Wednesday, April 16, 2014

பெண்மை யாதெனில்…….


எதோ விளையாட்டாய் ஒற்றை வரிக்காதல் கவிதைகளை எழுதிவிட்டு காலரை தூக்கிவிட்டு பெருமைப்பட்ட காலம் கடந்து, யதார்த்தத்தையும், உண்மையையும், உணர்வுகளையும் எழுதி ஆத்ம திருப்தியடையும் காலத்தை நெருங்கிகொண்டு இருக்கிறேன்.தேவா எனும் மிகச்சிறந்த எழுத்தாளர், நான் சென்றடைய வேண்டிய பாதையை காட்டியதுடன், என்னை தம்பி எனும் அழகிய உறவில் இணைத்து,உயர்த்தி பிடித்து, உலகை உற்றுநோக்க வைத்தார் எழுத்து எனும் கண்கள் மூலம்.
 
எழுத தொடங்கிய சில மாதங்களிலேயே ஏதேதோ வேலைப்பளுவின் நிமித்தம், சிறிது சிறிதாய் எழுத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். எனது வலைத்தளம் சக எழுத்தாளர்களால் தினம் தினம் உற்றுநோக்கப்பட்டாலும், சமீபத்திய எழுத்துக்களால் நிரப்பப்படாத நிலையில் கவனிப்பாரற்று அனாதையாய் விடப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாய். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் எனது வலைதளத்தின் பக்கங்கள் எழுத்துக்களால் நிரப்பப்படாமல் பாசனம் பிடித்தே போய்விட்டது பாவமாய்.
 
அலுவலகம் வந்தோம், வேலையை முடித்தோம். சில நாட்கள் எளிதாய், பல நாட்கள் மிகக்கடினமாய் என நகர்ந்தது எனது அன்றாட அலுவலக வேலைகள். “ஜெய்கர்” எனும் கல்லூரி மற்றும்,அலுவலகத்தோழன் அலுவலக வலைத்தளம் இருப்பதாகவும், உனது கருத்துகளை பகிரலாம் என கூறிமுடிக்க., ஏதோ ஆர்வத்தில் மீண்டும் இந்த முறை முயற்சிக்க ஆயுத்தமானேன்.,
 
முதல் நாள் பதிவை இட்டுவிட்டு,மறுநாள் காணும்போது திகைத்தே விட்டேன், அத்தனை பின்னூட்டங்களை ஒவ்வொன்றாய் காண பிரம்மித்தே போய்விட்டேன்., நிஜமாய் என் எழுத்தில் எதோ ஒற்றிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியாது, அத்தனை உற்சாக பின்னூட்டங்கள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து விழுந்தது இந்த சிறுவிதை மரமாக. அத்தனை உள்ளத்திற்கும் நன்றி கூறிவிட்டு, பயணத்தை தொடர ஆரம்பித்தேன்
 
ஒரு சில பதிவுகளை பகிர பகிர அத்தனை அன்பு ஊக்க மருந்துகள் என்னில் கலக்க ஆரம்பித்தது பின்னூட்டம் வடிவிலாய்..விளைவு, தொடர்ச்சியாக பதிவிட உள்ளுள் ஒரு உணர்வு மேலோங்க, சிறுவிதை முளைத்து இலைகள் விட ஆரம்பித்தது. சில உணர்வுப்பூர்வமான பதிவுகளை நானும், சில நலம் விரும்பிகளும் சமுதாய வலைத்தளங்களில் பகிர்ந்த சில நாட்களிலையே, ஒரு பிரபல இயக்குனரின், உதவி இயக்குனர் தொடர்புகொண்டார்., “எழுத்துகளில் யாதார்த்தமும், உணர்வுகளும் அதிக ஆளுமை கொண்டிருப்பதாய் உணர்கிறேன்., எனது அடுத்த முதல் படத்திற்கு கதை வசனம் எழுதி தருகிறீர்களா” என்ற பெரிய, அனுபவமில்லாத சுமையை என்மீது திடீரென சுமத்த, திக்குமுக்காடி போனேன்.,
 
பதில் அனுப்பினேன்., எதோ ஆத்மா திருப்திக்காய் எழுவதாகவும், மேலும் திரைப்படத்திற்கு எழுதும் அளவிற்கு எனது எழுத்துகளும், நானும் முதிர்ச்சி அடையவில்லை எனவும், அதுமட்டுமல்லாது அனுபவம் துளியும் இல்லை எனவும், அனைத்திற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் சிலவற்றை நான் செய்துமுடிக்க வேண்டியிருக்கு எனவும், சிலவருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் வருகிறேன், மன்னிக்கவும் என எனது நிலையை விவரித்தேன். “சரி உங்கள் விருப்படியே ஆகட்டும் விஜய். நான் சில பல திரைப்பட வசங்களை அனுப்பி வைக்கிறேன்., திருப்பி பாருங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்,” என்று கூறி முடித்துவிட்டு., முடிந்தவரை எனது தொடர்பில் இருங்கள் என்றார்.
 
எப்படியோ தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சி விட்டுவிட்டு தொடர்ந்தேன் எனது இயல்பு வாழ்க்கையை.எப்பொழுதும் தன்னிடம் ஒரு பெரிய பொறுப்பு வந்து சேரும்பொழுது கொஞ்சம் திக்குமுக்காடி தான் போவோம்., சில அசாத்திய மனிதர்கள் மட்டுமே தைரியமாய் நின்றுவிடுவார்கள் நிலைத்து எத்தகு சூழ்நிலையிலும். மீண்டும் எழுத்தை உருக்கி உருவாக்க ஆரம்பித்தேன்
நேரம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம்.,
 
மீண்டும் ஒரு வாய்ப்பு அதே சமூக வலைத்தளத்திலிருந்து என்னை நோக்கி வந்தது., “ஹாய் விஜய், நான் கார்த்திக், உங்கள் எழுத்துகள் அருமை., நேரம் இருந்தால் , ஒரு கைதியைப்பற்றிய “அறம்” எனும், எனது குறும்படத்திற்கு வசனம், பாடல் எழுதி தரமுடியுமா என்று கேட்க , சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றேன் அத்தனை பயத்துடன்.
 
எப்படியோ நேரம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம், பாடலையும், வசனங்களையும் எழுதி அவருக்கு அனுப்பிவிட்டு,பதட்டம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க., “மிக அருமை விஜய்., இதையே வைச்சுகலாம்., சில காட்சிகளில் என்னும் கொஞ்சம் வசனங்களை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொன்றாய் விவரிக்க.,உள்வாங்கி அனைத்தையும் முடித்து கொடுத்தேன்.
 
சிறிது நாட்களுக்கு முன்பு., படத்தின் போஸ்டரை அனுப்பிவைக்க., அதில் வசனம் என்று எனது பெயரைக்காணும்போது ஒருவித சந்தோசம் மூச்சுவிட சிரமப்படுத்தியது.,சந்தோசத்தில் மனைவியிடம் காண்பிக்க.,கலக்கு விஜய் என்றாள்.,இந்த நிகழ்வு என்னை எச்சரிக்க தொடங்கியது, “எழுத்துக்கள் இன்னும் சீற்படவேண்டும்., இன்னும் புதைந்துகிடக்கும் அனைத்து உணர்வுகளையும் , உண்மையையும் , காதலையும் வடித்துவிட வேண்டும் என்று”.எழுத்துகளை பற்றிய யோசனையில் படுக்கையில் விழுந்தேன்.,
 
யோசித்துக்கொண்டே கண்களை மூடும் தருணத்தில், தடுத்தி நிறுத்தி “எனக்கு ஒரு சந்தேகம் விஜய்” என கேள்வியை கேட்க ஆரம்பித்தாள்., சரி கேள் எனும்போது என்னுள், என்ன கேட்க போகிறாள் என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.” இல்ல, படம் எடுக்குறப்ப , இயக்குனரும், ஹீரோவும் தான ஹீரோயின் கிட்ட பேச வேண்டிவரும், பழகவேண்டி வரும்., ஸ்கிரிப்ட் எழுதுறவங்க எல்லாம் ஹீரோயின் கிட்ட பழக தேவை இல்லைல” என்றாள். “அத்தனை அடக்கமுடியா சிரிப்புடன் அட ஆண்டவா ஒரு குறும்படத்துக்கேவா” என்று உள்ளுள் நிணைத்துக்கொண்டு., பதிலளித்தேன் அதெப்படி, ஸ்கிரிப்ட் அஹ எழுதுனவன் தானே சொல்லித்தரனும் ஹீரோயின் கிட்ட என்று பொய்யாய் கூறி முடிக்க. சரி என்று மெதுவாய் அவள் மௌனிக்க.,
 
உற்றுநோக்க ஆரம்பித்தேன் அவளை., அவளின் வாடிய முகத்தில் ஒட்டியிருந்தது, “பெண்மை யாதெனில்” என்ற, எனது நீண்ட நாள் கேள்விக்கு பதில், அத்தனை அழகாய்….

Tuesday, April 8, 2014

எனதானவனின் மொழி..


கட்டிச்சோற்றை கட்டிக்கொண்டு காடு மேடல்லாம் திரிந்திருப்போம் ஏதோ ஒன்றுக்காய்., அனால் அது கடைசியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கொட்டிக்கிடக்கும்.அதுவே வாழ்க்கையின் சாராம்சமும் கூட., தொலைத்துவிட்டு எங்கெங்கோ தேடி இருப்போம், அருகில் இருப்பதையறியாமல்.
 
அவன் பெயர் வேண்டாம் என நினைக்கிறேன்.நினைத்த நிமிடத்தில் மன்னிக்கவும் என மனதில் கூறிக்கொண்டு எனது பெயரை பதிவு செய்ய விரும்புகிறேன் “தேவி” என. மெட்ராஸ் கிளம்பும்போது தெரியாது அவனைச்சந்திப்பேன் என, அதற்காகவோ என்னவோ,”மெட்ராஸ்” லாம் போக வேண்டாம்., ஒரு நல்ல பையன பாத்துவைச்சு இருக்கோம் உன் திருமணத்திற்கு” என்ற எனது தாயின் குரலை தாண்டி, எனக்கென கால்தடம் பதிக்க கிளம்பினேன் மெட்ராஸ் நோக்கி.
 
மெட்ராஸ் எனும் உச்சரிப்பு மறந்து சென்னை என்று உச்சரிக்க பழகும் அளவிற்கு சென்னையின் அனைத்து இடங்களுக்கும் பொழுதுபோக்கிற்காகவும், வேலைக்காகவும் அலைந்து திரிந்திருக்கிறேன்.அப்படி தான் வழக்கமான தேடலில் அந்த அலுவலகத்தை முகாமிட்டிருந்தேன் அதிகாலையிலே., எனது தங்கும்விடுதியிலிருந்து கிட்டத்தட்ட நான்கு தோழிகள் என்னுடன் காத்திருந்தனர் அந்த நிறுவனத்தில் எப்படியாவது கால்பதிக்க.
 
சிறிது நேரத்தில் அவன் சில நண்பர்களுடன் வந்திருந்தான் என் முதல் பார்வை அவன் மீது விழவேண்டும் என விதியில் இருந்ததை விஸ்வரூபமாக்க…அத்தனை அமைதி அவன் கண்களில்.,முதல் பார்வையே என்னுள் ஏதோ செய்ய., பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு., அங்கும் இங்கும் சுழற்றிவிட்டு கடைசியில் “quantitive aptitude ” புத்தகத்தின் மீது பதித்தேன். அன்றாடம் ஆயிரம் முகங்கள் நமது கண்களில் விழுந்தாலும், ஏதோ ஒரு சில முகங்கள் மட்டும் கண்களில் பதிந்துகொண்டு, அழிந்துவிட அடம்பிடிக்கும்., அப்படி தான் உணர்ந்தேன் அப்பொழுது.
 
என்னையறியாமல் என் செயல்பாடுகள் அமைந்ததாலோ என்னவோ., உள்ளே எழுத்து தேர்வுக்கு அனைவரையும் அழைத்தபோது, ஒன்றன் பின் ஒன்றாய் செல்லும் பொழுது என்னையும் அறியாமல் அவனுக்கு அடுத்து செல்லவேண்டியதாயிற்று., ஒவ்வொருவராய் அமர., அவனது இருக்கைக்கு அருகாமையிலான மற்றொரு இருக்கையில் அமர்ந்தேன்., சிறிது நேரத்தில் கூட்டியும் கழித்தும் போராடினேன் எனக்கான அங்கீகாரத்துக்காய்., ஒரு சில வினாக்களை தாண்டி, மீதமுள்ள அனைத்திற்கும் பதிலடி தந்தேன் சரியான விடையில்.,விடைத்தாளை மூடிவைத்துவிட்டு காத்திருக்க., அவனும் எழுதிவிட்டு சரிபார்த்துக்கொண்டிருக்க., ஏதோ ஒரு சந்தேகத்தில் நிரப்பி வைத்த சில வினாக்களுக்கு மட்டும் அவனது விடைத்தாளில் விடை தேட, கண்களை சுழற்றினேன் அவனது விடைத்தாளின் பக்கம்., கிட்டத்தட்ட அனைத்து சரியான விடைகளும் அவனது விடைத்தாளிளிருக்க, ஏதோ ஒரு குருட்டு தைரியம் அவன் சரியே அனைத்து கேள்விகளிலும் என நினைக்க., அவனது விடைகளை நிரப்பி வைத்தேன் எனது விடைத்தாளில்.
 
அவனது விடைத்தாளை அவனது நண்பர்களுக்காய் உயர்த்திபிடிக்க, என்னுள் முடிவுசெய்து கொண்டேன் அவன் நிச்சயம் சரியே என., அவர்கள் எதோ சொல்ல., இவனும் ஏதோ சைகையில் காட்ட., புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்., எதேச்சையாய் அவனது பார்வை என் மீது திரும்ப., செய்வதறியாது நானும் உற்று நோக்க., அத்தனை பேசியது அவன் கண்கள்., ஒருசில நிமிடம் என்னுள் ஓராயிரம் கேள்விகள் ஒரு பார்வை, இத்தனை செய்யமுடியுமா என்னுள் என?.,என்னிடமும் அதே செய்கையில் என்ன?? என்பதை போல் புருவம் உயர்த்தி செய்கையில் ஏதோ கேட்க, ஒன்றும் இல்லை என தலையசைத்து உறுதிப்படுத்தினேன் அவனுக்கு.,
 
விடைத்தாள்களை ஒவ்வொருவராய் ஒப்படைத்துவிட்டு வெளியில் வர முயற்சிக்கையில்., தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாய் கூறிவிட்டு., இப்பொழுது கிளம்பலாம் அனைவரும், என்று முடிக்கையில்., அனைவரும் வெளியேறினோம் ஒன்றன் பின் ஒன்றாய்., அவனை தேடியது கண்கள்., நண்பர்களுக்கு கையசைத்து வழியனுப்பிகொண்டிருந்தான் தூரத்தில்., தோழிகளை வேகமாய் நடக்க அவசரப்படுத்தினேன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி., பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவனிற்கு அருகாமையில் நெருங்க., எங்கிருந்தோ வந்த ஒரு பெண் அவனைதட்ட., திரும்பியவன் புன்னைகை உதிர்த்துவிட்டு கைகளை திருப்பினான் மெதுவாய்.,
 
இருவரின் விரல்களும் ஆயிரம் மொழிகள் பேச., சிரிப்பும், கோபமும், கிண்டலும்., கேள்விகளும் மாறி மாறி அவர்களிடம் கண்டேன், காதைபிளக்கும் சத்தங்களுக்கு நடுவே சத்தமேயில்லாமல் அழகாய்., அவர்களது காதுகள் வேலைகலற்று கிடக்க., உதடுகள் அவ்வப்பொழுது சத்தமில்லாத சிரிப்புகளை உதிர்க்க மட்டுமே உதவியது., கண்களும், விரல்களும் மட்டுமே பேசியது கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்னில், கடவுளை திட்டிக்கொண்டே.
 
என்னையும் அறியாமல் கண்ணீர் சொட்ட சொட்ட அவனையே உற்று நோக்கினேன்., இன்னும் இருக்கமாய் இதயம் அவனிடம் ஒட்டிக்கொண்டு வர மறுத்தது., தோழிகள் அனைவரும் அவனை நோக்கி ‘பாவம்’ என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்த போதும்., நான் மட்டும் தீவிரமாய் யோசித்துகொண்டிருந்தேன்., எப்படி இந்த விரல் மொழிகளை கற்றுக்கொள்வதென?., கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அவனுக்கு மிக அருகாமையில் நின்றுகொண்டு கவனித்துகொண்டிருந்தேன். எப்படி?, பாவம் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் என்னால் உதிர்க்க முடியும்?., என்ன கணக்கோ, எப்படியோ தெரியாது முதல் பார்வையிலையே என்னிடம் ஏதோ திருடியவன்.,அசைக்க முடியா பந்தம் எனக்கும்., அவனுக்கும்., எந்நிலையிலும் மாறாத என் மனதிலிருந்து, எப்படி “பாவம்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு நகருவேன் அந்த இடத்திலிருந்து.,
 
தோழிகள் பேருந்து வந்துவிட்டதாய் கூறி பேருந்தை நோக்கி ஓட, நான் மட்டும் அங்கேயே நிற்க.. பிறகு மீண்டும் ஓடினேன் .,அவனும் அதே பேருந்தை நோக்கி ஓடிய பொழுது. எப்படியோ உள்ளே சென்று அவனருகே நின்ற பொழுது., சைகை காட்டினான் கிளம்புவதாய், உள்ளிருந்து வெளியே அந்த பெண்ணை நோக்கி. பேருந்து மெதுவாய் கிளம்ப., என்னை உற்றுநோக்கினான் மீண்டும்., எனக்கானவனாய் அவன் தோன்ற.,அவன் பேசா உதடுகளும், கேட்கா காதுகளும் தெரியவில்லை என் கண்களுக்கு., நானும் உற்று நோக்க ஆரம்பித்தேன் அவன் கண்களை., காதலிக்கும் முடிவுடன் …
 
“தாம்பரம் ஒரு டிக்கெட்”., அவன் உதடுகளில் இருந்து வார்த்தைகள் ஒலிக்க., ஆச்சர்யத்தில் உடல் முழுவதும் வியர்த்து, அப்பொழுது உதடும் காதல் மொழி பேச ஆரம்பித்தது…

Tuesday, April 1, 2014

அழகென்றால் நீ…


உன்னுள், என்னை வளர்த்து பெருமிதம் காணும் உனைப்புரிந்துகொள்ள, சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நீயறிவாய். விட்டுப்பிடித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான், நீ எனக்காக சேர்த்து வைத்த ரகசியம் என அறிவேன்.
 
எப்பொழுதும் இன்னொரு கரம் இருக்கமாய் பற்றியே பள்ளி செல்ல பழகியவன் நான். நரம்பு பையை தோளில் போட்டுவிட்டு, ம்ம்ம் பிடித்துக்கொள் கெட்டியாக என்று, தன் கரத்தை எனக்கு தாரை வார்த்துவிட்டு முன்னே அடியெடுத்து வைக்கும் அக்காவிற்கு தெரியும், அன்போ, பயமோ ஏதோ ஒன்று அவளிடத்தில், என்னை இருக்கமாக்கியிருக்கிறதென்று.
 
எத்தனை அடி என்னிடம் வாங்கியிருந்தாலும், கம்பீரமாய் மிரட்டியிருக்கிறாள் பள்ளி அழைத்துசெல்லும் போதுமட்டும். ஏனென்றால் அவளது ராஜ்ஜியம் அங்கே தொடங்கிவிடும் அந்த 50 நிமிட பள்ளி நோக்கிய பயணத்தில். அவ்வப்பொழுது என்னிடம் கேள்விகளை வைப்பாள், “அடுத்த வருடம் ஆறாம் வகுப்பு வேற பள்ளிக்கு போய்டுவேன், அப்போ எப்படி போவ தனியா” என்பாள். ம்ம்ம் அதெல்லாம் போய்விட எனக்கு தெரியும், நீ தான் பெரிய சீமையா இந்த உலகத்துல, எனக்கே போகத்தெரியும் என்று சீரும் இடத்திலெல்லாம் அமைதிகாப்பாள்..ம்ம்ம் என்று பெருமை கொள்ளும் எனக்கு தெரியாது, என்மீதான பாசம் கலந்த பிரிவு, அவளை மௌனிக்க வைத்திருக்கிறதென்று.
 
“அம்மா, இன்னைக்கு மட்டும் நீ கொண்டு வந்து விடு” என்ற போது, “நீயே பயப்படாம போயிக்கிறதா அக்காட்ட சொன்னதா சொன்னாளே”என்றவளிடம்., ஆமா சொன்னேன் அதுக்கிப்போ என்ன?” என்றேன்.”இல்ல கண்ணு நீ தான் இனி போயிக்கணும், அக்காவும் வேற ஸ்கூல் போறா, அம்மாவுக்கு எத்தனை வேலை இருக்குன்னு தெரியும்ல, நீயே போயிக்க கண்ணு இந்த ஒரு வருஷம் மட்டும், அப்புறம் நீயும் அக்கா கூடவே போகலாம் ஆறாம் வகுப்பு அடுத்த வருடம்” என்றதும், மள மளவென கண்ணீர் கொட்டியது., நரம்பு பையை தரையில் போட்டுவிட்டு, கீழே விழுந்து உருண்டு புரண்ட போது, சற்று கண்ணை சுருக்கிக்கொண்டு அம்மாவை பார்த்த போது, கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தாள். எப்படியும் கொண்டு வந்து விடுவாள் பள்ளியில் என்றொரு நம்பிக்கை பிறந்தது.
 
நன்றாய்த்தெரியும், வயல்காட்டில் வேலைசெய்து வியர்வையில் குளித்து இருக்கும் அவளுக்கு உண்ணக்கூட நேரம் இருக்காது என்று. எனக்காக இதைகூட செய்யமாட்டாள என்ற ஏதோ ஒரு பிடிவாதத்தில் அவளின் அசௌகரியங்களை நினைத்துப்பார்க்கவில்லை.”சரி சரி அம்மா வறேன் அழக்கூடாது” என்று அப்படியே வயல் அழுக்கோடு வந்தாள் என்னோடு.
 
அத்தனை சந்தோசத்தோடு, கரம்பிடித்து குதித்துக்கொண்டு, இது என்னாதும்மா, இது என்னாதும்மா என்று ஒவ்வொன்றாய் வழிநெடுக கேட்க, செல்ல கோபம் கொண்டாள்., “இத்தனை நாள் இப்டியேதான வந்த அக்கா கூட, இது தெரியாத உனக்கு” என்றாள். “ஒன்பதாவது வாய்ப்பாடு சொல்லு, பதினைஞ்சாவது வாய்ப்பாடு சொல்லுன்னு, அடிஸ்கேளுல மண்டை மண்டையா கொட்டினாம்மா, இது தெரியல இது தெரியலன்னு திட்டினா” என்று ஒவ்வொன்றாய் அக்காவை பற்றி புகார் தொடுத்துக்கொண்டே போக , கொஞ்சம் வாய்விட்டு சிரித்தே விட்டாள்.”சரி சரி என்று காணும் ஒவ்வொன்றையும் விவரிப்பதில் தொடங்கி, குட்டிகதைகள் கூறி முடிப்பாள்.
 
பள்ளி நெருங்கியதும், “சரி கண்ணு போய்ட்டுவா, அம்மா இப்படியே கிளம்புறேன்” எனும்போது உண்மையாய் அழுதேன் , பள்ளியின் நுழைவு வாயிலை தாண்டியும் வர வேண்டும் என., “அம்மா அழுக்கா இருக்கேன் கண்ணு, நல்ல சேலை கூட கட்டுல , நீ போய்ட்டுவா சாமி” என்று கெஞ்சிய போதும், விடாப்பிடிவாதத்தால் உள்ளே அழைத்து வந்து, சில நிமிடங்கள் இருக்க வைத்து போக வைத்தேன். “இவுங்கள உங்க அம்மா”, என்று சகமாணவர்கள் கேட்க , “ஆம்” என்ற போது., அதில் ஒருவன் “ஏன் அழுக்கா வந்து இருக்காங்க” என்று கேட்க., அத்தனை கோபம் அம்மாவின் மீது.,அந்தவயதிலையே கௌரவம் கற்றுத்தந்த இந்த சமூகம், யார் மீது கோபப்பட வேண்டும் என்று கற்றுத்தர மறந்துவிட்டது. “அம்மா அழகாக இருந்திருந்தால் இப்படி கேட்டு இருக்கமாட்டான்ல என்ற எதோ ஒரு வேகம் என்னுள் பரவியிருந்தது.
 
அடுத்த நாள் அதே நேரம், அதே இடம் அம்மாவை நிறுத்தி, காத்திருந்தேன் அந்த சக மாணவனுக்காய்.இந்த முறை முற்றிலும் வித்தியாசமாய்., “ஏன்டா கண்ணு, என்னடா ஆச்சு உனக்கு, ஏன் இப்டியெல்லாம் பண்ற” என்ற தொடர்ச்சியான அம்மாவின் கேள்விக்கு., “நீ சும்மா இருமா உனக்கு ஒன்னும் தெரியாது” என்று கோபம் பறக்கும் கண்களுடன் நின்றிருந்தேன்.,”நேரம் ஆச்சு கண்ணு அம்மாவுக்கு, இன்னும் மூணு வயலு தண்ணி பாய்க்காம கிடக்கு, அப்பா வந்தா திட்டுவாரு” என்ற அம்மாவின் கெஞ்சல்கள் காதில் விழுந்ததோடு சரி, அதற்கான பதில்களை தரும் நேரம் இல்லை., எனது பார்வையெல்லாம் அந்த சக மாணவனுக்காய் மட்டுமே இருந்தது.
 
இதற்கிடையில் தோழி சுதா, அருகே வந்து “என்ன விஜய், உங்க அம்மாவ இவுங்க என்றாள், ஆம் என்று பெருமிதத்தோடு சொன்ன என்னிடம்., இவ்ளோ அழகா இருக்காங்க,தினேஷ் எதோ உங்க அம்மா அழுக்கா வந்ததா சொன்னானே என்றாள்., “நல்லா பாத்துக்க, தினேஷ்கிட்ட சொல்லு போயி, எங்க அம்மா எவ்ளோ அழகு என்று என்று முடித்தேன்.
 
கண்கள் கலங்க, மெதுவாய் சிரித்தாள் என் தலை களைத்து., “அட இதுக்கா சாமி. சின்ன வேலை சொன்னாகூட கேட்காத என் கண்ணு, நேத்து சாயங்காலமே, நம்ம தோட்டத்து பூவ பறிச்சு, கட்ட சொல்லி நாளைக்கு நீ வைக்கணும் அம்மான்னு சொல்லி, அதிகாலையிலே குளிக்க சொல்லி., எண்ணெய் வைத்து, தலைவார சொல்லி., பூவைக்க சொல்லி., நல்ல புடவை கட்ட சொல்லி உருண்டு புரண்டு அழுது, இப்டி கொண்டு வந்து நிறுத்துனது இதுக்குதான?., என்றவளிடம்., “ஆம் என்றதும்”., ” ஏன் கண்ணு அம்மா அழகுபடுத்திகிட்டு,சினிமாவ நடிக்க போறேன், வயக்காட்டுல தான சாமி கிடக்க போறேன்னு” சொன்ன போது., “அதெல்லாம் முடியாது இனி நீ தான் பள்ளிக்கூடம் வரணும் என்று நான் முடிக்கும்போது., “என் மகனல்லவா இவன், எப்படி விட்டுகொடுப்பான் என்னை?” என்ற பெருமிதம், அவள் கண்களில் ஒட்டியிருந்தது..