Saturday, May 29, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- பாகம் 1



படித்த கடனை அடைக்க பட்டணம் கிளம்பிய எனக்கு தெரியாது நான்
உலகத்தை இனி தான் படிக்க போகிறேன் என்று ,

திருவல்லிக்கேணியில் ஒருஅறை எடுத்து இருக்கிறேன், வந்துவிடு என்று நண்பன் சொன்னதும் முதல்முறையாக தனியாக வருகிறேன்
சென்னைக்கு,சென்னை புறநகர் பேருந்து நிலையம் கண்டதும் உலகம் பெரியது என்று தோன்றியது.

அங்கே இருந்து கலைவாணர் அரங்கம் பேருந்துநிறுத்தத்தில் இறங்கி சுறுசுறுப்பா வேகமா ஓடுற மனுசங்கள பார்த்தேன், வலிச்சுது அட சுறுசுறுப்பா வேகமா ஓடுற மனுசங்கள பார்த்து இல்லை,உடுத்த கொண்டு வந்த உடைகளைவிட படிக்க கொண்டு வந்த புத்தகங்களோட சுமை அதிகமா இருந்துச்சு அதனால.

குறுகிய படிகட்டுல ஆரம்பிச்சுது வழி,ஏறிக்கிட்டே இருக்கேன் கடைசியில் பார்த்த தொடங்கினதும் முடிஞ்சுடுச்சு அறை, குளிக்க குளிக்க வியர்க்குற குளியலறை அங்க தான் பார்த்தேன்.

சரி குளிச்சுட்டு சாப்பிடப்போன, தள்ளு வண்டீல அடிமாட்டு விலைக்கு விக்குறாங்க , அட நாற்காலி போட்டு உட்கார்ந்து கடைல சாப்பிட்டா ஒரு மாசத்துக்கு செலவுக்கு வைச்சுக்க அப்டின்னு அப்பா கொடுத்த காசு ஒருநாலுல தீர்ந்துடும் போல இருந்துச்சு , அதுக்காக குறைச்சு, தள்ளுவண்டில சாப்பிட பழகிக்கிட்டேன்.

சாப்பிடற நேரம் போக,புத்தகங்கள்(சி,சி++,ஜாவா, )தான் என்கூட பேசிகிட்டே இருக்கும்,சீக்கிரம் வேலை வாங்கணும் அப்டிங்கற கனவு பகலிலும் வரும்,நான் என்னை அறியாம உறங்கிபோன பகல் நேரங்களில். செய்தித்தாள்களும்,வேலைவாய்ப்பு இணையதளங்களும் தேய்ந்து போயின தேடி தேடி..

எப்படியாவது ஒரு நேர்முகத் தேர்வு நாளை இருப்பதை கண்டுபிடித்துவிடுவேன், இன்று இரவு உறங்காமல் படித்துகொண்டு இருப்பேன் பகல் கனவை நிஜமாக்க..விடிந்துவிடும், காலை 10 மணிக்கு இருக்கும் நேர்முகதேர்விற்கு 5 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு , புறப்பட்டு கண்ணாடி முன் நிற்கும் போது தான் மனசு தோத்துபோக முயற்சிக்கும்,

குழிவிழுந்த கன்னம், எழும்பும் சதையும் தோழர்களாய் சேர்ந்து ஒட்டி இருக்கும், அளவு அதிகமாக இருக்கும் மேலாடை, இடுப்புப்பட்டையால் இருக்கமாய் கட்டி இருக்கும் கீழாடை,காலணிபூச்சு போடப்படாத காலணி இவைகளை பார்த்து. திறமை இருக்கு தைரியமாய்இரு என்று சொல்லும். பேருந்தில் ஏறும்போது இருந்த மேலாடையின் நிறம், இறங்கும்போது வேறாக இருக்கும். குறைந்தது 20 பேரிடமாவது திட்டு வாங்கிக்கொண்டு தான் நேர்முகத்தேர்வு இடத்தை அடைவேன்.

அடைந்ததும் என்ன நடக்கும் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்..

காத்திருக்கவும் கணத்தோடு....



இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -

இரண்டாம் பாகம்




                                                                                         
                                             

Thursday, May 20, 2010

இறைவன் நிஜமாய் அங்கில்லை...




இறைவன் எழுதிய கவிதையில் எழுத்துப்பிளைகளாய்
நாங்கள்,இன்னும் திருத்தப்படாமலே வாசிக்கப்பட்டுகொண்டு
இருக்கிறோம்.எங்களை திருத்த மனிதஇறைவன்கள் நீங்கள் போதும்,

சாலையோரம், புகைவண்டி நடைபாதையோரம்,கோவில்
முற்றத்தோரம்,இன்னும் எங்கெல்லாம் மனிதஇறைவன்கள்
நடமாடுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள்,

கேட்கவேண்டிய கேள்விகள் ஏராளம்,விடையில்லா இறைவனிடம்

காவல் காப்பதற்கு, காவலர்கள்,
உடல் காப்பதற்கு, மருத்துவர்கள்
.
.
.
பிச்சைஎடுப்பதற்கு, ஊனமுற்ற நாங்களா?


உங்கள் முன் கையேந்தி கோவில்முன் நிற்கும்பொழுது
கண்ணீரோடு சொல்லிக்கொள்ள முயல்வதெல்லாம் ஒன்றே
ஒன்று தான்.......

"இறைவன் நிஜமாய் அங்கில்லை"

மனித இறைவங்களே பிச்சைஇடுவதிற்கு பதிலாய் ,
உங்கள் உதவிக்கரங்களை ஒருமுறை எங்களை நோக்கி
நீட்டுங்கள், நிச்சயம் ஒருநாள்

"எழுந்து நின்று வணக்கம் வைப்போம்"....



                                                                                         
                                             

Friday, May 14, 2010

என் முதல் பயணம்....






என் முதல் முகவரி உன்கருவறை ,அவ்விடமிருந்து உன் முகம்காண நான் முண்டியடித்து செய்த பயணத்தில் உன்னை காயம் செய்து இருக்கிறேன்,அதற்காக அன்றே அழுது இருக்கிறேன் அம்மா...



                                                                                         
                                             

Tuesday, May 4, 2010

நானும் இரக்கமற்றவன் தான்....



தெரிந்தோ தெரியாமலோ, முடிந்தோ முடியாமலோ,
சாலையோரம் நின்று பிச்சைக்கேட்கும் முதல் சிறுவனோ, முதல் மூதாட்டியோ மட்டுமே என்னிடம் இருந்து கருணை பெறமுடிகிறது,அதற்கு பிறகுவரும் அணைத்து உதவிகேட்போருக்கும் நானும் இரக்கமற்றவன் தான்....


எங்கே உண்கிறார்கள், எங்கே உறங்குகிறார்கள் என்ற இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விடை தேடதோன்றும்,ஆனால் விடை தேட முயற்சித்ததில்லை,நான் கொடுக்கும் ஒரு ரூபாய் நிச்சயம் இதற்கு ஒரு தீர்வாய் இருக்காது, இவர்களுக்கான ஒரு முழுமையான தீர்வை நான் கொடுக்கும்வரை

நானும் இரக்கமற்றவன் தான்....