக்கு. நன்மையையும் தீமையையும் எடுத்துசொல்ல, உதவுவதற்கு. தனியாய் பயணித்து வந்து இருக்கிறாள் இந்த கண்ணகி தெருவிற்கு எப்படியோ, என்ன கனவோடு வந்தாளோ தெரியாது. ஆனால் அவளுக்காய் எழுதிய தீர்ப்பும் விதியும் ஒன்றே, அது கேட்க நாதியற்று போக வேண்டும் இவள் என்ற கொடூரமான வரமே.

தனது காதலன் ராமனாய் இருப்பான் என்றொரு எண்ணத்தில் தன் சொந்த வனத்தை விட்டே, பல ஊர்களை தாவ்வி இருக்கிறாள் இவனோடு. இவளும் சேர்ந்தே பயணித்து இருக்கிறாள்,ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள் என்ற கணக்கில் வாழும் மனித மிருகத்தின் கோரப்பற்களில் பிடிபட்டு இருக்கிறோம் என்று தெரியாமல். கடைசியாய் அந்த மிருகம் உமிழ்ந்து விட்டு போன இடம் தான் இந்த கண்ணகி தெரு,கதவு எண் 8/242.

ஒற்றைக் குழந்தையை கையில் வைத்துகொண்டு தனியாய் நின்றாள், போராடினாள். கரம் கொடுப்பதாய் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து உதிர்த்து ஒவ்வொரு மிருகமாய் கடந்து போயிருக்கிறது அவளது உணர்வுகளை கொன்று உச்சத்தை அடைந்துகொண்டு. கடைசியில் இவளுக்கு கிடைத்த பட்டம் மட்டுமே மிச்சம். கிடக்கும் உடலின் உள்ளம் அறியாமல், உணர்வு அறியாமல் உறவுகொண்டு உச்சம் பெற்றதில் கொளுத்து திமிர்த்துப்போன இவர்களுக்கு பெயர் பெரியமனிதன், தூய்மை அரசியல்வாதி.,இவளுக்கு பெயரோ ஒழுக்கம் கெட்டவள், தே…., வே..,

பார்த்துகொண்டிருக்கும் என் சமூகத்திற்கு ரத்தம் கொதித்தல்லவா இருந்திருக்க வேண்டும்,உதவி அல்லவா செய்து இருக்கவேண்டும்.. நீ இங்க இருந்தா ஊர் கேட்டு போய்டும், வீட்டை காலி பண்ணு என்று கூறியவர்களிடம் எல்லாம் வருத்தம் தேய்ந்த முகத்துடனே கூறி இருக்கிறாள்,” நான் மட்டும் என்ன விருப்பத்துடனா செய்கிறேன், இந்த ஊரு பெரிய மனுசக தான் சொல்றாங்க எங்க போனாலும் கொன்னுபுடுவேன்னு”. , எப்படியோ மூட்டை கட்டி எறிந்துவிட்டனர் அவளை மீள முடியா பாதாளத்தில். எப்படியாவது எழுந்து இருப்பாள் ஒரே ஒரு ராமன் கிடைத்து இருந்தால்..கிடைக்க வாய்ப்பில்லை என்ற போதும் காத்திருந்தாள்…என்ன சொல்ல, ராமனுக்கு அங்கு என்ன வேலை?…

ஒரு வாரத்திற்கு முன்பு சென்று இருந்தேன் சொந்த ஊருக்கு.ஏதோ உரையாடலுக்கு நடுவே என் அம்மா கூறினாங்க. யமுனா இறந்துவிட்டாள், பிணத்தை யாரும் நெருங்க கூட இல்ல. அப்புறம் யாரோ போலீஸ்கு சொல்லி அவுங்க தான் வந்து தூக்கிட்டு போனாங்க.,பாவம் செய்தா இப்படி தான் தொட கூட எவனும் வரமாட்டான், சரி அது எதுக்கு நமக்கு ?.,நீ கிளம்பு ஊருக்கு, நேரம் ஆகிடுச்சு என்று கூறி முடித்துவிட்டு அடுத்த வேலைய பார்க்க சென்ற கணம் கனத்தது இதயம்.

விருப்பமில்லாமல் எடுக்கப்படும் ஒவ்வொரு உரிமையும் கொலைக்கு நிகரானதே.முதல் தேர்வு சரியாக இருந்திருந்தால் முற்றும் மாறியிருக்கும்.என்ன செய்ய?.நிச்சயம் பாதுகாத்து வைத்திருந்திருப்பாள் கற்பை, கடைசிவரை ஒரே ஒரு ராமனுக்காய்…

வேகமாய் பேருந்தை பிடிக்க செல்கிறேன், சட்டென கண்ணில் படுகிறது அந்த தெருவின் பெயர் பலகை..”கண்ணகி தெரு”.