Wednesday, November 30, 2016

தொலைந்துபோக......1




ஏதோ ஒன்று என் தலையை இருகப்பற்றிக்கொண்டு அசைக்கவிடாமலும் ,நினைக்கவிடாமலும், விழிக்கவிடாமலும் ஏதேதோ செய்ய,தொடர்ந்தேன் அந்த பேருந்து பயணத்தை எதுவரையோ அதுவரை. பரபரப்பான பேருந்துகள் இயங்கும் இடத்தில் இறக்கப்பட்டதும், கண்ணில்பட்ட அடுத்த தொலைதூர பேருந்தை பற்றிக்கொள்கிறேன். பயணிக்கிறேன் ஜன்னல் வழியாய் பார்வையை கிடத்திவிட்டு...

நகரங்களைத்தாண்டி மெதுவாய் கிராமத்தின் அமைதியை தொடஆரம்பித்த பேருந்தினை நிறுத்தி இறங்கினேன்..அத்தனையும் என்னிலிருந்து தொலைக்க வேண்டும்,சாலையை ஒட்டிய வாய்க்காலை தொடர்கிறேன்... அடர்ந்த காட்டின் வழியே பயணிக்கும் வாய்க்கால் நீரை இதற்க்கு மேல் தனியாய் பயணிக்க விட போவதில்லை. இதற்குமேல் சுமக்கத்தயாராயில்லை என்னை பிடித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை..அது வேலை அழுத்தமோ, சூழல் அழுத்தமோ, காதலோ, நட்போ, காமமோ, தேடலோ ஏதுவாய் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்....




சிலிர்க்கத்தொடங்குகிறது உடல், காதல் பரவுகிறது மென்மையாய்..நீரோடு உறவாட உடல் ஏங்க,சட்டைபொத்தான்களை பிய்த்து எறிந்துவிட்டு, அத்தனை நினைவுகளையும் களைந்துவிட்டு, ஆடைகளணிந்தும் நிர்வாணமாய் தாவுகிறேன்...சட்டென்று தொலைகிறேன்,தொலைக்கிறேன்.. எழுந்துவிட மனமில்லாமல் முழுவதுமாய் தொலைகிறேன்..ஆசையாய் இருக்கிறது இன்னும் கொஞ்சம் முகம் புதைக்க, தடுக்க யார்?..மீண்டும் புதைகிறேன்,புதைக்கிறேன் என்னை.படர்கிறேன் அத்தனை ஆசையாய்... நீரோடு வெகுதூரம்,வெகுநேரம் உறவாட மலர்கிறேன்..நெடுநேர ஆதீத காதலில் மெதுவாய் எட்டிப்பார்க்கிறது நடுக்கம்..உடல் முழுவதும் நடுக்கம் படர..மெதுவாய் காதல் தணிகிறது..மெதுவாய் வாய்க்கால் கரை மீது சாய்கிறேன்..அடர்ந்த காட்டின் குரூர காற்று மெதுவாய் என்னை மொய்க்கின்றது..கொஞ்சமாய் கொஞ்சமாய் கொத்தி தின்கிறது..இரக்கமின்றி மிக நெருக்கமாய் அணைத்துக்கொள்(ல்)கிறது..ஆசையாய் இருக்கிறது இந்த நெருக்கத்தில் மூச்சு முட்டி,மடிந்துபோக.....


அசைவின்றி, இசைவோடு துணிந்து கிடக்கும் என்னை இரக்கமின்றி உரித்து தின்றுவிட்டு, நடுக்கத்தை தன்னோடு தூக்கிக்கொண்டு பறந்துவிட்டது அடர்ந்த காற்றின் குரூர காற்று. மெதுவாய் கண்கள் திறக்க, முழுவதுமாய் இருட்டியிருக்க,மெதுவாய் நடக்கிறேன் நிலாவோடு பேசிக்கொண்டே...தொலைதூரத்து குடிசை என் கண்களில் வந்து அமர்கிறது சட்டென....

0 comments:

Post a Comment