Sunday, May 11, 2014

உன் உதிரம் உதிர்ந்து வளர்ந்ததடி...






கால் கொலுசணிந்து சென்றே தீர வேண்டும் பள்ளிக்கு, என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில்,காலில் செருப்பில்லாமல் முட்கள் தைக்கும் கருவாலங்காட்டின் பாதை வழியே பள்ளிக்கு பயணித்த உன் கால்கள், தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா ,அத்தை, இப்படி அனைத்து உறவையும் பட்டினியில் இருந்து காக்க, வழி மாறி பருத்தி எடுக்க, கலை பறிக்க, கல்சுமக்க, மண்சுமக்க பயணித்தது உன் பதின் வயது ஆரம்பித்திலயே. பாவம் அத்தனையும் சுமந்து,சற்று நிமிர்த்தி போட்டாய் குடும்பத்தை கம்பீரமாய். இவள் பெண் அல்ல பெரும்தீ என்றுரைக்க எறிந்தாய் கொழுந்தாய்.


அத்தனை இன்னல்களை அடித்து நொறுக்கி கண் அயர நேரமில்லை உனக்கு., காதல் கொண்டாடும் பருவத்தில் கரை சேர்த்தாய் அத்தனை உறவையும் கம்பீரமாய் நின்று, ஊருக்கு ஒரு  பெண் வேண்டும் இவள் போல் குலம்காத்திட,எதிரியும் பிரார்த்திக்கும் வரம் காதில் விழும் இவள் போல் ஒரு மகள் வேண்டுமென. தலை நிமிர்ந்த குடும்பம் உன் சேவை இதுவரை போதும் என்று நிறுத்த, புருவம் உயர்த்தி காரணம் கேட்க., வயசுக்கு வந்த புள்ளைய கண்ணாலம் கட்டிகொடுக்க வேண்டாமா கால காலத்துல என் பதில் வர., பாவமாய் உன் விழி பெருக்கெடுத்து ஓடி,களைப்பாற என்னுகையிலே கழுத்தில தாலி ஏறியது..


குடை சாய்ந்து கிடக்குற குடும்பத்த நீ தான் காப்பாத்தனும்னு உன் காதில் யாரோ ஊதி விட்டார்கள்., உனக்கிது புதிதில்லை., தீயாய் எறிந்தவள் அல்லவா நீ, இந்த கானல் காற்று மண் உன்னை என்ன செய்துவிடும்?.உன்னை நம்பி குடும்பம் என ஒரு நிமிடம் உணர்ந்து, நேரம் காலமற்று காடே கதியாய், வயலே வாழ்க்கையாய், உன் உதிரம் உதிர்ந்து வளர்ந்ததடி அத்தனை பயிரும்.,பிறகென்ன வாழ்க்கையின் அருமை அறியா விளையாட்டுப்பிளையாய் சுற்றித்திரிந்த கணவனையும் சேர்த்தே சுமந்துகொண்டு, வேங்கையாய் போராடினாய் தனியாய் தாகம் தீரும் வரை, இந்த வாழ்க்கை உன்கைக்கு வரும் வரை.,


ஒருசுமை போதாது உனக்கு, இன்னும் இரண்டு சுமை தருகிறேன் என்ன செய்கிறாய் பார்ப்போம் என்ற இயற்கை பரீட்சைக்கு, புத்தகம் புரட்டாமல் முதல் மதிப்பெண் வாங்கினாய் சர்வ சாதரணமாய்., இரண்டு சுமைகளையும் இருகரம் பிடித்து ரௌத்திரம் கற்று கொடுத்தாய் உன் வாழ்க்கையிலிருந்தே, இது தான் உலகம், இந்த காட்டாற்று வெள்ளத்தில் தான் நீங்கள் நீச்சல் பழகியே தீரவேண்டும் என தூக்கி ஏறிய.,தண்ணீர் குடித்துக்கொண்டே ஒரு புள்ளை தாங்கிப்பிடிக்க.,இவன் மீதேறி இன்னொரு பிள்ளை நீச்சல் கற்க., கம்பீரமாய் கரை சேர இருபிள்ளையும், அசாதாரணமாய்,அவ்வளவு தான் உலகம் வா, என்று கரம் பிடித்து  அழைத்து சென்றாய்..


சுமைகலென்று இயற்கை கொடுத்த இன்னல்களை சுக்குநூறாய் உடைத்தெறிந்து, எதிரியும் பெருமூச்சு விடும் இடத்திற்கு தூக்கிபிடித்தாய் உன் இரண்டு செல்வங்களான என்னையும்,உன் அச்சில் முழுமையாய் வளர்ந்த, பயமறியா குட்டிவேங்கையாய் என் தம்பியையும்., பக்கத்து நகரத்தை தாண்ட பயம்கொள்ளும் கிராமத்து கூட்டத்துக்கு நடுவே, படிக்க பல மைல் தூரம் வழியனுப்பி பெருமிதம் கொள்ளும் வேளையில்., படிக்க இம்புட்டு தூரம் போறானுக, கெட்டுப் போயிடபோறாங்க பார்த்து, சூதனமா ஏதாவது சொல்லி அனுப்பு என்ற ஊர் பெரியவர்களிடம், அவுங்க என் வளர்ப்பு, தடம் மாறுறவங்க இல்ல என் புள்ளைக, தடம் உருவாக்குறவங்க என்று ஒற்றை புன்னகையை பதிலாய் எ(ரி)றிந்தவள்.


இருபுள்ளையையும் ஆளாக்கிவிட்டு, கண்ணயர்ந்து இளைப்பாறுவாய் என்று இயற்கையும் நாங்களும், காத்திருக்க., உன் உடல் மட்டும் ஏனோ இன்னும் உன் உழைப்பில் மட்டுமே வாழ ஏங்குகிறது, விடை தேடி விடை தேடி சலித்து போய்விட்டேன் அம்மா.,கண் துடித்து வெடிக்கும் கோபம் என்னில் பலமுறை வந்துபோய்விட்டது தேடிய கேள்விக்கு விடைகிடைக்காமல்..பிறகென்ன வாழ்க்கையின் முதல் பாதியும், பிற்பாதியும் தேய்ந்தே போய்விட்டது, என்ன கொடுத்தால் எங்கள் நிழலில் ஓய்வெடுக்க சம்மதிப்பாய்.,இன்னும் எத்தனை நாட்கள் தான் பெரும்தீயாய் எரிந்துகொண்டிருப்பாய், என் காலில் நிற்கவேண்டும் என்று அடம்பிடித்து.,சூரியனையும் தோற்கடிப்பாய் நீ வாழும் வரை, வாழ்ந்த பின்பும்.


பிஞ்சிலே ரௌத்திரம் பழகிய உன் நெஞ்சம், உன் உழைப்பிலே வாழ்ந்து முடிக்க மட்டுமே பெருமித கர்வம் கொள்ள விரும்பும் என்று தெரிந்தும், மீண்டும் ஒருமுறை கேட்கிறேன் அன்னையே, என்ன கொடுத்தால் எங்கள் நிழலில் இளைப்பாற சம்மதிப்பாய்?. நமக்குள், அன்னையர் தின வாழ்த்துக்கள் எல்லாம் பரிமாறி மகிழ்ந்த பழக்கம் இல்லை இதுவரை., நீயும் எதிர்பார்த்ததுமில்லை., நான் நல்லா இருக்கிறேன் அம்மா என்ற ஒற்றை அழைப்பேசி வார்த்தையில் உச்சி குளிர்ந்து, "நல்லா இரு குமாரு" என்று அத்தனை சந்தோசப்புன்னகையில் நீ வாழ்த்த, நான் மகிழ., உன் அத்தனை உழைப்பும் உயிர்பெறுகிறது, தியாகம் என்றால் உன்னை தவிர வேறு யார் என்ற கம்பீரத்துடன்...

Wednesday, May 7, 2014

முதல் கணை….


ஏறக்குறைய ஒரு மாதங்களாய் உங்கள் உணர்வுகளை, எழுத்தின் மூலம் தொடமுடியாமல் திணறிவிட்டேன், சில தவிர்க்க இயலாத அலுவலக மற்றும் சொந்த வேலைகளின் நிமித்தம், இன்னும் சிற்சில காரணங்களால். மன்னிக்க கோரிவிட்டு ஆரம்பிக்கிறேன்  இந்த பதிவை.

நாள் 23 – ஏப்ரல் மாதம் 2014., அலுவலக பணிகளை கொஞ்சம் வேகமாக முடித்துவிட்டு, கிட்டத்தட்ட 8 மணிக்கெல்லாம் சிறுசேரியிலிருந்து பேருந்தை பிடித்தேன் கேளம்பாக்கத்திற்கு. எப்படியோ ஆடி அசைந்து செல்வதற்குள் மணி 8.30 ஐ தொட்டது. நேரம் ஆகிவிட்டதே என்ற படபடப்புடன் பெருங்களத்தூர் பேருந்தை பிடித்தேன் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தே தீர வேண்டும் என்ற ஆசையுடனும், கர்வத்துடனும். கேளம்பாக்கத்தில் கிளம்பிய பேருந்து அத்தனை நளினத்துடன் ஊர்ந்து செல்ல செல்ல, பெருங்களத்தூர் என்பது அயல் நாட்டில் இருப்பதை போல் உணர்ந்தேன். எப்படியோ 10 மணிக்கு  பெருங்களத்தூர் சென்ற எனக்கு அத்தனை அதிர்ச்சி காத்திருந்தது.

நாட்டின் நலனில் அக்கறை இருக்கும் சிலரில் நானும் ஒருவன், சுயஉரிமையை நிறைவேற்றுவதில் தான் சரியாக இருப்பதாய் என்னில் என்னுள் காலரை தூக்கிவிட்டு கொண்டிருந்த கர்வம், சடீரென கைகளை கட்டிக்கொண்டு சொல்லுங்க சாமி எனும் தோரணையில் சப்தமும் அடங்கிப்போயிருந்தது பெருங்களத்தூரில் இறங்கி அங்கிருந்தவர்களை கண்டவுடன். கிட்டத்தட்ட 8 வருடங்கள் சென்னையில் குப்பைகொட்டி இருக்கிறேன், அதீத நாட்களில் முன்பதிவு செய்யாமலே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அடிச்சு புடிச்சு சேலம் பேருந்தை பிடித்து இருக்கிறேன்.இத்தனை கூட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை தீபாவளி பொங்கல் திருவிழா நாட்களில் கூட.

அன்று பெருங்களத்தூர் சென்ற அனைவரும் நிச்சயம் அறிந்து இருப்பார்கள் அத்தனையையும். மூட்டை தூக்குற மனிதர்களில் ஆரம்பித்து, கட்டிட தொழிலாளி, அலுவலக தொழிலாளி, கணினி துறை சேர்ந்தவர்கள் வரை அத்தனை மனிதர்களையும் நிற்க கூட இடமில்லாமல் பேருந்திற்காக காத்திருப்பவர்களையும், ஏற்கனவே ஊர்ந்து வரும் பேருந்துகளில் ஈக்களை போன்று தொங்கிக்கொண்டுசெல்லும் மனிதர்களையும் பார்த்து என்ன செய்வதென்று தெரியாது திகைத்தே விட்டேன் ஒரு சில நிமிடங்கள்.

“அட நான்கு நாள் லீவ் போட்டுட்டு ஊர பார்க்க கிளம்பிட்டாங்க ஓட்டு போடுற சாக்குல”, “அட ஓட்டுக்கு ஏதாவது துட்டு வாங்கி இருப்பானுங்க அதுக்காக போறானுங்க”, என்றெல்லாம் கூட்ட நெரிசலில் மனிதர்கள் புலம்பும் வார்த்தைகள் காதுகளில் விழுந்தாலும், அவற்றை ஓரளவிற்கு தான் என்னால் ஏற்று கொள்ள முடிந்தது.,

பிறகென்ன, காரணம் எதுவாகவும் இருக்கட்டும் தவறில்லை, ஓட்டிற்கு காசே வாங்கி இருக்கட்டும், நாலு நாலு லீவு என்பதற்காகவே இருக்கட்டும், இன்னும் ஏதேதோ காரணமாகவே இருக்கட்டும், இத்தனை கூட்டத்தை பார்த்த பின்பும் ஏதோ காரணத்திற்காவது, பின்வாங்காமல் தனது கடமையை ஆற்றிவிட வேண்டும் என்ற இந்த மனிதர்களின் பிடிவாதம் அத்தனை அழகு.

எச்சிலை விழுங்கிக்கொண்டு, சரி ஏதாவது சாப்பிட்டுவிட்டு மெதுவா பேருந்தை பிடிப்போம். இவ்ளோ கூட்டம் கொஞ்சமாவது குறையும் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என்று உணவு விடுதியை நோட்டமிட, பயமே வந்துவிட்டது, இன்னைக்கு பட்டினி தான் போல இருக்கு என.., வெளிய நிக்குற கூட்டத்த விட, ஹோட்டல்குள்ள நிக்குற கூட்டம் தான் அதிகம்., எப்படியோ ஒரு சிலநிமிடம் வரிசையில் நின்று, எப்படியோ அடித்து பிடித்து இடம் பிடித்து அமர்ந்து,நமக்கு பிடிச்சத சொல்ல எத்தணிக்கையில், பரிமாறுபவரிடமிருந்து “fried ரைஸ் தான் இருக்கு” என்று பதில் வர, சரி எழுந்தா இதுவும் போய்டும் போல இருக்கு என எதையோ சாப்பிட்டுவிட்டு முடித்து வெளியே வர., அய்யயோ என்று என்னையும் அறியாமல் சொல்லும் அளவிற்கு கூட்டம் இன்னும் அதிகமாகி இருந்தது.

சரி போவோம், இன்னா பண்றது!!!!! என்ற காமெடி வசனத்தை பேசிகிட்டே களத்துல இறங்க ஆரம்பிச்சாச்சு., எப்படியும் அடிச்சு பிடிச்சாவது எறிடனும் என தயாராய் இருந்தாலும், வந்து சேரும் அத்தனை சேலம் பேருந்திலும், படிக்கட்டில் கூட பத்து பேருக்குமேல் நின்று கொண்டிருந்ததை கண்டு கொஞ்சம் ஏமாற்றமே என்னுள். எப்பொழுதும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொஞ்ச நேரம் அல்லது கொஞ்சம் காலம் தாங்கிக்கொண்டு நின்றோமேயானால், வெல்லும் உக்தி மெதுவாய் தென்படும் எத்தகு சூழலிலும் கூட. அப்படி தான் மெதுவாய் சூட்சமம் அறிந்தேன்., மெதுவாய் நிறுத்தத்தை நோக்கி ஊர்ந்து வரும் பேருந்தை, நிறுத்தத்திற்கு வரும் முன்னமே மடக்கினால் ஏறிவிடலாம் என்பதே (பாருங்க மக்களே எப்படி எல்லாம் யோசிக்கிறோம்னு). கிட்டத்தட்ட பேருந்து நிறுத்திற்கு முன்பு நகர்ந்து நகர்ந்து சில கிலோ மீட்டர் முன்பாக நின்று மடக்க ஆரம்பித்தேன் ( மன்னிக்கவும் மடக்க ஆரம்பித்தோம், முன்பின் தெரியாதவர்கள் நண்பர்கள் ஆனோம், சேலம் பேருந்தை பிடித்தே தீரவேண்டும் என்ற ஒற்றை இலக்கில் என்னைப்போல் பல பேர்…)

ஒவ்வொரு பேருந்தாய் மடக்கி விசாரிக்க ஆரம்பித்தோம், “அண்ணா  சீட் இருக்கா என”. இதில் பாரபட்சம் இல்லாமல் அரசு பேருந்தாக இருந்தாலும் சரி, தனியார் பேருந்தாக இருந்தாலும் சரி என. தனியார் பேருந்துகள் ஒரு சீட், இரண்டு சீட் இருப்பதாக கூறுவார்கள், அத்தனை ஆனந்தத்துடன் ஏற முயற்சிக்கையில் “மதுரை தான நீங்க” என்பார். அடப்போங்கப்பா என்று சலித்துக்கொண்டு “இல்லை ” என்போம். கிட்டத்தட்ட நூறுகளை தாண்டி இருக்கும் எண்ணிக்கை, அத்தனை தனியார் பேருந்தும் “மதுரை, மதுரை” என்று மட்டுமே கூவ, அப்பொழுதுதான் புரிந்தது, “மதுரை” ரொம்ப பெரிய ஊரு தான் போல இருக்குடா சாமீ என., ஏன் இந்த வசனம் அடிக்கடி சினிமாக்களில் வருகிறது என, “நானும் மதுரகாரன் தாண்ட”…

கிட்டத்தட்ட நீண்ட நேர போராட்டத்திற்கு பின், அரசு பேருந்து ஒன்றில் ஒரு சீட் இருப்பதாய் கூற, ஏறி உள்ளே சென்றால்., இரண்டு இருக்கைக்கும் நடுவில் நடை பாதையிலும் ஆட்கள் நிற்க, நடத்துனரிடம் கேள்வி கேட்டேன் “எங்க அண்ணா சீட் என?”. இதோ இங்க இருக்குப்பா என ஓட்டுனருக்கு அருகில் இருக்கும்  என்ஞினைக்காட்ட, “என்னனா சொல்றீங்க இதுவா”, இதுமேல எப்டினா 8 மணி நேரம் உட்கார்ந்துகிட்டு போறது என்று கேட்க, இஷ்டம் நான் வா, இல்லைனா இறங்கிக்க என்று கூற, இறங்கிக்குறேன் என கூறிவிட்டு, இறங்க முயற்சிக்கையில். வாங்க பாஸ் இப்டி பாத்தீங்கன்ன வீடு போயி சேர முடியாது என ஒரு குரல் கேட்க, குரல் வந்த திசையை நோக்கி பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கனவே அந்த  என்ஞின் மேல மூணு பேரு உட்கார்ந்து இருக்காங்க, அதுல நாலாவது ஆளுக்கு தான் என்னை கூப்பிட்டிருக்கிறார் அந்த இளைஞன் அக்கறையோடு.

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, உடல் மொழியை கேட்காமல் மனதின் மொழியை கேட்டு அமர்ந்துவிட்டேன். “இன்னைக்கு சிவ ராத்திரி” தான் என உள்ளுள் கூறிவிட்டு அமர்ந்துகொண்டேன். சிறிது நேர பயணத்திற்கு பிறகு ஒவ்வொருவராய் பேச ஆரம்பிக்குறார்கள். ” எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு ஓட்டு போட போறீங்க எல்லாம், நீங்க போடுற ஓட்டுல தான் எல்லாம் மாறப்போகுதா ?, எவன் நல்லவன் சொல்லு, நம்ம சம்பாதிச்சா தான் நமக்கு சாப்பாடு, அதான்  நான் எல்லாம் ஓட்டு போட போகுல சொந்த ஊருக்கு,” என்று சத்தமாய் பேசினார் ஓட்டுனர்.. “அப்படி இல்லைங்க, இவன் சரி இல்ல, அவன் சரி இல்ல அப்டிங்க்ரத சொல்ல நமக்கு ஒரு தகுதி வேணும்ல,நம்ம  கடமைய முடிச்சுபுட்டு, இப்படி கேட்குறதுல ஒரு நியாயம் இருக்கு, முதல்ல கடமையே செய்யாம, இவன் சரி இல்ல, அவன் சரி இல்ல அப்டின்னு சொல்றதுக்கு தகுதியே இல்லாம போகுதுல்ல” என்று பதில் ஒருவரிடம் இருந்து வர., கொஞ்சம் வேகமாய் ஆவேசமாய் பேச ஆரம்பித்தார் ஓட்டுனர். “ஏப்பா, போன தடவை ஓட்டு போட்டேன், ஒன்னும் நடக்கலையே., இதுல என்ன தகுதின்னு கிட்டு, ஓட்டு போட்டா எதுவும் நடக்க போறது இல்ல, அவ்ளோ தான் என்று அவர் முடிக்க”.,

“நாட்டோட கல்வித்தரம் உயர உயர எல்லாம் மாறியே தீரும், மாறும் என்பதே விதி., நாட்டுல நடக்குற ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு சராசரி மனிதனையும் சென்றடைவதில் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி இருக்கிறது, இது முழுமை அடையும் தருணத்தில் நிச்சயம் மாறும் அனைத்தும் .முழுமையாய் மாற கொஞ்ச வருடங்கள் ஆகலாம், அனால் மாறியே தீரும் என்பது நிச்சயம்., கொள்ளையடிக்குற அரசியல் கூட்டம் கூட  தனது கொள்கையை மாற்றியே தீரும், மேலும் இந்த அரசியல் உலகத்தில் தொடர்ந்து பயணிக்க. 

ஜனநாயகத்த ஒருத்தனால எப்பொழுதும் மாற்ற முடியாது என்பது தாங்க யதார்த்தம். எல்லோரும் ஒண்ணா இருந்தா தான் மாத்த முடியும், எல்லோரும் ஒரு நாள் ஒண்ணா மாறுவாங்க அப்போ இந்த ஜனநாயகத்த மாத்துவாங்க., அந்த “எல்லோரும்” அப்டிங்கற  வார்த்தைக்குள்ள தான் நீங்களும் இருக்கீங்க, அத மறக்காம, உங்க கடமைய செய்யுங்க, எதுவும் பிடிக்கலன்னா “நோட்டா” வுக்காவது போட்டுட்டு பெருமையா சொல்லிக்கங்க,சமுதாயத்து மேல எனக்கு அக்கறை இருக்குன்னு, மத்தபடி பேசுறது எல்லாம் வீண் தான்” என்று அழுத்தமாய் அந்த இளைஞன் கூற சிறிது நேரம் அமைதி நிலவியது.

வலுவான, தெளிவான அந்த இளைஞனின் விவாத வார்த்தைகள் மெதுவாய் என்னையும் சேர்த்து, அனைவரின் காதுகளிலும் ஆழப்பதிந்தது. ” நாட்டையே கொள்ளை அடிக்கும் அசகாய சூரனாக இருந்தாலும் சரி, தேசத்தை இரண்டாக்க கனவு காணும் ராட்சசனாக இருந்தாலும் சரி, தெளிவான சிந்தனையோடு, புதுயுக விஞ்ஞான அறிவோடு தயாராகி கொண்டிருக்கும் என் இளைய தலைமுறைக்கு பதில் சொல்லியே தீர வேண்டும், அந்த நாள், சில ஆண்டுகளில் இருந்தாலும் சரி, சில யுகங்கள் தாண்டி இருந்தாலும் சரி, நீங்கள் வீழ்ந்தே தீருவீர்கள் என் தலைமுறைக்கு முன்னால்.,” என்ற நம்பிக்கை எனது பயண வலியை மெதுவாய் மறைக்க ஆரம்பித்தது…..

Wednesday, April 16, 2014

பெண்மை யாதெனில்…….


எதோ விளையாட்டாய் ஒற்றை வரிக்காதல் கவிதைகளை எழுதிவிட்டு காலரை தூக்கிவிட்டு பெருமைப்பட்ட காலம் கடந்து, யதார்த்தத்தையும், உண்மையையும், உணர்வுகளையும் எழுதி ஆத்ம திருப்தியடையும் காலத்தை நெருங்கிகொண்டு இருக்கிறேன்.தேவா எனும் மிகச்சிறந்த எழுத்தாளர், நான் சென்றடைய வேண்டிய பாதையை காட்டியதுடன், என்னை தம்பி எனும் அழகிய உறவில் இணைத்து,உயர்த்தி பிடித்து, உலகை உற்றுநோக்க வைத்தார் எழுத்து எனும் கண்கள் மூலம்.
 
எழுத தொடங்கிய சில மாதங்களிலேயே ஏதேதோ வேலைப்பளுவின் நிமித்தம், சிறிது சிறிதாய் எழுத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். எனது வலைத்தளம் சக எழுத்தாளர்களால் தினம் தினம் உற்றுநோக்கப்பட்டாலும், சமீபத்திய எழுத்துக்களால் நிரப்பப்படாத நிலையில் கவனிப்பாரற்று அனாதையாய் விடப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாய். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் எனது வலைதளத்தின் பக்கங்கள் எழுத்துக்களால் நிரப்பப்படாமல் பாசனம் பிடித்தே போய்விட்டது பாவமாய்.
 
அலுவலகம் வந்தோம், வேலையை முடித்தோம். சில நாட்கள் எளிதாய், பல நாட்கள் மிகக்கடினமாய் என நகர்ந்தது எனது அன்றாட அலுவலக வேலைகள். “ஜெய்கர்” எனும் கல்லூரி மற்றும்,அலுவலகத்தோழன் அலுவலக வலைத்தளம் இருப்பதாகவும், உனது கருத்துகளை பகிரலாம் என கூறிமுடிக்க., ஏதோ ஆர்வத்தில் மீண்டும் இந்த முறை முயற்சிக்க ஆயுத்தமானேன்.,
 
முதல் நாள் பதிவை இட்டுவிட்டு,மறுநாள் காணும்போது திகைத்தே விட்டேன், அத்தனை பின்னூட்டங்களை ஒவ்வொன்றாய் காண பிரம்மித்தே போய்விட்டேன்., நிஜமாய் என் எழுத்தில் எதோ ஒற்றிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியாது, அத்தனை உற்சாக பின்னூட்டங்கள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து விழுந்தது இந்த சிறுவிதை மரமாக. அத்தனை உள்ளத்திற்கும் நன்றி கூறிவிட்டு, பயணத்தை தொடர ஆரம்பித்தேன்
 
ஒரு சில பதிவுகளை பகிர பகிர அத்தனை அன்பு ஊக்க மருந்துகள் என்னில் கலக்க ஆரம்பித்தது பின்னூட்டம் வடிவிலாய்..விளைவு, தொடர்ச்சியாக பதிவிட உள்ளுள் ஒரு உணர்வு மேலோங்க, சிறுவிதை முளைத்து இலைகள் விட ஆரம்பித்தது. சில உணர்வுப்பூர்வமான பதிவுகளை நானும், சில நலம் விரும்பிகளும் சமுதாய வலைத்தளங்களில் பகிர்ந்த சில நாட்களிலையே, ஒரு பிரபல இயக்குனரின், உதவி இயக்குனர் தொடர்புகொண்டார்., “எழுத்துகளில் யாதார்த்தமும், உணர்வுகளும் அதிக ஆளுமை கொண்டிருப்பதாய் உணர்கிறேன்., எனது அடுத்த முதல் படத்திற்கு கதை வசனம் எழுதி தருகிறீர்களா” என்ற பெரிய, அனுபவமில்லாத சுமையை என்மீது திடீரென சுமத்த, திக்குமுக்காடி போனேன்.,
 
பதில் அனுப்பினேன்., எதோ ஆத்மா திருப்திக்காய் எழுவதாகவும், மேலும் திரைப்படத்திற்கு எழுதும் அளவிற்கு எனது எழுத்துகளும், நானும் முதிர்ச்சி அடையவில்லை எனவும், அதுமட்டுமல்லாது அனுபவம் துளியும் இல்லை எனவும், அனைத்திற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் சிலவற்றை நான் செய்துமுடிக்க வேண்டியிருக்கு எனவும், சிலவருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் வருகிறேன், மன்னிக்கவும் என எனது நிலையை விவரித்தேன். “சரி உங்கள் விருப்படியே ஆகட்டும் விஜய். நான் சில பல திரைப்பட வசங்களை அனுப்பி வைக்கிறேன்., திருப்பி பாருங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்,” என்று கூறி முடித்துவிட்டு., முடிந்தவரை எனது தொடர்பில் இருங்கள் என்றார்.
 
எப்படியோ தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சி விட்டுவிட்டு தொடர்ந்தேன் எனது இயல்பு வாழ்க்கையை.எப்பொழுதும் தன்னிடம் ஒரு பெரிய பொறுப்பு வந்து சேரும்பொழுது கொஞ்சம் திக்குமுக்காடி தான் போவோம்., சில அசாத்திய மனிதர்கள் மட்டுமே தைரியமாய் நின்றுவிடுவார்கள் நிலைத்து எத்தகு சூழ்நிலையிலும். மீண்டும் எழுத்தை உருக்கி உருவாக்க ஆரம்பித்தேன்
நேரம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம்.,
 
மீண்டும் ஒரு வாய்ப்பு அதே சமூக வலைத்தளத்திலிருந்து என்னை நோக்கி வந்தது., “ஹாய் விஜய், நான் கார்த்திக், உங்கள் எழுத்துகள் அருமை., நேரம் இருந்தால் , ஒரு கைதியைப்பற்றிய “அறம்” எனும், எனது குறும்படத்திற்கு வசனம், பாடல் எழுதி தரமுடியுமா என்று கேட்க , சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றேன் அத்தனை பயத்துடன்.
 
எப்படியோ நேரம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம், பாடலையும், வசனங்களையும் எழுதி அவருக்கு அனுப்பிவிட்டு,பதட்டம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க., “மிக அருமை விஜய்., இதையே வைச்சுகலாம்., சில காட்சிகளில் என்னும் கொஞ்சம் வசனங்களை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொன்றாய் விவரிக்க.,உள்வாங்கி அனைத்தையும் முடித்து கொடுத்தேன்.
 
சிறிது நாட்களுக்கு முன்பு., படத்தின் போஸ்டரை அனுப்பிவைக்க., அதில் வசனம் என்று எனது பெயரைக்காணும்போது ஒருவித சந்தோசம் மூச்சுவிட சிரமப்படுத்தியது.,சந்தோசத்தில் மனைவியிடம் காண்பிக்க.,கலக்கு விஜய் என்றாள்.,இந்த நிகழ்வு என்னை எச்சரிக்க தொடங்கியது, “எழுத்துக்கள் இன்னும் சீற்படவேண்டும்., இன்னும் புதைந்துகிடக்கும் அனைத்து உணர்வுகளையும் , உண்மையையும் , காதலையும் வடித்துவிட வேண்டும் என்று”.எழுத்துகளை பற்றிய யோசனையில் படுக்கையில் விழுந்தேன்.,
 
யோசித்துக்கொண்டே கண்களை மூடும் தருணத்தில், தடுத்தி நிறுத்தி “எனக்கு ஒரு சந்தேகம் விஜய்” என கேள்வியை கேட்க ஆரம்பித்தாள்., சரி கேள் எனும்போது என்னுள், என்ன கேட்க போகிறாள் என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.” இல்ல, படம் எடுக்குறப்ப , இயக்குனரும், ஹீரோவும் தான ஹீரோயின் கிட்ட பேச வேண்டிவரும், பழகவேண்டி வரும்., ஸ்கிரிப்ட் எழுதுறவங்க எல்லாம் ஹீரோயின் கிட்ட பழக தேவை இல்லைல” என்றாள். “அத்தனை அடக்கமுடியா சிரிப்புடன் அட ஆண்டவா ஒரு குறும்படத்துக்கேவா” என்று உள்ளுள் நிணைத்துக்கொண்டு., பதிலளித்தேன் அதெப்படி, ஸ்கிரிப்ட் அஹ எழுதுனவன் தானே சொல்லித்தரனும் ஹீரோயின் கிட்ட என்று பொய்யாய் கூறி முடிக்க. சரி என்று மெதுவாய் அவள் மௌனிக்க.,
 
உற்றுநோக்க ஆரம்பித்தேன் அவளை., அவளின் வாடிய முகத்தில் ஒட்டியிருந்தது, “பெண்மை யாதெனில்” என்ற, எனது நீண்ட நாள் கேள்விக்கு பதில், அத்தனை அழகாய்….

Tuesday, April 8, 2014

எனதானவனின் மொழி..


கட்டிச்சோற்றை கட்டிக்கொண்டு காடு மேடல்லாம் திரிந்திருப்போம் ஏதோ ஒன்றுக்காய்., அனால் அது கடைசியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கொட்டிக்கிடக்கும்.அதுவே வாழ்க்கையின் சாராம்சமும் கூட., தொலைத்துவிட்டு எங்கெங்கோ தேடி இருப்போம், அருகில் இருப்பதையறியாமல்.
 
அவன் பெயர் வேண்டாம் என நினைக்கிறேன்.நினைத்த நிமிடத்தில் மன்னிக்கவும் என மனதில் கூறிக்கொண்டு எனது பெயரை பதிவு செய்ய விரும்புகிறேன் “தேவி” என. மெட்ராஸ் கிளம்பும்போது தெரியாது அவனைச்சந்திப்பேன் என, அதற்காகவோ என்னவோ,”மெட்ராஸ்” லாம் போக வேண்டாம்., ஒரு நல்ல பையன பாத்துவைச்சு இருக்கோம் உன் திருமணத்திற்கு” என்ற எனது தாயின் குரலை தாண்டி, எனக்கென கால்தடம் பதிக்க கிளம்பினேன் மெட்ராஸ் நோக்கி.
 
மெட்ராஸ் எனும் உச்சரிப்பு மறந்து சென்னை என்று உச்சரிக்க பழகும் அளவிற்கு சென்னையின் அனைத்து இடங்களுக்கும் பொழுதுபோக்கிற்காகவும், வேலைக்காகவும் அலைந்து திரிந்திருக்கிறேன்.அப்படி தான் வழக்கமான தேடலில் அந்த அலுவலகத்தை முகாமிட்டிருந்தேன் அதிகாலையிலே., எனது தங்கும்விடுதியிலிருந்து கிட்டத்தட்ட நான்கு தோழிகள் என்னுடன் காத்திருந்தனர் அந்த நிறுவனத்தில் எப்படியாவது கால்பதிக்க.
 
சிறிது நேரத்தில் அவன் சில நண்பர்களுடன் வந்திருந்தான் என் முதல் பார்வை அவன் மீது விழவேண்டும் என விதியில் இருந்ததை விஸ்வரூபமாக்க…அத்தனை அமைதி அவன் கண்களில்.,முதல் பார்வையே என்னுள் ஏதோ செய்ய., பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு., அங்கும் இங்கும் சுழற்றிவிட்டு கடைசியில் “quantitive aptitude ” புத்தகத்தின் மீது பதித்தேன். அன்றாடம் ஆயிரம் முகங்கள் நமது கண்களில் விழுந்தாலும், ஏதோ ஒரு சில முகங்கள் மட்டும் கண்களில் பதிந்துகொண்டு, அழிந்துவிட அடம்பிடிக்கும்., அப்படி தான் உணர்ந்தேன் அப்பொழுது.
 
என்னையறியாமல் என் செயல்பாடுகள் அமைந்ததாலோ என்னவோ., உள்ளே எழுத்து தேர்வுக்கு அனைவரையும் அழைத்தபோது, ஒன்றன் பின் ஒன்றாய் செல்லும் பொழுது என்னையும் அறியாமல் அவனுக்கு அடுத்து செல்லவேண்டியதாயிற்று., ஒவ்வொருவராய் அமர., அவனது இருக்கைக்கு அருகாமையிலான மற்றொரு இருக்கையில் அமர்ந்தேன்., சிறிது நேரத்தில் கூட்டியும் கழித்தும் போராடினேன் எனக்கான அங்கீகாரத்துக்காய்., ஒரு சில வினாக்களை தாண்டி, மீதமுள்ள அனைத்திற்கும் பதிலடி தந்தேன் சரியான விடையில்.,விடைத்தாளை மூடிவைத்துவிட்டு காத்திருக்க., அவனும் எழுதிவிட்டு சரிபார்த்துக்கொண்டிருக்க., ஏதோ ஒரு சந்தேகத்தில் நிரப்பி வைத்த சில வினாக்களுக்கு மட்டும் அவனது விடைத்தாளில் விடை தேட, கண்களை சுழற்றினேன் அவனது விடைத்தாளின் பக்கம்., கிட்டத்தட்ட அனைத்து சரியான விடைகளும் அவனது விடைத்தாளிளிருக்க, ஏதோ ஒரு குருட்டு தைரியம் அவன் சரியே அனைத்து கேள்விகளிலும் என நினைக்க., அவனது விடைகளை நிரப்பி வைத்தேன் எனது விடைத்தாளில்.
 
அவனது விடைத்தாளை அவனது நண்பர்களுக்காய் உயர்த்திபிடிக்க, என்னுள் முடிவுசெய்து கொண்டேன் அவன் நிச்சயம் சரியே என., அவர்கள் எதோ சொல்ல., இவனும் ஏதோ சைகையில் காட்ட., புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்., எதேச்சையாய் அவனது பார்வை என் மீது திரும்ப., செய்வதறியாது நானும் உற்று நோக்க., அத்தனை பேசியது அவன் கண்கள்., ஒருசில நிமிடம் என்னுள் ஓராயிரம் கேள்விகள் ஒரு பார்வை, இத்தனை செய்யமுடியுமா என்னுள் என?.,என்னிடமும் அதே செய்கையில் என்ன?? என்பதை போல் புருவம் உயர்த்தி செய்கையில் ஏதோ கேட்க, ஒன்றும் இல்லை என தலையசைத்து உறுதிப்படுத்தினேன் அவனுக்கு.,
 
விடைத்தாள்களை ஒவ்வொருவராய் ஒப்படைத்துவிட்டு வெளியில் வர முயற்சிக்கையில்., தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாய் கூறிவிட்டு., இப்பொழுது கிளம்பலாம் அனைவரும், என்று முடிக்கையில்., அனைவரும் வெளியேறினோம் ஒன்றன் பின் ஒன்றாய்., அவனை தேடியது கண்கள்., நண்பர்களுக்கு கையசைத்து வழியனுப்பிகொண்டிருந்தான் தூரத்தில்., தோழிகளை வேகமாய் நடக்க அவசரப்படுத்தினேன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி., பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவனிற்கு அருகாமையில் நெருங்க., எங்கிருந்தோ வந்த ஒரு பெண் அவனைதட்ட., திரும்பியவன் புன்னைகை உதிர்த்துவிட்டு கைகளை திருப்பினான் மெதுவாய்.,
 
இருவரின் விரல்களும் ஆயிரம் மொழிகள் பேச., சிரிப்பும், கோபமும், கிண்டலும்., கேள்விகளும் மாறி மாறி அவர்களிடம் கண்டேன், காதைபிளக்கும் சத்தங்களுக்கு நடுவே சத்தமேயில்லாமல் அழகாய்., அவர்களது காதுகள் வேலைகலற்று கிடக்க., உதடுகள் அவ்வப்பொழுது சத்தமில்லாத சிரிப்புகளை உதிர்க்க மட்டுமே உதவியது., கண்களும், விரல்களும் மட்டுமே பேசியது கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்னில், கடவுளை திட்டிக்கொண்டே.
 
என்னையும் அறியாமல் கண்ணீர் சொட்ட சொட்ட அவனையே உற்று நோக்கினேன்., இன்னும் இருக்கமாய் இதயம் அவனிடம் ஒட்டிக்கொண்டு வர மறுத்தது., தோழிகள் அனைவரும் அவனை நோக்கி ‘பாவம்’ என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்த போதும்., நான் மட்டும் தீவிரமாய் யோசித்துகொண்டிருந்தேன்., எப்படி இந்த விரல் மொழிகளை கற்றுக்கொள்வதென?., கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அவனுக்கு மிக அருகாமையில் நின்றுகொண்டு கவனித்துகொண்டிருந்தேன். எப்படி?, பாவம் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் என்னால் உதிர்க்க முடியும்?., என்ன கணக்கோ, எப்படியோ தெரியாது முதல் பார்வையிலையே என்னிடம் ஏதோ திருடியவன்.,அசைக்க முடியா பந்தம் எனக்கும்., அவனுக்கும்., எந்நிலையிலும் மாறாத என் மனதிலிருந்து, எப்படி “பாவம்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு நகருவேன் அந்த இடத்திலிருந்து.,
 
தோழிகள் பேருந்து வந்துவிட்டதாய் கூறி பேருந்தை நோக்கி ஓட, நான் மட்டும் அங்கேயே நிற்க.. பிறகு மீண்டும் ஓடினேன் .,அவனும் அதே பேருந்தை நோக்கி ஓடிய பொழுது. எப்படியோ உள்ளே சென்று அவனருகே நின்ற பொழுது., சைகை காட்டினான் கிளம்புவதாய், உள்ளிருந்து வெளியே அந்த பெண்ணை நோக்கி. பேருந்து மெதுவாய் கிளம்ப., என்னை உற்றுநோக்கினான் மீண்டும்., எனக்கானவனாய் அவன் தோன்ற.,அவன் பேசா உதடுகளும், கேட்கா காதுகளும் தெரியவில்லை என் கண்களுக்கு., நானும் உற்று நோக்க ஆரம்பித்தேன் அவன் கண்களை., காதலிக்கும் முடிவுடன் …
 
“தாம்பரம் ஒரு டிக்கெட்”., அவன் உதடுகளில் இருந்து வார்த்தைகள் ஒலிக்க., ஆச்சர்யத்தில் உடல் முழுவதும் வியர்த்து, அப்பொழுது உதடும் காதல் மொழி பேச ஆரம்பித்தது…

Tuesday, April 1, 2014

அழகென்றால் நீ…


உன்னுள், என்னை வளர்த்து பெருமிதம் காணும் உனைப்புரிந்துகொள்ள, சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நீயறிவாய். விட்டுப்பிடித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான், நீ எனக்காக சேர்த்து வைத்த ரகசியம் என அறிவேன்.
 
எப்பொழுதும் இன்னொரு கரம் இருக்கமாய் பற்றியே பள்ளி செல்ல பழகியவன் நான். நரம்பு பையை தோளில் போட்டுவிட்டு, ம்ம்ம் பிடித்துக்கொள் கெட்டியாக என்று, தன் கரத்தை எனக்கு தாரை வார்த்துவிட்டு முன்னே அடியெடுத்து வைக்கும் அக்காவிற்கு தெரியும், அன்போ, பயமோ ஏதோ ஒன்று அவளிடத்தில், என்னை இருக்கமாக்கியிருக்கிறதென்று.
 
எத்தனை அடி என்னிடம் வாங்கியிருந்தாலும், கம்பீரமாய் மிரட்டியிருக்கிறாள் பள்ளி அழைத்துசெல்லும் போதுமட்டும். ஏனென்றால் அவளது ராஜ்ஜியம் அங்கே தொடங்கிவிடும் அந்த 50 நிமிட பள்ளி நோக்கிய பயணத்தில். அவ்வப்பொழுது என்னிடம் கேள்விகளை வைப்பாள், “அடுத்த வருடம் ஆறாம் வகுப்பு வேற பள்ளிக்கு போய்டுவேன், அப்போ எப்படி போவ தனியா” என்பாள். ம்ம்ம் அதெல்லாம் போய்விட எனக்கு தெரியும், நீ தான் பெரிய சீமையா இந்த உலகத்துல, எனக்கே போகத்தெரியும் என்று சீரும் இடத்திலெல்லாம் அமைதிகாப்பாள்..ம்ம்ம் என்று பெருமை கொள்ளும் எனக்கு தெரியாது, என்மீதான பாசம் கலந்த பிரிவு, அவளை மௌனிக்க வைத்திருக்கிறதென்று.
 
“அம்மா, இன்னைக்கு மட்டும் நீ கொண்டு வந்து விடு” என்ற போது, “நீயே பயப்படாம போயிக்கிறதா அக்காட்ட சொன்னதா சொன்னாளே”என்றவளிடம்., ஆமா சொன்னேன் அதுக்கிப்போ என்ன?” என்றேன்.”இல்ல கண்ணு நீ தான் இனி போயிக்கணும், அக்காவும் வேற ஸ்கூல் போறா, அம்மாவுக்கு எத்தனை வேலை இருக்குன்னு தெரியும்ல, நீயே போயிக்க கண்ணு இந்த ஒரு வருஷம் மட்டும், அப்புறம் நீயும் அக்கா கூடவே போகலாம் ஆறாம் வகுப்பு அடுத்த வருடம்” என்றதும், மள மளவென கண்ணீர் கொட்டியது., நரம்பு பையை தரையில் போட்டுவிட்டு, கீழே விழுந்து உருண்டு புரண்ட போது, சற்று கண்ணை சுருக்கிக்கொண்டு அம்மாவை பார்த்த போது, கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தாள். எப்படியும் கொண்டு வந்து விடுவாள் பள்ளியில் என்றொரு நம்பிக்கை பிறந்தது.
 
நன்றாய்த்தெரியும், வயல்காட்டில் வேலைசெய்து வியர்வையில் குளித்து இருக்கும் அவளுக்கு உண்ணக்கூட நேரம் இருக்காது என்று. எனக்காக இதைகூட செய்யமாட்டாள என்ற ஏதோ ஒரு பிடிவாதத்தில் அவளின் அசௌகரியங்களை நினைத்துப்பார்க்கவில்லை.”சரி சரி அம்மா வறேன் அழக்கூடாது” என்று அப்படியே வயல் அழுக்கோடு வந்தாள் என்னோடு.
 
அத்தனை சந்தோசத்தோடு, கரம்பிடித்து குதித்துக்கொண்டு, இது என்னாதும்மா, இது என்னாதும்மா என்று ஒவ்வொன்றாய் வழிநெடுக கேட்க, செல்ல கோபம் கொண்டாள்., “இத்தனை நாள் இப்டியேதான வந்த அக்கா கூட, இது தெரியாத உனக்கு” என்றாள். “ஒன்பதாவது வாய்ப்பாடு சொல்லு, பதினைஞ்சாவது வாய்ப்பாடு சொல்லுன்னு, அடிஸ்கேளுல மண்டை மண்டையா கொட்டினாம்மா, இது தெரியல இது தெரியலன்னு திட்டினா” என்று ஒவ்வொன்றாய் அக்காவை பற்றி புகார் தொடுத்துக்கொண்டே போக , கொஞ்சம் வாய்விட்டு சிரித்தே விட்டாள்.”சரி சரி என்று காணும் ஒவ்வொன்றையும் விவரிப்பதில் தொடங்கி, குட்டிகதைகள் கூறி முடிப்பாள்.
 
பள்ளி நெருங்கியதும், “சரி கண்ணு போய்ட்டுவா, அம்மா இப்படியே கிளம்புறேன்” எனும்போது உண்மையாய் அழுதேன் , பள்ளியின் நுழைவு வாயிலை தாண்டியும் வர வேண்டும் என., “அம்மா அழுக்கா இருக்கேன் கண்ணு, நல்ல சேலை கூட கட்டுல , நீ போய்ட்டுவா சாமி” என்று கெஞ்சிய போதும், விடாப்பிடிவாதத்தால் உள்ளே அழைத்து வந்து, சில நிமிடங்கள் இருக்க வைத்து போக வைத்தேன். “இவுங்கள உங்க அம்மா”, என்று சகமாணவர்கள் கேட்க , “ஆம்” என்ற போது., அதில் ஒருவன் “ஏன் அழுக்கா வந்து இருக்காங்க” என்று கேட்க., அத்தனை கோபம் அம்மாவின் மீது.,அந்தவயதிலையே கௌரவம் கற்றுத்தந்த இந்த சமூகம், யார் மீது கோபப்பட வேண்டும் என்று கற்றுத்தர மறந்துவிட்டது. “அம்மா அழகாக இருந்திருந்தால் இப்படி கேட்டு இருக்கமாட்டான்ல என்ற எதோ ஒரு வேகம் என்னுள் பரவியிருந்தது.
 
அடுத்த நாள் அதே நேரம், அதே இடம் அம்மாவை நிறுத்தி, காத்திருந்தேன் அந்த சக மாணவனுக்காய்.இந்த முறை முற்றிலும் வித்தியாசமாய்., “ஏன்டா கண்ணு, என்னடா ஆச்சு உனக்கு, ஏன் இப்டியெல்லாம் பண்ற” என்ற தொடர்ச்சியான அம்மாவின் கேள்விக்கு., “நீ சும்மா இருமா உனக்கு ஒன்னும் தெரியாது” என்று கோபம் பறக்கும் கண்களுடன் நின்றிருந்தேன்.,”நேரம் ஆச்சு கண்ணு அம்மாவுக்கு, இன்னும் மூணு வயலு தண்ணி பாய்க்காம கிடக்கு, அப்பா வந்தா திட்டுவாரு” என்ற அம்மாவின் கெஞ்சல்கள் காதில் விழுந்ததோடு சரி, அதற்கான பதில்களை தரும் நேரம் இல்லை., எனது பார்வையெல்லாம் அந்த சக மாணவனுக்காய் மட்டுமே இருந்தது.
 
இதற்கிடையில் தோழி சுதா, அருகே வந்து “என்ன விஜய், உங்க அம்மாவ இவுங்க என்றாள், ஆம் என்று பெருமிதத்தோடு சொன்ன என்னிடம்., இவ்ளோ அழகா இருக்காங்க,தினேஷ் எதோ உங்க அம்மா அழுக்கா வந்ததா சொன்னானே என்றாள்., “நல்லா பாத்துக்க, தினேஷ்கிட்ட சொல்லு போயி, எங்க அம்மா எவ்ளோ அழகு என்று என்று முடித்தேன்.
 
கண்கள் கலங்க, மெதுவாய் சிரித்தாள் என் தலை களைத்து., “அட இதுக்கா சாமி. சின்ன வேலை சொன்னாகூட கேட்காத என் கண்ணு, நேத்து சாயங்காலமே, நம்ம தோட்டத்து பூவ பறிச்சு, கட்ட சொல்லி நாளைக்கு நீ வைக்கணும் அம்மான்னு சொல்லி, அதிகாலையிலே குளிக்க சொல்லி., எண்ணெய் வைத்து, தலைவார சொல்லி., பூவைக்க சொல்லி., நல்ல புடவை கட்ட சொல்லி உருண்டு புரண்டு அழுது, இப்டி கொண்டு வந்து நிறுத்துனது இதுக்குதான?., என்றவளிடம்., “ஆம் என்றதும்”., ” ஏன் கண்ணு அம்மா அழகுபடுத்திகிட்டு,சினிமாவ நடிக்க போறேன், வயக்காட்டுல தான சாமி கிடக்க போறேன்னு” சொன்ன போது., “அதெல்லாம் முடியாது இனி நீ தான் பள்ளிக்கூடம் வரணும் என்று நான் முடிக்கும்போது., “என் மகனல்லவா இவன், எப்படி விட்டுகொடுப்பான் என்னை?” என்ற பெருமிதம், அவள் கண்களில் ஒட்டியிருந்தது..

Wednesday, March 26, 2014

உதிரத்தில் ஊறிய விச(வசா)யம்



அலுவலகத்தில் விடுமுறை கேட்டுவிட்டு, சொந்த ஊரிற்கு, கல்லூரிமாணவர்கள் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட கல்லூரி முடித்து ஒன்றரை வருடங்கள் கழித்து, தொடர்பில் இல்லாமல் தொலைந்து போன நண்பர்களை கண்டெடுக்கவும், தொலைப்பேசி தொடர்பில் இருக்கும் நண்பர்களை நேரில் கண்டு ஒருவரையொருவர் முகம்மலர்ந்து, அகம்மலர்ந்து, நலம் விசாரிக்கவும்., எங்கள் நலனுக்காய், எங்கள் விருப்பமின்றி எங்களை செதுக்க பாடுபட்ட, ஆசான் எனும் சிற்பிகளை மீண்டுமொருமுறை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  கல்லூரிக்கு சில மைல்களே அப்பால் இருக்கும் எனது வீட்டிலிருந்து பைக்கில் கிளம்ப ஆரம்பித்தேன்.,ஒரு சில தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் நான் வந்து சேரும் சரியான நேரத்தை கூறிவிட்டு, கல்லூரியை நோக்கி..

வேகமாய் பறந்து சென்றாலும், சரியாக அடையாளம் கண்டுவிடும் ஒரு சில உறவினர்களின் கண்களிலிருந்து தப்ப முடியாது. அப்படி தான் நானும் மாட்டிக்கொண்டேன் அப்பொழுது.ஏதோ ஏதோ கேள்விகளை தொடுத்துக்கொண்டே போனார், "முடியல" என்ற என் உள்மனதின் சத்தம் அவருக்கு கேட்டபோதும் விடவில்லை. "எப்படிப்பா இருக்கு சென்னை?" என்றதில் ஆரம்பித்து, "எப்போ கல்யாணம் " என்பதில் கொண்டு வந்து நிறுத்தினார்.கிட்டத்தட்ட எனக்கான அரைமணி நேரத்தை விழுங்கியிருந்தார் என் அனுமதியின்றி. என்ன சொல்ல?., மிச்சம் வைத்தவரைக்கும் லாபம் என்று பறக்க ஆரம்பித்தேன்.கல்லூரியை அடைந்து பைக்கை நிறுத்திவிட்டு, நடைகட்ட ஆரம்பித்த நிமிடத்தில் அத்தனை எதிர்பார்ப்புகள், ஆசைகள் என ஒவ்வொரு காலடியிலும் ஒரு மிகப்பெரிய தேடல் இருந்தது.

தூரத்தில் நண்பர்கள் கூட்டம் தெரிய, ஒரு சில எட்டிகள் அதிகம் வைத்து ஓட ஆரம்பித்தேன். ரமேஷ், மாணிக்கம், செந்தில், கலையழகன், சந்துரு, ஜெகன், வடிவேல், பிரபாகரன், எழில், கேசவமூர்த்தி என ஓவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் என் விழியில் வந்து விழ,தாங்கிக்கொள்ள திராணியற்று வழிந்தோடியது எனது விழி, கண்ணீராய்.கைகுலுக்கி அன்பை பரிமாறும் அதே நேரத்தில், "போன் பண்ண கூட நேரம் இல்லையா உனக்கு, என செல்ல அடிகள் விழ, ஆசையோடு சுமந்தேன்". ஒவ்வொருவரின் தற்போதைய நிலையை அறிந்துகொண்டதில் அத்தனை ஆனந்தம்.

ஒழுக்கத்திலும் சரி, உழைப்பிலும் சரி எப்பொழுதும், முதல் நான் தான் என்று பாடுபடும் "மாணிக்கம்" எனக்கு பிடித்த நண்பன். இத்தனை கலாட்டாக்களிலும், பவ்வியமாய், ஓரமாய் நின்றுகொண்டு கூச்சத்தோடு ரசித்துகொண்டிருந்த நண்பனை இழுத்து, எப்படி இருக்கிறாய்? என கேட்க.அதே புன்னகை, அதே கூச்சம் பேச்சில், அதே அமைதி, அதே நேர்மை ,உழைத்து உழைத்து, இரும்பாய் மாறி இருக்கும் அதே கரங்கள் என அவனுக்கான அடையாளங்கள் மறையாமல் நின்றான் என் கண்ணெதிரே.

"என்னடா மாணிக்கம், உன் நம்பர்க்கு எப்போ call பண்ணினாலும்,  Not Reachable அப்டினே வருது?. என்று முடிப்பதற்குள், "நம்பர் மாத்திட்டேன்" என அவன் கூற, கோபத்தின் உச்சிக்கே சென்று "ஏன்டா நம்பர் மாத்தினா கொடுக்கமாட்டியா” என்று திட்ட ஆரம்பித்தேன். அவனோ எப்பொழுதும் அவனுக்கே உரிய மெதுவான, தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான்."

சென்னைல வேலை தேடி கிடைக்கலைன்னு, ஊருக்கு வந்தேன்ல., அப்போ அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போய்டுச்சு கொஞ்ச நாளுல., காட்டுல வெங்காயம், கீரை, இஞ்சி, மஞ்சள், நெல்லு அப்டி இப்டினு நிறையா போட்டு இருந்தாங்க.அப்படியே விட்டு வர மனசு இல்லாம, நான் தான் பாத்துகிட்டேன், அப்போ வயலுக்கு தண்ணி பாய்ச்சுரப்ப விழுந்துடுச்சு போல, நானும் தேடி தேடி பார்த்தேன் கிடைக்கல.அப்புறம் தான் ரெண்டு நாலு கழிச்சு கண்டெடுத்தேன் வயல்ல இருந்து, ஒண்ணுக்கும் ஆகுல cellphone .,அப்புறம் தான் புதுசு வாங்கினேன். யார் நம்பரும் ஞாபகம் இல்ல. நானும் ஞாபகப்படுத்த விரும்புல அப்படியே விட்டுபுட்டேன் என அவன் முடிக்க.

கொஞ்சம் தழு தழுத்த குரலில், அப்போ சென்னை வருலையா நீ மறுபடியும் என்று நான் கேட்டுமுடிப்பதற்குள், தெளிவாய் கூறினான். "இப்போ விவசாயம் தான் பாக்குறேன்" என கூறினான்... அவன் மீண்டும் சென்னை வந்து சாதிக்கவில்லை என்று ஏதோ ஒரு ஏக்கம் என்னுள் இருந்தபோதும், கொஞ்சம் பெருமிதம் உள்ளுள் மலரச்செய்தது , விவசாயம் பார்க்கிறேன் என்ற அவனது பதில்." எல்லோரும் Third year computer classக்கு வாங்க என்ற சத்தம் வந்ததும் நகர ஆரம்பித்தோம்.

ஒன்றாய் அமர்ந்தோம் நானும் அவனும். ஒவ்வொருவராய் தான் பணிபுரியும் நிறுவனம், அதில் தனது பணி என்ன என்று விவரித்துச்சென்றனர். அனைவரும் கைதட்டி பாராட்டினர் ஒவ்வொருவருக்கும். இப்பொழுது மாணிக்கத்தின் முறை, பேச ஆரம்பித்தான்," நான் அப்பாவோட  Business பார்க்கிறேன், கொஞ்சம் அப்பாவுக்கு முடியாததால இப்போ நான் பார்த்துகிறேன்" என அவன் முடித்த பொழுது , எதற்காக  இப்படி businessன்னு சொன்னான் என யோசிப்பதற்குள், என் முறை வர, எழுந்து சென்று பேச ஆரம்பித்தேன்.

ஒரு பெரிய தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கிவிட்டதாகவும், தனது நிறுவனம் மிகச்சிறந்தது என்றும், நிறையா பேசினேன் நிறுவனத்தை பற்றி பெருமையாய்.அத்தனை கைதட்டல்கள்.., முடித்துவிட்டு வந்து அமரும்பொழுது மெதுவாய் புரிய ஆரம்பித்தது, என்னையும் அறியாமல் என்னுள் கர்வம் ஒட்டியிருந்தது, நிறுவனத்தை பற்றிய பெருமையான பேச்சில்.”இதில் என்ன இருக்கு, நம்ம சாதிச்சத சொன்னோம்”, என நியாயத்தை ஒருபுறம் மூளை எடுத்துவைத்த பொழுது, பெருமை விரும்புகிறாய் என்று உள்ளம் அடித்து கூறியது ...விரும்பி செய்யும் வேலையாய் இருந்த பொழுதும் சமுதாய அந்தஸ்துக்காய் கொஞ்சம் கூட்டி சொல்லவேண்டி இருக்கிறது என உணர்ந்த தருணத்தில், "மாணிக்கத்தின் பேய்ச்சின் மீது உருவாகிய businessஅஹ எனும் "அதிருப்தி", திருப்தியானது.

மதிய உணவு, சிறிய விளையாட்டுகள் என அனைத்தும் முடிந்து கிளம்பும் தருவாயில், மாணிக்கம் கேட்ட கேள்வி கொஞ்சம் எதிர்பார்க்காது தான் .," என்ன விஜய்,அப்படியே சென்னைலையே செட்டில் ஆகிடுவியா?., "அப்படியே, வெளிநாடு கிளம்பிடுவ" . என மாணிக்கம் கேட்க, பதில் கூற ஆரம்பித்தேன். "எங்கே போனாலும் ஒரு ஆறு வருசத்துல என் மண்ணுல வந்து கிடப்பேன்" என.

சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தான் .,"இந்த மாதிரி சினிமா டயலாக் பேசுறவங்க நிறையா பேர பார்த்துட்டோம், இப்படி தான் சொல்வாங்க, கொஞ்சம் லைப் ஸ்டைல் மாறினதும், ஆளே மாறிடுவாங்க, ஊர்ல வந்து எப்படி சமாளிக்கிறதுன்னு கேட்பாங்க, அது என்ன ஆறு வருஷம்?, வரணும்னு நினைக்கிறவன் இப்பவே வரலாமே, அதென்ன ஆறு வருசக்கணக்கு" என ஏதோ ஏதோ கேட்டான்.

என்னவாகப்போற அப்டின்னு எட்டாவது படிக்கிறப்ப வாத்தியார் கேட்க, ஒவ்வொரு பயலுகளா "டாக்டர்", "Engineer" ஆக போறோம்னு சொல்ல சொல்ல.,Very good, very goodனு வாத்தியாரும், மத்த பசங்களும், பொண்ணுங்களும் பயங்கரமா, கைதட்ட.., நாமளும் அதையே சொல்லிடலாம், அப்போ தான் நம்மளையும் பெருமையா நினைப்பாங்க என பொய்யாய் "Engineer " என கூற ஆரம்பித்தது, பிறகு யார் கேட்டாலும் இப்படியே சொல்லி பெருமைப்பட என்னுள் பதிந்ததோடு நில்லாமல், என் விவசாய அப்பாவிற்குள்ளும் பதிந்து, என்னை உயர்த்திபிடிச்சு, பையன் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சு எப்படியோ கல்லூரி சேர்த்தி அகமகிழ்ந்தார்.

அப்பாவின் உழைப்பை உயர்த்திபிடிக்க, உண்மையாய் படிச்சு, வேலையெல்லாம் வாங்கிபுட்டேன். " வயலோடு  வாழ்ந்து, விவசாயத்தோடு கலந்து, பயிரோடு உரையாடி, ரசித்து ரசித்து உழைத்த அவரது விவசாயம் மட்டுமே என்னுள் இனித்தபோதும்.,பிடிக்காத வேலையை,கட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருக்கிறேன்., "என் புள்ள engineer .,கை நிறையா சம்பாதிக்கிறான், வெளிநாடு எல்லாம் போவான்" என, காணும் மனிதரிடமெல்லாம் பெருமிதம் கொள்ளும் எனது அப்பாவுக்காய்…அவரது ஆசைக்கு ஆறுவருடம் போதும். “எனக்கப்புறம் யார்பார்த்துக்குவா இந்த வயல? விற்று விட வேண்டிய நிலைமை வந்துவிடுமோ!!!!, என சத்தமே இல்லாமல் சலனப்பட்டு கண்ணீர்விடும் அவரது ஏக்கத்திற்கு, பதிலாய் தரப்போகிறேன் எனது resignation letter யை பணிபுரியும் நிறுவனத்திடம்.

கேள்வியற்ற எஜமானன், துளிரும் பயிரை கானும்பொலுதெல்லாம் தானும் ஒரு கடவுளாய்.,உழைத்து கலைத்து, வயிற்றை கிழிக்கும் பசிக்கு, பழையசோறு நீரும், கடிச்சுக்க வெங்காயமும் அத்தனை ருசியாய். இரவு கயித்து கட்டிலில் சாய்ந்து, நிலவை, கண்கள் முத்தமிட்ட நொடியில், தூக்க தேவதை நெஞ்சில் கலக்க, பிணத்தை போன்றொதொரு அசையா தூக்கம் எங்கு கிடைக்கும் இங்கேயன்றி..

என்னை ஆளாக்க, என் அப்பாவிற்கு பலம் கொடுத்த, என் தாய்(தந்தை) மண்ணின் தேகத்தை துண்டு துண்டாய், உதிரம் சொட்ட சொட்ட, கூறு போட்டு விற்க ஒருபோதும் விடமாட்டேன். என் உதிரத்தில் ஊறிய விச(வசா)யம் அல்லவா, எப்படி மறப்பேன்?..விரைவில் வந்து விழுவேன் என் தாய்(தந்தை)மண்ணில். என பதில் கூறிவிட்டு பைக்கை மெதுவாய் நகர்த்தினேன். கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.

" கொங்கு பள்ளிக்கு அருகே, திருச்செங்கோடு, நாமக்கல் பிரதான சாலையில் "கோல்டன்" வீட்டுமனைகள் உள்ளது. சதுர அடி ரூ 250 மட்டுமே". முந்துங்கள்"...

"ஆறு வருடம் என்பதே, அதிகமோ!!!! " என்ற வினா என்னுள் விழுந்தது விதையாய்..   

Friday, March 21, 2014

முதல் பார்வையின் உச்சம் – 2



மெதுவாய் நகர ஆரம்பித்தேன்., “சீக்கிரம் ஓடிடும் இந்த நாலு மாதமும்., தேர்வு முடிந்ததும் இங்கு மறக்காமல் வந்திட வேண்டும்” என்று பலமுறை என்னுள் புலம்பிக்கொண்டிருந்தது இதயம்.ஏதோ ஒரு அழகிய உணர்வு மெதுவாய் கனக்க ஆரம்பித்தது, சுமந்து செல்ல முடியாமல் திணறியபடி ஊர் வந்து சேர்ந்தேன்.ஜன்னல் ஓர பயணத்தில், கண்கள் ஏதோ ஏதோ காட்சிகளை  காண, உள்ளம் மட்டும் அடுத்த விடுமுறைநாட் கனவிலே ஒட்டிக்கொண்டு, வெளிவர அடம்பிடித்தது ஒவ்வொரு நிமிடமும்.
வீடுவந்து சேர்ந்திருந்த போது மூச்சு விட சிரமப்படுத்தியது கருணைமலரின் பிரிவு. எப்படியோ இரண்டு மூன்று நாட்கள் சமாளித்து கொண்டு, பள்ளி சென்றேன். விடுமுறை நினைவுகளை அசைபோட்டுக்கொள்ள அனுமதி அளித்தது போல், காலை நேர வகுப்பு ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தார்.. ஒவ்வொரு நண்பனாய், விடுமுறை நாட்கள் குதூகலப்படுத்திய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஏதோ ஒரு நண்பன், புதிதாய் சொந்தகார பெண்ணை கண்டதாகவும், வெகுநேரம் பேசியதாகவும் பகிர்ந்து கொள்ள, கூடி இருந்த நண்பர்கள் கூட்டம், கேலி செய்தும், அப்பெண்ணின் பெயரையே அவனக்கு சூட்டியதும், கொஞ்சம் என்னை எச்சரிக்கை செய்தது, "உனக்காகவும் சில ரகசியங்களை மறைத்து வைத்துக்கொள் , அதை யாரிடமும், எப்பொழுதும் சொல்லாதே" என. வழக்கமாய் பொழுதுபோக்க நினைக்கும் நேரங்களில், புத்தகத்தை எடுத்து, அதில் உள்ள ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்துகொண்டு,  Natraj ரப்பரை எடுத்து, நன்றாய் எண்ணெய் தலையில் தேய்த்து, படத்தின் மீது வைத்து, புத்தகத்தை மூடி, ஒவ்வொரு பக்கமாய் திறந்து, ஒரு குத்து விடுவோம் அத்தனை பக்கத்தோடு சேர்த்து ரப்பரின் மேல்.ஒவ்வொரு பக்கமும் இப்படி செய்து கடைசியில் காணும்போது ரப்பரில் அந்த படம் இருக்கும் ஒட்டிக்கொண்டு. படத்திற்கு பதில் "கருணை மலர்" என பென்சிலில் அழுத்தி எழுதி, ரப்பரில் ஒட்டவைத்து பார்த்து, உள்ளம் உவகையுற்றேன்.
அவள் பெயரை எழுதி எழுதி பார்த்து, அடித்து வைத்த புத்தகத்தின் பக்கங்கள் அத்தனை அழகாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துகொண்டு தனியாய் மரத்தடியில் அமர்ந்துபடிக்கும்பொழுது, மூன்றாவது ரேங்க் வாங்கும் என்னைப்பார்த்து முதல் ரேங்க் வாங்கும் நண்பன் கூட கொஞ்சம் பயந்து போயி தான் இருந்தான், "கொஞ்சம் ஓவரா படிக்கிறானே, நம்மள முந்திபோய்டுவான் போல இருக்கே"  என்று.சரி அவனக்கு எப்படி தெரியும் இனம் புரியா உணர்வு என்னை ஆட்டிப்படைத்ததென்று. "எனக்கும் ஒரு ஆள் இருக்கு" என்று ஒவ்வொருவனாய் பெருமிதம்கொள்ளும் நேரங்களில் கூட, உண்மை சொல்லாமல் உள்ளுள் அனுபவித்தேன் அந்த அழகிய உணர்வை. 
தெருவோர கடைகளில் காதல் பாட்டுகள் ஒலிக்கும்பொழுதெல்லாம்,ஒரு நிமிடம் நின்று, குறைந்தது ஒரு 5 வரிகளையாவது மனப்பாடம் செய்ய வைத்தது அவள் மீதான இனம் புரியாத உணர்வு. அவளின் நினைவில் அந்த 5 வரிகளை, காலம் நேரம் இல்லாமல் முணுமுணுத்த போது, நிச்சயம் அந்த பாடல் வரிகள் கூட அழுது இருக்கும், இப்படி வந்து இவனிடம் மாட்டிக்கொண்டோமே என நினைத்து. இனம் புரியாத அந்த உணர்வு வரும்பொழுதெல்லாம் மீதமுள்ள நாட்களை எண்ணி எண்ணி, கைவிரல்கள் களைத்தே போயிருக்கும்.
அழகிய உணர்வு புது தெம்பாய் தானிருந்தது என்னுள், தேர்வுக்கு என்னை தயார்செய்த பொழுது கூட. ஒவ்வொரு தேர்வாய் ஆசையில் எழுதி, ஆவலில் முழ்கியிருந்தேன் விடுமுறைக்காய். கடைசி தேர்வு எழுதும்பொழுதெல்லாம் ஒருமுறை வாசித்த பாடங்கள் கூட ஒவ்வொன்றாய் ஞாபகம் வர, புரிந்துகொண்டேன் இதயம் இலகும்போழுது,எதுவும் சாத்தியமே என்று..
"என்ன கண்ணு இந்த முறை, முதல் மார்க் வாங்கிடுவ தானே!!!!... நல்லா மார்க் வாங்கின அப்டினா, பதினொன்னாம் வகுப்புக்கு கொங்கு பள்ளிகூடத்துல சேத்துறதா அப்பா சொல்லி இருக்காரு" என்ற அம்மாவின் வார்த்தையை கேட்கும்பொழுது, அத்தனை ஆனந்தம். "வாங்கிவிடுவேன் என்று நம்பிக்கையாய் கூறிவிட்டு செல்லும்பொழுது கொஞ்சம் பயமும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். "அம்மம்மா வீட்டுக்கு போறேன் நாளைக்கு" என்று கூறிய நிமிடத்தில், அம்மா குறிக்கிட்டு "அங்க எல்லாம் போக வேண்டாம், ஒழுங்கா வீட்டுலையே இரு, கிரிக்கெட் விளையாட போறேன்னு ஊர் ஊரா சுத்திரியாம்" என்று கூறிய வார்த்தை ஏதோ பயம் திணிக்க என்னுள், வழக்கமான எனது அஸ்திரத்தை தொடுத்தேன், " அம்மா, அம்மா, இந்த ஒருமுறை மட்டும் சரியா, அதுக்கப்புறம் எங்கேயும் போக மாட்டேன் நீயே சொன்னாலும், பன்னிரெண்டாவது எல்லாம் நல்லா படிக்கணும்ல, சரி சொல்லுமா, சரி சொல்லுமா" என முந்தானை பிடித்து கெஞ்ச, "சரி பத்திரமா இருக்கணும்" என்று புன்னகையுடன் உத்தரவு கொடுத்தாள். அது என்னவோ, மகனின் கெஞ்சல் ரசித்து, பிறகு அனுமதிப்பதில் அத்தனை ஆனந்தம் ஒவ்வொரு தாய்க்கும்...
அவ்வளவு தான், ஐந்து நிமிடத்தில் பயணத்துக்கு தேவையான அனைத்தும் தயாராகிவிட்டது.அந்த இரவுப்பொழுது நாளைய பயணத்தை எண்ணியே கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்தது பிறைநிலவு போல். அடுத்த நாள் பயணத்தில், ஆயிரம் கேள்விகள் என்னில், "விடுமுறைக்கு இங்கு தான் வருவாள?, இல்லை அங்கேயே இருந்துவிடுவாள?" என்று துளைத்துகொண்டே இருந்தது. எப்படியோ போய் சேர்ந்தேன், அம்மம்மாவை கண்டு நலம் விசாரித்து விட்டு, அவசர அவசரமாய் நண்பர்களை காணப்போவாதாய் கூறிவிட்டு, தெருக்களை மேய ஆரம்பித்தேன் படபடப்புடன்.
காணமுடியாத ஏக்கத்துடன் முடிவெடுத்தேன், அம்மம்மாவிடம் எப்படியாவது கருணை மலர் விடுமுறைக்கு வரும் வீடு எது என்று கேட்டுவிட வேண்டும், என்ற எனது தைரியத்திற்கு பரிசாய்., "சிவன் தெரு, கைஓடு போட்ட நாலாவது வீடு" என்று தெரிந்த நிமிடத்தில் உடல்முழுவதும் மென்மையாய் பரவும் அழகிய உணர்வை அறியமுடிந்தது.அவ்வளவு தான், அந்த தெரு, நாய்கள் கூட அத்தனை முறை கால்பதித்திருக்காது என நம்புகிறேன்.
அத்தனை முறை சுற்றி சுற்றி வந்தேன் பம்பரமாய். ஒவ்வொரு நாளும் காலையில் தேடிபார்த்து, அவள் இல்லா வீட்டை பலமுறை உற்று நோக்கிவிட்டு, நிச்சயம் மதியம் வந்துவிடுவாள் என்ற சமாதானத்துடன் கிளம்பும் எனக்கு தெரியும், மதியமும் இதே தான் நடக்கும் என. ஒரு வாரம் முழுதாய் ஓடியது. ஏதோ சோகம் முகத்தில் தொற்றிக்கொள்ள, ஏதோ ஏக்கம் நினைவில் தொற்றிக்கொள்ள,சுமக்க முடியா பாரத்துடன் இதயம் கனக்க, வாடும் என்னை, மலரச்செய்ய, நடந்துவந்தாள் அவள் வீடு நோக்கி தெருவில்.
சந்தனநிற தாவணியில், படியவாரி உச்சி வகுந்தெடுத்து, கொத்து மல்லிகையை வைத்து, நீண்டு வரும் புருவங்களை அத்தோடு நிற்கவும் என்று தடுத்து நிறுத்தும் குங்குமச்சிவப்பு நிற பொட்டு, அவள் கால் பிடித்து, கதைகள் பேசும், ஜல் ஜல் கொலுசு. அடையாளத்துடன் அவள் வருகையை உணர்ந்த தருணம், உடல் முழுவதும் ஓராயிரம் மாற்றங்கள் ஒரு நிமிடத்தில் அரேங்கேற, சொக்கித்தான் போனேன். ஆணிற்கும் வெட்கம் வரும் என்பதை தலைகுனிந்து தலைகுனிந்து அவளை ஓரப்பார்வையில் காண முயற்சித்த போது உணர்ந்தேன், அவளிடம் பேசிவிட வேண்டும் என்று எங்கிருந்தோ வந்த அசட்டு தைரியத்தில் ஓடினேன் அவளை நோக்கி. யாரென அவள் திரும்பி பார்த்த நொடியில் அத்தனை தைரியமும் என்னை விட்டு தெறித்து ஓட, செய்வதறியாது அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு நடையை கட்டிய என்னைப்பார்த்து இதழோரம் சிரிப்பை உதிர்த்தாள்.
அவ்வளவு தான் :):) மறுகணமே, உலகம் மறக்க, உள்ளம் பூரிக்க, உணர்வுகள் உடைந்து தேகம் சிலிர்க்க, முதல் முறை பூத்ததடி உடல்முழுவதும் ஏதோ...என்னதென்று பெயர்சூட்ட, மறுபடியும் வருவேனடி உனைக்கான, என என்னுள் எண்ணி, அவளில் நினைவை வைத்துவிட்டு, வழியில் பாதம் வைத்தேனடி பார்வையற்று...    
 
 


Wednesday, March 19, 2014

துரத்தும் நரிகள்..




வாழ்தல் என்ற ஒற்றை வார்த்தைக்கு அர்த்தம் அறியாமல், வீழ்தல் என்ற வார்த்தையை இன்னும் கட்டிக்கொண்டு,அழுதுகொண்டு தான் இருக்கிறோம் நாம்.உலகத்தின் அத்தனை நெறிமுறைகளும், ஒழுக்க கோடுகளும் ஒவ்வொன்றாய் நமக்கு நாமே வரைந்து கொண்டவைகள் தான். இனம் சரியான பாதையில் செல்லவும், தழைத்தோங்கவும் வரையப்பட்ட கோடுகள் இப்பொழுது மறித்து மண்ணில் சாய காரணியாக அமைந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

கல்லூரி முடித்து, கிட்டத்தட்ட இரண்டரையாண்டு கடுமையான தேடலுக்கு பின்னரே எனது சரித்திரத்தை எழுதினேன். எழுத தொடங்கும் முன்பு என்னுள் எண்ணிக்கொண்டேன், எப்படியாவது படித்த படிப்பிற்கு வேலைபெற்று விட்டால் போதும் எனக்கான அடையாளமும் கடமையும் முடிந்துவிடும், அவ்வளவே வாழ்க்கையும் கூட என்று பலமுறை நினைத்து நினைத்து என்னுள் விதையாகவே விழுந்து, மரமாய் விருட்சம் பெற்று இருந்தது இந்த எண்ணம். கஷ்டம் தீர்ந்துவிடும், முகம் பூத்துகொண்டே இருக்கும் ஒவ்வொருநாளும் புன்னகை என்ற பூவாய், என்ற கனவு கலையத்தொடங்கியது  சரித்திரம் ஆரம்பித்த சிறிது நாட்களிலே.

கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்வதில் தொடங்கி, திறமைசாலி என்ற பெயர் வாங்கியது வரை ஆயிரம் ஆயிரம் இலக்குகளை வைத்து வைத்து உடைத்தெறிந்தேன் ஒவ்வொன்றாய் வெற்றி என்ற கோடாரியுடன். மெதுவாய் சறுக்க ஆரம்பித்தது தனிப்பட்ட வாழ்க்கையிலும், வேலை முன்னேற்றத்திலும்.

அவ்வளவு தான் உடைய ஆரம்பித்தது அத்தனை சாதனைகளும் ஒன்றன் பின் ஒன்றாய்.கண்மூடித்தனமான இலக்கை நோக்கி ஓடிய மிருக பயணம், நம்பிக்கை என்ற பெரிய ஆயுதத்தை உடைத்தே போட்டது. விளைவு- கோபம், வெறுமை, நாட்டமின்மை என்ற ஒவ்வொன்றாய் விதைத்து வளர செய்தது. ஜீரணித்துக்கொள்ள முடியா மனநிலையுடன் ஏற்றுக்கொண்டேன் வேலையிலிருந்து தூக்கி எறியபட்டதை. எப்பொழுதெல்லாம் வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லையோ அப்பொழுதெல்லாம் மனித இனம் மட்டுமே எடுக்கும் தற்கொலை என்ற அதே முயற்சியை கையில் எடுக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அதீதமான மனித இனமும் இப்படி தான் தன்னை மாய்த்துகொண்டிருக்கிறது.

தோல்வி எப்படியோ நம்மை பலவழிகளில் தொட்டிருக்கும்,நட்பாகவோ, காதலாகவோ, பிரிவாகவோ, இயலாமையாகவோ, சரிந்த தொழிலாளவோ, குடும்ப வாழ்க்கையின் சிக்கலாகவோ இப்படி மாறுபட்ட வழிகளில்.தோல்வியின் வலியை நம்மில் அதிகம் உணரும் அதீத தருணங்களை இந்த சமூகம் தான் தந்திருக்கும்.நடை பயிலும் குழந்தை கூட, தடுக்கி விழுந்துவிடும் தருணங்களில் தன் தோல்வியை உணர்வதில்லை, இந்த சமூகம் கவனிக்காதவரை. அழ ஆரம்பித்துவிடும் தான் வீழ்ந்ததை, சமூகம் கவனித்துவிட்ட அந்த தருணத்தில்.

இதுவரை கடந்து சென்ற தலைமுறை, நம்மோடு பயணிக்கும் மனிதஇன வாழ்க்கை முறை இவற்றை கவனித்து கவனித்து நமது வாழ்க்கையை அதற்கேற்றார் போல் சரி செய்துகொண்டு வந்ததில் தான் பிழை இருப்பதை உணரமுடியவில்லை.பணம், கௌரவம், சுயமரியாதை இதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்திருக்கிறேன், இந்த பயணத்தில் சிறிது சறுக்கலில் விழுந்து, பயணத்தை தொடர முடியாமல் போனதிற்கு வாழ்க்கை அவ்வளவு தான் என்ற முடிவில் முடித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறேன் வாழ்க்கையை.

கிணத்துல விழுந்த இந்த உசுர, கொஞ்சமும் யோசிக்காம குதிச்சு முழுகி, காப்பத்திபுட்டு கரையேறின 60 வயசு முதியவர பார்த்து "சந்தோசம் பெரியவரே,ஏனுங்க பெரியவரே வயசான காலத்துல இவ்ளோ பெரிய கெணத்துல குதிச்சீங்களே பயமா இல்லையா?" என்று கேள்வி கேட்டவங்கள பார்த்து, "மிஞ்சி மிஞ்சி போனா என்ன தம்பி ஆகும் இந்த உசிர் போகும் அவ்வளவு தானே, பயம் எதுக்கு தம்பி" என்று நடை கட்டின பெரியவர நானும் மிரட்சியுடன் பார்த்தேன்.

எனக்குள் மெதுவாய் புரிய ஆரம்பித்தது, இலக்கு என்ற ஒன்றை நோக்கி ஓடும்போது, நான் இயந்திரமாய் மாற ஆரம்பித்திருப்பது.வாழ்க்கையை ரசித்துக்கொண்டல்லவா பயணித்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதிகபட்சம் இன்னும் ஒரு 40 ஆண்டுகாலம் தான் வாழ்ந்துவிட போகிறோம். சரியாக நாட்களில் எண்ணினால் 14600 நாட்கள் அவ்வளவே. நிச்சயம் இயற்கை நிகழ்வுகள் ,பிரச்சனை என்ற  ஒருவிதத்தில் நம்மை துரத்திகொண்டே தான் இருக்கும்.தீர்வு-, சில நேரங்களில் ஓடுவதும், சில நேரங்களில் நெஞ்சு நிமிர்த்தி போராடுவதுமாய் இருக்க வேண்டுமே தவிர,ஆட்டதிற்கு நான் வரவில்லை என்று மாய்த்துகொள்வதாய்  இருக்க கூடாது

இலக்கு என்பது எப்பொழுதும் தானாய் தன்னுள் விரும்பி அமையவேண்டும். எப்பொழுதெல்லாம் சமுதாய பிம்பம் பார்த்து, தனக்குள் கட்டாய ஒன்றாய் அமர்கிறதோ அப்பொழுதெல்லாம் இலக்கே நம்மின் இறுதிஊர்வலத்திற்கு    அச்சாரமிட்டு விடும் என்பதை உணர்ந்தவனாய் பயணிக்கிறேன், வாழ்க்கையை ரசித்துக்கொண்டு...   

Wednesday, March 12, 2014

வங்கியில் ஒருநாள்….


வழக்கம்போல் இன்றும் வங்கி ஒன்பது மணிக்கு சரியாக திறக்கப்பட்டது.ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து வங்கி ஊழியர்களும் வந்து சேர இன்னும் அரைமணி நேரம் பிடித்தது.திறப்பதற்கு முன்பு இருந்தே இந்த கிராமத்து கூட்டம் அலைமோதியது, பணம் எடுக்கவும், பணம் பாதுகாக்கவும், கடன் பெறவும், கடனை அடைக்கவும் இப்படி ஏதோ ஏதோ காரணங்களுக்காய்.காத்திருக்கும் மக்களுக்கு வேண்டுமென்றால் பதட்டமும் அவசரமும் இருக்கலாம், அனால் எனது வங்கி ஊழியர்கள் எப்பொழுதும் நிதானத்தையும், பொறுமையையும் கைவிட்டதில்லை.

“லட்சுமியம்மா, சீக்கிரம் டீ வாங்கிட்டு வாங்க” என்று ஒவ்வொரு ஊழியராய் மனு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் வங்கி உதவி பணியாளரிடம்”. அவரும் இதோ வருகிறேன் என்று அவசர அவசரமாய் ஓடுவார், அவர் வரும்வரை காத்திருந்து, டீ பருகியவுடன் மட்டுமே தனது வேலை நோக்கி செல்வார்கள்.அதுவரை பதட்டத்துடனோ, அவசரத்துடன் வந்து கெஞ்சும் சாமன்ய கிராமத்து மனிதன் “அர்ச்சனை” வாங்கிகொண்டு அமர்ந்திருக்கும் சூழல் மட்டுமே இங்கே வழக்கமாய் நிகழும்.

இன்றும் அப்படி தான் நடந்தது.சாமன்ய கிராமத்து மனிதனுக்கு எப்படி இத்தனை விதிமுறைகளும், படிவங்களும், பூர்த்தி செய்யும் முறை தெரிந்திருக்கும்?.. தெரிந்திருக்காதல்லவா, அதனால் அவன், எனது வங்கி கடவுள்களிடம் “அர்ச்சனை” வாங்கியே தீரவேண்டும் சாமான்ய பக்தனாய். வேறு வழியில்லை என்பது இந்த நிகழ்வுகளை கடந்து செல்லும் அவர்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் இது புதிதல்ல என்று..சில நேரங்களில் அவமானங்களை தாங்கியே ஆக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறதல்லவா.

ஏறக்குறைய 50 வயதுகளை தாண்டிய,உடைகளில் ஏழ்மை காட்டும், கிழிந்த உடைகளில் அங்கம் மறைக்க பாடுபடும், கிட்டத்தட்ட ஒரு 30 தாய்மார்கள் கையில் வங்கி அட்டையுடன், வங்கி திறப்பதற்கு முன்பே காத்திருந்தனர். “காசு எடுக்கணும் சாமி” என்று கெஞ்சிய ஒரு முதியவளிடம் எனது வங்கி ஊழியர் ஒரு படிவத்தை கிழித்து கொடுக்க, “அப்படியே புல்லப் பண்ணிகொடுங்க சாமி” என்ற கெஞ்சியவளிடம், “ம்ம் அப்படியே பண்ணிடறேன், நீ வந்து என் இடத்துல உட்கார்ந்துகிறியா, நான் வேணும்னா வெளிய போய்டுறேன், வந்துட்டாங்க சாமி, பூமினுகிட்டு ” என்று கர்ஜித்தார். அவமானத்தை சுமந்தாலும் ஒவ்வொருவராய் கெஞ்ச இதே அர்ச்சனை தான் கிடைத்தது அனைவரிடமும். பாவமாய் கைகளில் ஏந்திக்கொண்டு அங்கும் இங்கும் அத்தனை தாய்மார்களும் அலைந்துகொண்டே தான் இருந்தார்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.

வரிசையில் நின்ற மற்ற மனிதர்களும் தனக்கான வேலைகளை முடித்துவிட முண்டியடித்துகொண்டிருந்த நேரத்தில், கெஞ்சும் இவர்களை கவனிக்க விரும்பவில்லை என்பது தெளிவாய் தெரிந்தது. இது தினந்தோறும் அரங்கேறும் நிகழ்வு தான் இது ஒன்று புதிது இல்லை எனது வங்கிக்கு. சிறிது நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன், கையில் தனது குழந்தை, மனைவி, அப்பாவுடன் வந்து இருந்தான்.

கொஞ்சம் நாகரிகமான உடை, வழக்கமாய் நிற்கும் கிராமத்து வேட்டி, சட்டைகளுக்கு மத்தியில் கொஞ்சம் வேறுபட்டிருந்தது. அந்த வயதான மனிதரைப் பார்த்ததும் அலுவலர்கள், “வாங்க” என்று புன்னைகைத்துவிட்டு, “என்ன இந்த பக்கம்” என்ற கேள்வியை வைத்தவரிடம், ” மருமகள் வந்து இருக்காங்க, பேங்க் லாக்கர்ல கொஞ்சம் நகைகள் வைக்கணும்” என்ற பெரியவரிடம்.” சரிங்க கொஞ்சம் காத்திருங்க, நான் முடிச்சுதறேன்” என்று பவ்வியமாய் பதுங்கினார் ஒரு அலுவலர்.

அந்த நேரத்தில் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தது அந்த தாய்மார்கள் கூட்டம் ஒரு அலுவலரிடம், மீண்டும் அதே அர்ச்சனை . இந்த முறை “என்ன உங்க பிரச்சனை” என்று ஒரு குரல் கேட்க, அவர்களுடன் நானும் பார்த்தேன் யாரென்று ஆவலாய்.அந்த இளைஞன் கையில் குழந்தையுடன் அவர்களை நெருங்கினான். “இதை புல்லப் பண்ணனும் சாமி, காலைல இருந்து நிக்குறோம்” என்று கூறியதும், வேகமாய் குழந்தையை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, “வாங்க நான் முடிச்சுதறேன்” என்று பேனாவை எடுத்ததும், அலுவலர் “தம்பி நீங்க எதுக்கு இந்த வேலைலாம் பாக்குறீங்க, அவுங்களுக்கு வேற வேலை இல்லை, சும்மா நம்ம உயிரை வாங்குங்க, விடு தம்பி” என்று அலுவலர் கூறிய நிமிடத்தில். “இதுல்ல என்னங்க சிரமம்” என்று கூறினான் இளைஞன். கோபத்தின் உச்சிக்கு சென்ற அலுவலர், “வெளிய போயி சத்தம் போடுங்க, தம்பி நீயும் கிளம்புப்பா என்றதும், சரியென்று கிளம்பினான் அவர்களை கூட்டிக்கொண்டு வெளியே.

(நண்பரின் உதவியுடன் வெளியில் நடந்ததை உங்களுக்கு மீண்டும் பகிர்கிறேன்).” ஒவ்வொருத்தரா கொடுங்கம்மா, எழுதித்தறேன்”. என்றான் அவன். இடையிடையே கேள்விகளை கேட்டான் அவர்களை நோக்கி ,” இதுக்கு முன்னாடி யார் எழுதி தருவாங்க” என்றான் .” ஒவ்வொரு மாதமும் இப்படி தான் தம்பி திட்டு வாங்கிகிட்டு தான் இருப்போம், வீட்டுல யாரையாவது கூட்டிட்டு வரலாம்னு பாத்தா, இங்க வந்தா ஒரு நாள் வீணா போகிடும் தம்பி.அதான் ஆம்பிளைங்க இங்க வரது இல்ல. ஒரு நாள் கூலியாவது மிச்சம் ஆகும்ல அதான் நாங்களே வந்துடுவோம். இந்த கவர்ன்மெண்ட் தான் தம்பி வேலை செஞ்ச காச கைல கொடுக்காம இப்படி பேங்க்ல போட்டு எங்கள கொல்றாங்க” என்று முடித்ததும், கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு உங்களை மாதிரி யாரவது வந்தா நாங்க பொழச்சோம் தம்பி, இல்லைனா அவ்ளோ தான்”. என்றார் அந்த முதியவள்.”சரி உங்களில் யாருக்காவது எழுத படிக்க தெரியும் என்றால் கூறுங்கள், நான் சொல்லித்தருகிறேன்” என்றான் அவன். அனைவரும் ஒன்றாய் கூறிய அந்த வாக்கியம் ,” எழுத படிக்க தெரிஞ்சா நாங்க ஏன் சாமி இவுங்ககிட்ட இப்படி திட்டு வாங்குறோம்”.

பேசிக்கொண்டு இருந்த அந்த நிமிடம் அந்த இளைஞனின் அப்பா, உள்ளிருந்து அழைத்தார்.இவனோ “கொஞ்சம் பொறுங்கப்பா, முடிசிட்டு வரேன்” என்ற பதிலை தன் அப்பாவை நோக்கி அனுப்பிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.சிறிதுநேரத்தில் உள்ளிருந்து குழந்தை கதறும் சத்தம் நோக்கி அலுவலகமே திரும்ப, அவனது மனைவி உள்ளிருந்து வந்தாள்,கதறிய குழந்தையுடன், “என்னங்க, பத்து நிமிசத்துல முடிஞ்சிடும்னு குழந்தைக்கு பால் கூட எடுத்து வரல, அதான் அழுகுது” என்ற மனைவியிடம், கொஞ்சம் பொறுத்துக்க, வந்துவிடுகிறேன் என்று மீண்டும் எழுத ஆரம்பித்தான். வேகமாய் முடித்துவிட்டு, “கவலைப்படாதீங்கம்மா, உங்க பிரச்சனையை பத்தி அதிகாரியிடம் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு வந்தான் உள்ளே.

வந்த வேலையை முடித்துவிட்ட வெளி வர முயற்சிக்கையில், வங்கி அலுவலர் மீண்டும் ஒருமுறை கூறினார்.”ஏன் தம்பி, நீங்க வந்த நேரத்துக்கு, எப்பவே வீட்டுக்கு போயிருக்கலாம், குழந்தையும் அழுவாது, நமக்கு எதுக்கு தம்பி இதெல்லாம், இவுங்க எல்லாம் இப்படி தான் எப்பவும், அதுகெல்லாம் கவலைப்பட்டா, நம்ம வேலை தான் கேட்டு போகும்” என்றவரிடம், ” இதுல என்னங்க இருக்கு, நம்ம அப்பா அம்மா இப்படி கெஞ்சினா அப்படியேவா விட்டுட்டு போய்டுவோம்?” என்ற பதிலால் கன்னத்தில் அறைந்தான்.

மீண்டும் மேலதிகாரி அறைக்குள் நுழைந்து ஏதோ எதோ பேசினான். எனக்கு நன்றாய் தெரியும், இப்படி எத்தனை பேர் அவரிடம் பேசினாலும், அவர் கூறும் ஒரே வார்த்தை “ஓபீசுல இதெல்லாம் சாதாரணம்” என்று தனக்கே உரிய மலையாள வாடையில் பதில் சொல்லி இருப்பார். ஏதோ திருப்தியுடன் அறை வெளியே வந்த அவன், திடீரென என்னை நோக்கி உரக்கமாய் கூறினான்,

“எப்பா மேலதிகாரிகளா, கொள்ளை, ரத்தம் சிந்தும் கொலைக்கு மட்டும் தான் இதை கவனிப்பீங்களா?, அநீயத்துக்கும், அவமான கொலைக்கு எல்லாம் இதை கவனிச்சு நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா”?. கூறி முடித்துவிட்டு அழுதுகொண்டிருக்கும் தனது குழந்தையை கையில் வாங்கி தட்டிகொடுத்துகொண்டே கிளம்ப ஆரம்பித்தவனிடம், ” மவராசனா இருக்கணும் தம்பி, நீ” என்று கைபிடித்த முதியவளிடம், வெறும் புன்னைகையை மட்டும் உதிர்த்துவிட்டு வெளியேறினான்.

இவன் ஒருவனால் மொத்த தேசத்தையும் திருப்பி போட்டு விடமுடியாது என்று தெரிந்தாலும், சில உள்ளங்களை மகிழச்செய்ய முடியும் என்பதை உணர்ந்தவனாய், நானும் எனது நண்பனும் உள்ளம்கனிந்த நன்றியை தெரிவித்து கொண்டு, இவனைப் போன்றொரு இன்னொரு மனிதனுக்காய் காத்திருக்கிறோம் மீண்டும்

நட்புடன்,
Camera 02,Camera 05
இந்தியன் வங்கி,



Wednesday, March 5, 2014

மடி சாய்ந்து கதைகள் பேச..


தனிமைப்படுத்துதல் (நிராகரிக்கப்படுதல்) என்பது அணு அணுவாய் ஒரு மனிதனை உயிரோடு துண்டு துண்டாய் வெட்டி எறிவதற்கு சமம் என்று தனிமையை உணர்ந்த(வாழ்ந்த) ஒவ்வொரு மனிதனுக்கு தெரியும் என நம்புகிறேன்.தனிமை என்ற ஆயுதம் மட்டுமே, சதைகளை தாண்டி, மனதை துளைத்து, உணர்வை,சொட்டு சொட்டாய் உருக்கி, நிலைகுலையச்செய்து, சாய்த்துவிடும் ஒரு கொடிய ஆயுதம்.

பெண்மை என்ற அழகிய கதாபாத்திரத்தை சுமந்து கொண்டு இந்த உலக மேடைக்கு வந்து இருப்பாய் என்று எனக்கு நன்றாகத்தெரியும். பதின்வயதுகளை கடந்து, பல உலக இன்னல்களையும், பெண்மை என்ற கதாபாத்திரத்திர்கே உரிய அந்த நாட்கள் என்ற இன்னலையும் கடந்து வந்து இருப்பாய் சர்வமும் தாங்கும் ஒப்பற்ற சக்தியாய்.விரும்பியோ அல்லது விரும்பாமலோ, மணவாழ்க்கை என்றொரு புதிய கதாபாத்திரத்தையும் சேர்ந்தே சுமந்திருப்பாய். கட்டயமாவோ அல்லது காமத்தோடு தாம்பத்யம் சமர்பித்திருப்பாய் என அறிவேன்.

அந்த நாட்கள் அடங்கி, உன்னுள் விழுந்திருப்பேன் நான் விதையாய், அந்த கணமே அம்மா என்றொரு இன்னொரு கதாபாத்திரத்தையும் சேர்ந்தே சுமந்திருப்பாய் ஆசையாய். உன்னுள் மாறிய ஒவ்வொரு உணர்வு மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் கண்டு ரசித்திருப்பாய், உன்னுள் அசௌகரியத்தை ஏற்படுத்திய போதும்.

திகட்டிய போதும் தேடி தேடி உண்டு இருப்பாய் நான் வளர.கொஞ்சம் நிறைஞ்சும், கொஞ்சம் சிந்தியும் ஆயிரம் இன்னல்களை தாங்கி இருப்பாய் எனக்காய். உன் வயிறு தடவி உள்ளம் மகிழ்ந்திருப்பாய், என்னை தொட்டு பார்க்கும் ஆசையில். ஆளில்லா தருணங்களில் அன்பாய் பேசி இருப்பாய் என்னிடம், ஆர்வத்தில் வார்த்தைகளில் கொஞ்சி இருப்பாய், “என் உயிர், நீ தான்” என்று.ஏதோ ஒரு இரவில் தெரியாமல் நீ குறுக்கி தூங்கியதற்கு உன்னை நீயே திட்டிக்கொண்டிருப்பாய். அப்பாவின் அந்தரங்க தேவையை கூட மறுத்திருப்பாய் என் நலனுக்காய். வாரங்கள் மாதங்கள் ஆக ஆக நீ தேய்ந்தே போகி இருப்பாய் என்னைக்கானும் ஏக்கத்தில் பிறை நிலவாய்..

பத்து திங்கள் பறந்தோடிட உன்னுள் கனவுகள் ஏராளம் கண்டு இருப்பாய். என்னை வளர்க்க இயற்கை தந்த உணவாய்,உன் மார்பு மாற்றங்களை, உடல் சிலிர்த்து, உள்ளம் பூரித்து கர்வமாய் ஏற்று இருப்பாய் தாய்மையாய். என் ஒவ்வொரு அசைவுகளிலும், எட்டி உதைத்த நொடிகளிலும், கண்கள் கலங்கி, மீண்டும் உதைக்கும் தருனத்திற்க்காய் காத்திருந்திருப்பாய். உன் ஓருடலில், என் உடலை சேர்த்து, ஈருடலும் ஓருடலே என்று தாய்மைக்கே உரிய இலக்கணத்தை நீயும் ஒருமுறை நிரூபித்திருப்பாய் நெஞ்சை நிமிர்த்தி. நான் வெளிவர துடித்த கடைசி நாட்களில், உள்ளம் உவகையுற்று,கடவுளிடம் மன்றாடியிருப்பாய் எனக்காய்.

உன் உடல் உடைத்து, இவ்வுலகை காண நான் செய்த முயற்சியில், உன்னை காயம் செய்த போதும், என்னை ஆசை ஆசையாய் முத்தமிட்டு இருப்பாய். உன் கரம் தொட்ட நொடியினில் கண்டுகொண்டிருப்பேன் நீ என் அம்மா என. சந்தோசத்தில் நீயும் உறங்க, நானும் உறங்க.., தண்டிக்கபெற்றேன்.

என் தேகம் கிழிந்து ரத்தம் கொட்டியபோதும், என்னை சுற்றி நாற்றம் அடித்தபோதும் கதறாத நான், நீ அருகில் இல்லை வெகுநேரம் என்றுணர்ந்த தருணத்தில் நான் கதறிய என் குரல், சாலையோர குப்பைத்தொட்டியை மட்டுமே தாண்டி ஒலித்தது. வெறும் உணவை கொட்டும் இடமாய் உணராமல் உனக்குமெனக்குமான பிணைப்பாய் எண்ணி, உன் மார்பைத்தேடி, வாய் பிளந்த என் உதடுகள் காய்ந்து போனது நீ இன்றி.

வெகுநேர கதறலுக்கு பிறகு எங்கோ போய் சேர்ந்தேன் . கதறி இருப்பாய் நெருப்பாய், கொதித்திருப்பாய் எனக்காய். உன் கதறல் அடக்க கோடி கோடி உக்திகளை கையாண்டிருப்பார்கள் உன்னிடம். மனமுடைந்து பித்துபுடித்து உண்ண மறுத்து, தூக்கம் மறந்து, என்னை நினைத்து வெடித்தழுதிருப்பாய் பாவம் என் முகம் காண மீண்டுமொருமுறை.

மாதங்கள் நகர்ந்து வருடங்கள் ஓட, எனக்கானதை நானே செய்துகொண்டேன் நீயின்றி. தாய் தலைவார குழந்தை தலையசைக்க காட்சிகளை பார்த்தொனரும் தருணங்களில் கண்ணீர் சொட்டுகிறதடி தாயே உனைக்கான. தன் மகள் அழுக்காக்கிய துணிகளை திட்டிக்கொண்டே துவைக்கும் தாயை காணும் கணத்தில் எங்கிப்போகுதடி உள்ளம் உன் மொழி தேடி. முந்தானையில் மறைத்து, தன் மார்பில், மகள் உதடு பதித்து,தன் முகம் மலரும் தாயை காணுகையில், ஓராயிரம் மையில்களாய் இருந்தாலும் ஓடி வந்து உன் மடி தேடி விழுவேன் தாயே.

தெரிந்தோ தெரியாமலோ தனிமைப்படுத்தப்பட்டேன் பாவமாய்.அன்பெனும் உணர்வை வெறும் வார்த்தையாய் காதிலும், காகிதத்திலும் மட்டுமே உணர்கிறேன்.வெளியாட்கள் கேட்கும்பொழுது சமாளித்துவிடுகிறேன், அம்மா ஊரிலிருப்பதாய். ஆனாலும் பழகிய பத்துநிமிடங்களில் புரிந்துகொள்கிறார்கள் அனாதையென்று, அன்பறியா என் முரடுத்தனத்திலிருந்து.என்ன செய்ய, நானும் தேடுகிறேன் கற்பனையில் உன் முகம் வைத்து ஒவ்வொரு பெண்ணிற்கும்.

அனாதை தழும்பை உடைக்க,முகம் தெரியாமல் உனைத்தேடும் நானும், தாய்மை பந்தம் பதிக்க, உயிரில்லாது எனைத்தேடும் நீயும், எப்படி சந்திப்போம் தாயே?. எப்பொழுதாவது சந்திப்போமா!!!!!!!! …ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் மடி சாய்ந்து கதைகள் பேச….

Monday, March 3, 2014

முதல் பார்வையின் உச்சம் – 1


நமது வாழ்க்கையின் சில யதார்த்த நிகழ்வுகள், நம்முள் அசைபோடும் தருணங்களில் அத்தனை இன்பத்தை விதைத்துவிடும் என்பதை உணர்ந்திருக்க முடியும் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனாலும். பதின் வயது பருவங்கள் கடந்து சென்ற அதீத நிகழ்வுகளில், காதல் என்ற உணர்வே அதிகமாய் வாழ்ந்திருக்கும் என்று நம்புகிறேன் நம்முள்.

“கடவுளை கும்பிடு, உனக்கு நல்லது” என்று கோடி முறை, என்னுள் ஒழுக்கத்தை விதைக்க பாடுபடும் எனது தாய்க்கு தெரிந்திருக்குமோ என்னவோ, என்றாவது ஒருநாள் என் பாதம் கோவிலை சுற்றிவரும் என. பதின்வயதுகளில், கடவுள் என்பவர் அம்மாவால் பரிந்துரை செய்யப்படும், பிடிக்காத எதிரி என்றே என்னுள் விதைத்திருந்தேன். அதனாலோ என்னவோ என்னுள் வெற்றிடம் எப்பொழுதும், இன்பத்திலும், துன்பத்திலும் கூட ஒரு தெளிவு இருந்ததில்லை.

அப்படித்தான் வழக்கமான கோடைவிடுமுறை என்னை ஈரோட்டிற்கு கொண்டு சென்றது. கொஞ்சும் கொங்கு தமிழ் அனைவரது உதட்டிலும் அழகாய் ஜனிக்கும். தெருக்களில் இறங்கி, அம்மம்மா வீட்டிற்கு செல்லும் பாதை எல்லாம், கொங்கு தமிழ் சிதறி விழும், “என்ன கண்ணு , அம்மம்மாவ பார்க்க ஓடி வந்துட்ட போல இருக்கு.எத்தனை நாளு லீவு? என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளாமல் அடுத்த அடிகூட நகர விடுவதில்லை தூரத்து சொந்தங்கள்.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, இந்த பழமொழியில் கிரிக்கெட் அப்டிங்கற ஒரு வார்த்தையை முதலில் சேர்த்தால் அது மிகையாகாது. ஊருக்கு ஒரு இருபது பேராவது இப்படி பார்க்கலாம் கிரிக்கெட் மட்டையுடன்.” நானும் வரலாமுங்களா ஆட்டத்துக்கு” என ஆரம்பித்த பவ்வியம், சிறிதுநாட்களில் தொலைந்து போய்விட்டது என்றே கூறலாம், விஜய் என்பக்கம் தான் என்று சண்டைபோட்டுகொள்ளும் அளவிற்கு கொண்டு சேர்த்தது விளையாட்டின் மீதான அதீத ஆர்வம்.

“சரி, நாளைக்கு கிளம்புறேன் அம்மம்மா, அம்மா சொல்லித்தான் விட்டுச்சு போயிட்டு சீக்கிரம் வந்திடு அப்டின்னு”.என்று சொல்லிமுடிக்கும் பொழுது, “இன்னும் பத்து நாலு இருந்துட்டு தான் போகணும் கண்ணு, காப்பு கட்டிட்டாங்க, பூவு வைச்சிட்டாங்க கோவில்ல,கோவில் திருவிழா முடிஞ்சுதான் போகணும் கண்ணு” என்று அம்மம்மா கூறியது சந்தோசம்தான். விளையாட்டின் மீதான அதீதத்தால் எங்கள் மீது விழுந்தே சூரிய ஒளி கருத்து போனது என்றே அடித்துகூறிடலாம். அதன் மீதான மோகமோ என்னவோ,என்னுள் உடல்முழுவதும் மகிழ்ச்சியை பரவச்செய்தது.

கோவில் பண்டிகைக்கும் எனக்கும் வெகுதொலைவு எப்பொழுதும்.இறைவன் பாடல்களில் தொடங்கி, சமீபத்திய சினிமாப்பாடல்கள் வரை ஒலிக்க ஆரம்பித்தது ஊரெங்கும். ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் பாடல்கள் சந்தோசத்தை ஊற்றின, அவ்வப்பொழுது ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துகொண்டே இருந்தார்கள், “எப்பா, இந்த தீர்த்த குடம் எடுக்குறவங்க எல்லாம் சீக்கிரம் வாங்கப்பா கோவிலுக்கு, தீர்த்தம் எடுக்க போகணும்”. அம்மம்மா வேகமாய் வந்து, கண்ணு நீ நல்ல மார்க் எடுக்கனும்னு வேண்டியிருந்தேன், போயிட்டு வா என்றதும் அத்தனை கோபத்துடன் “உன்னைய யார் இதெல்லாம் பண்ண சொன்னாம்மா” கூறிக்கொண்டே கிளம்பினேன் கோவிலுக்கு குடத்துடன்.

ஊர்பெரியவங்க எல்லாம் முறுக்கு மீசையோட உட்கார்ந்து இருந்தாங்க வண்டியில. என்னடா இது வேலை என்ற சலித்துக்கொண்டு ஏறி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் தாவணியுடன் கையில் குடத்துடன் கொங்கு நாட்டிற்கே உரிய அடக்கத்துடன், அத்தனை மங்களகரமாய் வந்து நின்றாள் வண்டியின் அருகே. குடம் கொடுக்க வந்திருப்பா யாருகிட்டயாவது எனநினைத்து முடிப்பதற்குள் வண்டியில் ஏறினாள். அருகே வந்துநின்றுகொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் கையில் குடத்துடன். சந்தோசத்தில் சில நொடிகள் விட்டுவிட்டு பார்க்க தொடங்கினேன்,அங்கும் இங்கும் பார்ப்பதுபோல்.

நடுவாகு, குளித்துமுடித்த கூந்தல், தன்னை உணர்த்திகொள்ள அத்தனை ஆசையுடன் காற்றுடன் தொட்டு பேசிய நேரத்தில். ஊஞ்சலாய் அசைந்தாடிய மனத்தை கட்டுப்படுத்த, எதோ சினிமாபாடல்களை எல்லாம் யதார்த்தமாய் முனுமுனுக்க வேண்டியிருந்தது. என்ன செய்ய?. கலைந்த கூந்தலோடு நான் களைந்து போய்விடாமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்ய வேண்டியிருந்தது. இடையிடையே “கடவுள் கண்ண குத்திட போறாருன்னு வேற பயம்”.முகம் பார்க்கும் ஆவலில் ஒருசில வினாடிகள் அதிகமாய் உற்று பார்த்த நொடியில், அவளது கண்ணோடு நேருக்கு நேர் மோதிவிட வேண்டியதாயிற்று, அடுத்த நொடியில் இரண்டு முகங்களும் வெவ்வேறு எதிர் திசையில் திரும்பிய நிமிடத்தில் அத்தனை மாற்றங்கள் கண்களிலும் உணர்விலும்.

பதிந்தது முகம் முழுவதும் மூன்றே வினாடிகளில். அந்த மூன்று மணிநேரமும் இந்த மூன்றே வினாடிப்பர்வையில் திளைத்தது. இடையிடையே உற்று நோக்கியதில் புரிந்தது, எப்பொழுதும் ஒழுக்கம் மட்டுமே பேசும் கண்கள், உண்மையை மட்டுமே பார்க்கும் உதடுகள், கோபத்தின் உச்சியை காட்டும் கூர்மையான மூக்கின் நுனியில், கொஞ்சம் கிறங்கியும், பயந்தும்போயி இருந்தேன் என்பது வாகனத்தின் பலகைக்கு தெரிந்து இருக்கும் எனது இறுக்கமான பிடியிலிருந்து. கோவில் நெருங்கியபோது பேச எத்தனித்த என்னை திரும்பி பாராமல் கிளம்பினாள்.

தொடர்ந்து செல்ல முயற்சிக்கையில், ” என்ன கண்ணு கருணைமலர், இந்த வருசமுமா” என்ற சத்தம் வந்த திசையை நோக்கி தலை திருப்ப, எனது அம்மம்மா அவளிடம் ஏதோ பேசிவிட்டு, என்னை வரவேற்று “கண்ணு, போயிட்டு வந்துட்டியா, வீட்டுக்கு போலாம் வா” என்று கூறிய நிமிடத்தில், நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஏதோ ஒரு நம்பிக்கையில், பிரிய மனமின்றி நகர்ந்தேன். “கண்ணு, இந்த கருணைமலர் இருக்குல, நல்ல பொண்ணு, படிப்புல கெட்டிக்காரி, கஷ்டப்பட்டு மேல வந்து இருக்காங்க அவுங்க குடும்பம், ஒழுக்கமான பொண்ணு, பாரு தீர்த்த குடம் ஒவ்வொரு வருசமும் தவறாம எடுக்குறா, என்று அடுக்கடுக்காய் அடுக்கி வைத்ததை எல்லாம் முன்பே உணர்ந்தவனாய், ஒப்புக்கு கேட்டுக்கொண்டே வீட்டிற்கு நடந்தேன்.

வீடு எங்க இருக்கிறது என கேட்க பயமுற்று, தேடினேன் சில தெருக்களில். பண்டிகை முடிஞ்சு வெறிச்சோடி கிடந்த கோவிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தேன் பாவமாய்,ஒரு முறை பார்த்துவிட.

எப்படியோ பயத்தை மறைத்துக்கொண்டு, “ஏன் அம்மம்மா எந்த பள்ளியில படிக்குது அந்த பொண்ணு, நல்ல பள்ளிக்கூடமா அது, எங்க இருக்குது” மொட்டையாய் உதிர்த்த என் கேள்விக்கு பதிலாய் இன்னொரு கேள்வியை வைத்தாங்க என் அம்மம்மா. “எந்த பொண்ணுடா?”. “அதான் கருணைமலர்” .என்றதும், அந்த பொண்ணா?., அவுங்க சொந்த ஊர்ல படிக்கிறா, பள்ளிக்கூடம் பேர் எல்லாம் தெரியாது, லீவு விடுறப்பா எல்லாம் இங்க வந்துட்டு போகும்.

ஒற்றை பார்வையில் விழுந்துவிட்ட என்னை, அவள் மீண்டும் மீட்டெடுக்க,அடுத்த விடுமுறையில் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில்,மெதுவாய் விரல்களை மடக்கி எண்ண ஆரம்பித்தேன், அடுத்த தேர்வுக்கான மாதத்தை., “ஜனவரி,பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்”..



Thursday, February 27, 2014

நான் ஹீரோ(வுடன்)….

ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளும் ஹீரோ என்ற அசைக்கமுடியா ஏதோ ஒரு ஒற்றை உருவம் பதிந்திருக்கும் என்பது கொஞ்சம் மறுக்க முடியா உண்மை தான். அந்த உருவத்தை கண்ணெதிரே காணும் நேரங்களில் திக்குமுக்கடித்தான் போவோம்.

எனது ஹீரோவும் என்னை சிறுவயதிலிருந்தே பாதித்தவர் தான்.அதீதப்பட்ட இளைஞர்களை பாதித்தவர் என்றே தெளிவாய் கூறிவிடலாம். சச்சின் இது பெயரல்ல – ஒரு சாம்ராஜ்யம். அவரை பார்த்துவிட வேண்டும்,பேசி விட வேண்டும் என்று வெகுநாட்களாய் ஏங்கியிருக்கிறேன். காலத்திற்காய் காத்திருந்தேன் ஒரு நாள் நிச்சயம் கனியுமென்று.

அன்றொருநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருப்பதாய் அறிந்தேன். நடக்கவிருக்கும் ஒரு பந்தையத்திற்கு ஒருநாள் முன்பே வந்துவிட்டதை அறிந்தேன். அதுமட்டுமன்றி பந்தையத்திற்கு முந்தைய நாள் பயிற்சி ஆட்டம் ஆடுவதாக அறிந்தவுடன் மைதானம் நோக்கினேன். மைதான அலுவலகத்துக்கு விரைந்தேன். மன்றாடினேன் காணவேண்டுமென. அலுவலரோ, இந்த பயிற்சி ஆட்டத்தை யாரும் பார்க்க முடியாதென்றும், யாருக்கும் அனுமதி இல்லை என்றும், கூறி முடித்த பிறகும், வெகுநேரமாய் கவலை தேய்ந்த முகத்துடன் காத்திருந்தேன்.தீடிரென என்னை அழைத்து “ட்ரிங்க்ஸ்” கொடுக்க போவாங்க பசங்க, அவுங்க கூட போயிட்டு வந்திடு என்றார்.ஒன்றும் புரியவில்லை, சந்தோசத்தில் மைதானத்தின் உள்ளே சென்றேன் குதித்துக்கொண்டே. வீரர்களை நெருங்க நெருங்க, அத்தனை அதிகபட்ச சந்தோசம், சுவாசம்விட சிரமப்படுத்தியது.

எனது ஹீரோவை நெருங்கிவிட்டேன். கண்ணிமைக்காமல் பார்த்தேன்,அத்தனை அழகு. இந்த கரங்களா இத்தணை ரன்களை அடித்தது என்று பிரம்மித்த நொடியில், பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடி ஓடி நின்றேன் அவர் முன்பு. என்னை கவனித்த அவர் புன்னகை செய்தபடி அருகில் பிடித்து என்னை நிறுத்தினார். ஐயோ அத்தனை சந்தோசம், என்ன சொல்ல?-வார்த்தைகளற்று நின்றேன். என்ன பண்றீங்க?, எப்படி இருக்கீங்க?, என்ற தமிழ் வார்த்தைகளை அவர் உதிர்க்க உதிர்க்க ஓடி பிடித்துகொண்டிருந்தேன் அவர் உதிர்த்த வார்த்தைகளை.சந்தர்பத்தை நழுவவிடக்கூடாதென ஒரு வேண்டுகோள் விடுத்தேன் அவரிடம், one snap please ? என்றதும், சரி என்றவரிடம் என் மட்டற்ற மகிழ்ச்சியை உதிர்த்துவிட்டு, எனது செல்போனில் படம் பிடித்துகொண்டேன் வேறொருவர் உதவியுடன்.

“One minute” என்று சச்சின்,அவரது செல்போனை நீட்டினார் படம்பிடிக்கும் நபரிடம். எதற்கு என்ற கேள்வியுடன் பார்த்த என்னை நெருக்கமாய் அணைத்துக்கொண்டு please one snap என்றார். அவ்வளவு தான் அவ்வளவு நீளமாய் சிரித்ததில்லை என நினைக்கிறேன். போட்டோ எடுத்து முடித்ததும்,நான் பேச ஆரம்பித்தேன் அவரிடம்., நான் facebookல போட்டு கலக்கபோரேங்க என் friends கிட்ட காட்டி,ஆனா நீங்க எடுத்த போட்டோவ என்ன செய்ய போறீங்க? என்ற, எனது கேள்விக்கு புன்னகையை மட்டும் உதிர்த்தார் பதில் பேசாமல்.

தீடிரென எனக்குள் ஒரு சந்தேகம், இப்போ நடப்பதெல்லாம் உண்மை தான, என்று கில்லிபார்த்துகொண்டேன்-உண்மை தான் என்று புரிந்தது.சரி நகரலாம் என்ற நேரத்தில் அத்தனை ஏக்கம் ஏனோ நெஞ்சில் ஒட்டி இருந்தது. வேகமாய் ஓடி அவரிடம் நிச்சயம் நானும் உங்கள மாதிரி celebrity ஆவேன் என கூறி முடிக்கும்பொழுது அத்தனை நம்பிக்கை என்னுள் இருந்தது. சச்சின்,”Surely you will update this photo in ur profile that time” என்று அவரிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டேன்.

திரும்பி நடந்துவரும்பொழுது செல்போனில் எடுத்த போட்டோவை பார்த்தேன். திடுக்கிட்டேன், என்ன எடுத்து வைச்சுஇருக்கான்?, எதோ morphing பண்ணின மாதிரி இருக்கு, இதை Facebookல போட்ட எவனாவது நம்புவான? என்ற எனது கவலையில் அடுத்த போட்டோ நன்றாக இருந்ததில் அத்தனை சந்தோசம். போட்டோவை பார்த்த கொண்டே வந்தபொழுது நிலைதடுமாறி கீழே விழுந்தேன் தீடிரென.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். ஒரு நிமிடத்தில் அனைத்தும் மாறியிருந்தது. கையில் செல்போனே இல்லை, இருட்டாய் இருந்தது. அறைகாற்றாடியின் சப்தம் அனைத்தையும் உடைத்தது என்னுள் , இத்தனையும் கனவு என்று ஏற்றுகொள்ள மனம் அடம்பிடித்தது.கண்ணீர்சிந்தாத நிலை மட்டுமே. அத்தனை ஏமாற்றம் என்னுள் உடைந்து உருகத்தொடங்கியது ஒவ்வொரு நிகழ்வாய்..கில்லி எல்லாம் பாத்தோமே அப்புறம் எப்படி என்ற எனது கேள்வியிலேயே பதில் இருந்தது கனவில் கில்லினால் வலிக்காதென்று.. celebrityயாக ஆகுவேன் என்று வாக்குறுதியெல்லாம் கொடுத்தோமே என்று நினைக்கையில் அத்தனை நிகழ்வும், கனவு எனும் நிகழ்வில் ஏமாற்றியிருக்கிறது என்பதை தெளிவாய் உணர்ந்தேன். மெதுவாய் படுக்க ஆரம்பித்தேன் ஏக்கத்தில்.

கனவு, களையும் நிமிடங்களில் ஒவ்வொரு மனிதனும் நொறுங்கித்தான் போகிறான் ஒரு சில நிமிடங்களுக்கு.எட்டிபிடிக்க முடியா சிகரங்களை எட்டிபிடித்து விட்டதாய் சந்தோசத்தில் திளைக்கும் நேரத்தில் கனவென்ற ஒற்றை யதார்த்தத்தில், மிச்சம் வைக்காமல் தூக்கியெறிய, உடைந்து போகிறது உள்ளம்.

எனது ஹீரோவுடன் நடந்ததை நினைத்துகொண்டே உறங்க மறுத்தது உடல்.மெதுவாய் புரண்டுபடுத்தேன். சிறிது நேரத்தில் என்னை இருக்கமாய் பிஞ்சுவிரல்களால் அழுத்திபிடித்து, பிஞ்சுகால்களை என்மீது இட்டு இருக்கமாய் பிண்ணிக்கொண்டு, என் முகமருகே அவனது முகம் வைத்து, முனக ஆரம்பித்தான் தூக்கத்தில், யாழின் எனும் ஒருவயது நிரம்பிய எனது மகன்.

சந்தோஷ பூரிப்பில் மெதுவாய் உறங்க ஆரம்பித்தேன், இப்பொழுது நானும் ஒரு celebrity என்பதை தெளிவாய் உணர்ந்தவனாய்.



Tuesday, February 25, 2014

ஞாயிற்றுகிழமை, நான்கு மணி…


தனிமையில் அமர்ந்து, மௌனமாய் நமது வாழ்க்கையை பின்னோக்கி பார்ப்பதில் அத்தனை ஆனந்தம்.,ஏதோ ஒரு மாலைநேரத்தில், மெதுவாய் சாரல்கள் தூவிட, பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, மழைநீரின் ஒவ்வொரு துளியை ரசித்துக்கொண்டு,தேநீரின் ஒவ்வொரு துளியை பருகிட கிடைக்கும் ஆனந்தம், வாழ்க்கையை பின்நோக்கி பார்ப்பதிலும் கிடைப்பதாய் உணர்கிறேன்.

பதின் வயதுகளில், நம்மில் அதிகபட்ச நபர்களுக்கு கல்வி கற்றல் என்பது கம்பி மேல் நடப்பது போன்று தான். அப்பாக்களின் அதட்டல்களிலும் அம்மாக்களின் எதிர்பார்ப்புகளில் பாதி வயதை பயத்தின் கையில் கொடுத்துவிட்டு பாவமாய் நின்று கொண்டிருந்தோம் என்பதே நிதர்சனமான உண்மை.கொத்தடிமைகளாய் பள்ளியை நோக்கி நகர்வோம் தினந்தோறும். நண்பன் ரமேஷ், சதீஷ் என நீண்டுகொண்டே பட்டியல் சென்றாலும் ஒருத்தருக்கொருத்தர் உதவிட முடியா நிலை தான் அப்பொழுதெல்லாம். பள்ளியை நோக்கி நடந்து செல்லும் போதும் அத்தனை பயம், இப்பொழுது நினைத்துபார்க்கும் தருணங்களில் கூட அதன் வலியை உணரமுடியும். ஒரு நாளைக்கு 8 வகுப்புகள், ஒவ்வொன்றிலும் தினசரி தேர்வுகள். இந்த தினசரி தேர்வின் முடிவும் அன்றே கைகள் சிவக்க சிவக்க கிடைத்துவிடும் பாரபட்சமின்றி அனைத்து நண்பர்களுக்கும்.

ஒருவழியாய் திகில் பயத்தில் ஆரம்பிக்கும் திங்கள், கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து வெள்ளியில் நிற்கும். வெள்ளிகிழமைகள் ஒவ்வொன்றும் தேவநாட்களாய். சிரித்துகொண்டே இருப்போம் எத்தனை அடிவாங்கினாலும், சனி- ஞாயிறு விடுமுறை என்ற கனவிலே. நாங்கள் கேட்ட மிகச்சிறந்த சுதந்திர முழக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை கடைசி மணி என்றே ஆணித்தரமாய் கூறிவிடலாம். சிறை திறந்த கைதிகளாய் சிதறி ஓடுவோம் பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு.

பள்ளியின் எதிரிலிருக்கும் வாரச்சந்தையை சுற்றி திரிவோம் கையில் காசு இல்லாமலே ஆனந்தமாய்.ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் நிறையும் எங்கள் இதயங்களில் ஆழமாய். வீடு சென்று விழும் எங்களின் வயிறுகள் உண்ணாமலே நிறையும் சந்தை தின்பண்டங்களின் வாசணையில். ஊர்முற்றத்து கோவிலில் ஒன்று கூடி ஆசை தீர விளையாண்டு தீர்த்துவிட்டு,திட்டம் தீட்டுவோம் அடுத்த நாள் கிரிக்கெட் விளையாட்டுக்கு. நாங்கள் விளையாடிய விளையாட்டுகளை விட, ஓட்டிச்சென்ற ஆடுமாடுகள் விளையாடும் விளையாட்டிற்கு அளவில்லை.எப்படியோ சனி முடிந்துவிடும் விளையாட்டு களைப்பில்.

ஞாயிற்றுகிழமை -இது நாள் அல்ல, ஒரு மந்திரம். இந்த மந்திரத்தில் பதின் வயதுகள் மட்டுமல்ல, ஆதி தொடங்கி, அந்தம் முடியும் வயதுவரை மயங்கித்தான் போயிருந்தார்கள். வாரம் முழுவதும் உழைத்து களைத்து, ஒய்வெடுப்பதற்காய் ஒதுக்கிவிடப்பட்ட இந்த நாளில் துவக்கமே அத்தணை மங்களகரமாய் இருக்கும். கோதுமையும்,நெல்லிலும் வளர்ந்த நாட்டுகோழிகள், மஞ்சளில் குளித்து, கொத்தமல்லிசாந்தில் மணக்க ஆரம்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஊரெங்கும். ஆர அமரஉண்ணும் அழகை ஊரின் எல்லா திசைகளிலும் உணரமுடியும். உண்டு முடித்த நொடியினில் வேலைகள் அணைத்தும் வேகமாய் முடியும் இவர்களது ஆர்வத்தில்.

பொழுது சாய்வதற்குள் முடித்து விடு என்று ஊரின் ஒவ்வொரு தெருவிலும் கேட்கலாம் சிறுசு பெருசுகளின் கட்டளைகளை. இன்னும் சில தெருக்களில், நாலு மணிக்குள்ள ஆகணும் வேலை என்று அபாயமணி கூட அடிக்கும். இந்த ஆபாயமணியின் காரணங்கள் அத்தணை வயதிற்கும் தெரியும்.

நேரம் நான்கு மணி-என் தமிழினத்திற்கே உரிய கலை ரசணை ஒவ்வொருவரின் மனதிலும் மெதுவாய் துளிர்விட ஆரம்பிக்கும் மணி நான்கை நெருங்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பே. ஊரே ஒன்று கூட ஆரம்பிக்கும், இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன் என ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் சத்தம் வரும் தருணங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் இருக்கும் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு இருந்திருப்பார்கள்.பதின்வயது பருவங்கள் படிய வாரிய தலையுடன், பவுடர் பூசிக்கொண்டு ஊர்முற்றத்து கோவிலுக்கு வந்து சேர்ந்துவிடும். எல்லோரும் வந்தாச்சாப்பா என்ற ஊர் பெரியவரின் சத்தம் உதட்டை விட்டு நகர்வதர்க்குள், எல்லோரும் வந்தாச்சுன்னு சொல்லும் ஊர் மக்களின் வார்த்தைகளில் அவசரம் நன்றாய் தெரியும்.கிளம்ப ஆரம்பிக்கும் கூட்டத்தை ஊர்பெரியவர் வழிநடத்தி செல்வார். அத்தணை கூட்டமும் அவரின் வீட்டை சென்றடைந்திருக்கும். யார் அவர்?.- “ஒரு பணத்தான் செட்டியார்”, வசதி கம்மியாய் இருந்தாலும் ஊரைவிட்டு அதிக தூரம் பயணித்து நாட்டு நிலவரங்களை தெரிந்து வைத்துகொண்டு, வெகு தூரம் சென்று புதிது புதிதாய் பொருட்களை வாங்கிகுவித்திருக்கும் கிட்டத்தட்ட ஊர் பிரபலர்.

நெருங்கிய கூட்டத்தை கதவை திறந்து வரவேற்று அத்தணை கூட்டத்தையும் பெரிய அகன்ற கார வாசலில் அமரவைத்து, ஊர் பெரியவருக்கு நாற்காலி போட்டு அமரவைத்துவிட்டு நகருவார். ஊரே அவரை உற்றுப்பார்க்கும் தருணத்தில், உணர்ந்தவராய் மெதுவாய் வீட்டின் உள்ளிருந்து நகர்த்தி வருவார் அந்த கருப்புவெள்ளை தொலைகாட்சியை.அத்தணை கம்பீரம் அந்த தொலைக்காட்சிப்பெட்டி மரதிறப்பானுக்கு .இரண்டு கைகளில் பிடித்து மரதிரப்பானை திறக்க, அத்தணை வயது உதடும் மலரும் மெதுவாய். தொலைகாட்சியை செயல்பெற செய்ததும் “வாசிங் பவுடர் நிர்மா, வாசிங் பவுடர் நிர்மா” விளம்பரம், அதைத்தொடர்ந்து “கோல்கேட்” விளம்பரம் என ஒவ்வொன்றாய் மாறி.படம் ஆரம்பித்ததும் “20 ரீல்” என்பதை விவரம் தெரிந்த பெரியவர் படித்ததும், கைதட்டும் சத்தம் காதை பிளக்கும்.

படம் என்ன என்பதை காண ஆவலாய் ஊர் பெரியவர்கள். யார் நடிகர்கள் என்பதை காண ஆவலாய் பதின் வயதின் பெற்றோர்கள்,”சண்டை பயிற்சி” எனும் வார்த்தையை காண ஆவலாய் பதின்வயதுகள். படம் ஆரம்பித்ததில் தொடங்கி முடியும் வரை அத்தணை நிசப்தம் காதல் காட்சிகளில் , அத்தணை திட்டல்கள் ஹீரோயினை வில்லன் இழுத்து செல்லும் நேரங்களில். அத்தணை பாராட்டுகள் வில்லனை ஹீரோ அடிக்கும் போதெல்லாம், அத்தணை சிரிப்புகள் காமெடி வெடிக்கும்பொதெல்லாம்.

செய்திகளுக்கு பின் திரைப்படம் தொடரும் என்ற எழுத்தின் முடிவில் அத்தணை விவாதங்கள், அத்தணை எதிர்பார்ப்புகள் அணைத்தும் அழகிய உணர்வுகளை தந்திருக்கிறது ஓவ்வொருவருக்குள்ளும். தண்ணி வேணும் என்று கெஞ்சுவது ஒவ்வொன்றாய் முளைக்கும் கூட்டத்தின் நடுவிலிருந்து.முகம் கோணாமல் தண்ணீர்கொடுக்கும் “தவமணி” அக்கா, மரியாதைக்குரியவராய் வாழ்ந்தார் ஒவ்வொருவரின் உள்ளத்திலும். “திரைப்படம் தொடரும்” எனும் எழுத்து மீண்டும் நிமிர்ந்து எழுந்துவிட செய்துவிடும்.”வணக்கம்” எனும் அந்த வார்த்தை செய்யும் மாயாஜாலங்களை எளிதாய் விவரித்து விடமுடியாது.

இந்த நான்கு மணி படத்தின் “வணக்கம்” எனும் சொல், பெரியவர்களின் மனிதில் ஏக்கத்தையும், பெற்றோர்களின் மனதில் அடுத்தவாரத்தின் பொறுப்பை நிணைவுபடுத்துவதோடு நில்லாமல்., என் பதின்வயதுகளின் “திங்கட்கிழமை” பயத்தை ஒட்டிவிட்டுவிடும், மூச்சுவிட முடியா கணத்துடன் ஒவ்வொருவரின் இதயத்திலும்..

Friday, February 21, 2014

கிறுக்கி மவ கிறங்கித்தான் போவா எம்மேல..




சில நேரத்துல எல்லாம் கோவிச்சுகிட்டு இருக்கேனுங்க, இந்த பால போன வருமை என் படிப்பை தின்னு ஏப்பம் விட்டுடுச்சுங்களே, இது இல்லைனா எப்படியாவது மேல வந்திருப்பனுங்களே, என்ன சொல்றது சொல்லுங்க?,அன்னாடங்காட்சி வயித்துல பொறந்ததுக்கு பண்ணையாரு வீட்டு நாயா பொறந்திருக்கனும்னு நினைச்சிருக்கேனுங்க.அது எல்லாமே  அவள பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் தானுங்க.

கிழக்கு கண்மாய் ஓரம் சுட்டெரிக்கும் வேகாத வெய்யலிலும்,குத்தவைச்சு குந்தி குந்தி தேய்ந்துபோன இடுப்பு கயித்துல, தண்ணிய கட்டிக்கிட்டு ஆடு மாட்ட மேய்ச்சுகிட்டு காஞ்சி போகும் எங்களுக்கெல்லாம் ஏதுங்க கஞ்சி?, ஆடுமாடுக அது வயிறு நிரையிற வரைக்கும்.சொந்த பந்தம் தொலைச்சு பண்ணயத்துல பாதி வயச தொலைச்சுபுட்டு பக்கியா திரியற எங்களுக்கு ஏதுங்க ஆசை பாசம்லாம்.

காலம் கடந்த பாதியில, காத்தா வந்தாலையா அந்த ஒத்த சாமந்தி நெத்திபொட்டலகி. 

“உங்க ஆடுமாடு மேயாம என் ஆடுமாட்ட கெடுக்குதுங்க, கொஞ்சம் தனியா ஓட்டி போரிகலா, இல்ல நான் போகவான்னு” 

எடுத்த எடுப்புல பட்டுன்னு கேட்டுபுட்டுவ அவ தானுங்க.
“நீ எந்த ஊருகாரி இங்க வந்து அதிகாரம்பண்றவ?”, 

கேட்ட கேள்விக்கு நறுக்குன்னு பதில போட்டவ. 

“இந்தாரு அவ இவனு சொன்னீகன்னா பண்ணையாருகிட்ட சொன்ன அவ்ளோ தான்”. 

சொல்றப்பவே நம்ம சாதி இவ தான் புரிஞ்சுபுட்டேன்.ஆச பாசமா பேசுலாம்னு அடங்கி போக ஆரம்பிச்சேனுங்க.

“கொஞ்சம் தண்ணி இருக்குமுங்கலா?, இந்த முரட்டு கருவாயன் முரண்டு புடிச்சு பறந்து வர முந்தானைல முடிச்சுவைக்குர தண்ணிய மறந்துட்டு வந்துட்டேனுங்கன்னு,”

கொம்பை காட்டி மிரட்ட கருவாயனும் பறந்தடிச்சு ஓடுவான், அவ கோவ கண்ணா பாத்து, இத்தன வருசமா இடுப்புகையித்துல கிடக்குற தண்ணிக்கு கூட நல்ல நேரம் வருது நமக்கு வர மாட்டிங்குதே என்னத்த செய்ய, கூவிகிட்டே தண்ணியகொடுக்க. 

“நாளைக்கு வாங்கிக்கோங்க, மருவாதை தெரிஞ்சவ நானு பாத்துகிடங்கன்னு”, வேயக்கானம் பேசுனவ அவ.

“நீங்க எந்த ஊருக்காரங்கன்னு கேட்டதுக்கு, தெரிஞ்ச என்ன செய்ய போறீக?., பொண்ணு பாக்கவா வரப்போறீங்கன்னு”

எகத்தாளம் பேசிபுட்ட போனவள. சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன், இந்த நக்கல் எல்லாம் என்கிட்டே வேண்டாம் தாயி, உன் சோலிய பாருன்னு ஒரு பக்கம் கோவமா சொன்னாலும், எதோ சொகமாத்தான் கிடந்தது நெஞ்சுக்குள்ள அவ பேசின எகத்தாளம் எல்லாம். காலம் கொஞ்சம் கொஞ்சமா காத்துல பறக்க என்பக்கம் வந்தா காதலோட, அட நிசமாத்தான் சொல்றேனுங்க.

கல்லப்பருப்ப தொலிச்சு முந்தானைல முடிச்சு வந்தா எனக்காக. கடிச்சுக்க கருப்பட்டியும் கொண்டு வந்தா. 

“இந்தாருங்க தெரியாம கொண்டு வந்து இருக்கேன், பண்ணையாருக்கு தெரிஞ்சா  ஊருக்கு கிளம்புன்னு ராவோடு ராவ ஊர்பக்கம் அனுப்பிவைசிருவாக. ஆத்தாளும் அப்பனும் கொன்னே போற்றுவாக என்ன, கஞ்சிக்கு தவிச்சுகிடக்குரப்ப காதல் கேட்குதாடின்னு.”

அவ வார்த்த கேட்டு கண்ணுகலங்க,”எதுக்கு அழுரீகன்னு” அவ கேட்க கருவேலங்காட்டு கருக்குருவிக கூட கத்துரத நிருத்திபுடுமுங்க. அத்தன காதல கண்ணுல காட்டிபுட்டு, “உன்ன எவ காதலிப்பானு” பொய் சொல்லி ஓடிப்போரப்ப எல்லாம் உடம்பு முழுசும் அத்தனை சொகம் சொக்கவைக்கமுங்க.ஆடு மாடு மேய்க்கவா பொறந்தோம்னு நினைச்ச மனசுகூட, குளிர்ந்துபோகுமுங்க அவ முகத்த பாத்து, அவ மடியில படுத்தா.”எப்போ பொண்ணு பாக்க வரீக எங்க ஊருக்குன்னு” அவகேட்க, நான் வரமாட்டேன்னு சொல்ல,அழுதுகிடக்கும் அவமுகத்த தொடைச்சு சும்மா சொன்னேன்னு சொல்லும்போதும் மனசு கனமா கனக்குமுங்க.

அவளக் கானத இந்த ரெண்டு நாளும் சொடுங்கிப்போயி நடந்து தவிச்சேனுங்க.உச்சி மரமேறி, தூரத்து அவ உருவம் தேட தேட, மனசுடைஞ்சு பாவி வெய்யில்ல காஞ்சிப்போனேன் கருவாடா.பாவி மக்கா ஆட்டை பாதியிலே விட்டுபுட்டு பண்ணையாரு வீடு தேடி பறந்து போனேன் என் உசிர தேடி. அவ முகம் பாத்துபுட்டா அத்தனையும் மறந்துபோவும், முல்லுதச்ச காலுகூட முழுசா மாறிப்போவும். தூரத்து பண்ணையாரு வீட்ட பாக்கும்போதே படபடக்குது பாவிமனசு அவமுகத்த பாத்துபுட. மாட்டுகொட்டாயி தாண்டி மதில் மேல ஏறிபார்த்தப்ப அப்படியே நொறுங்கிப்போச்சி மனசு சுக்கு சுக்கா. பாவி மக்கா, பச்ச புள்ளைய, பல்லு இல்லா பண்ணையாருக்கு பங்கா கொடுக்க பாக்குறீங்களே. அழுதழுது வீங்கிப்போன அவ முகம் பாக்கவா பல மைல் பறந்துவந்தேன்.

எட்டிகுதித்து அவ முன்ன நின்னேன், எட்டிகரம்பிடித்து தைரியமா சொன்னேன், என் பொஞ்சாதி இவதான்னு. முகம்மலர்ந்து அவகொடுத்த முத்தத்துல அத்தனை பேரையும் அடிச்சு சாய்ச்சேன். எனைக்காக்க வந்த சாமி நீதான்னு அவ சொன்ன வார்த்தைல, என் உசிரு நீ தான்னு கரம் பிடிச்சு காத்தா பறந்தோம்.

நான் மேய்ச்ச ஆடு வீடுபோயி சேர, நான் போயி சேர்ந்தேன் அவளோட பல ஊரு.ஐஞ்சு புள்ள பெத்துபுட்டோம் ஆசைக்கு ஒண்ணா..அவ மடியில நான் தூங்க, கிறுக்கி மவ கிறங்கித்தான் போவா எம்மேல..