Friday, January 13, 2012

யாருங்க சொன்னது???..உங்களுக்கும் நடக்கலாம். உண்மைச்சம்பவம் .



அட என்ன பாக்குறீங்க?..அட எல்லோரும் பொங்கல்க்கு ரிலீஸ் பண்ணும்போது நம்ம பண்ணுல அப்டினா எப்படி? அதான் ஓடி வந்துட்டேன் உங்ககிட்ட ஒண்ணு சொல்லிட்டு போக..இருங்க இருங்க அவசரபடாதீங்க..கண்டிப்பா விளக்கமா சொல்லிட்டு தான் போவேன்.. :)

கல்யாணம் அப்டின்னு சொல்லிப்பாருங்க பிரெண்ட்ஸ்ல இருந்து பெரியவங்க வரை,நண்பன்ல இருந்து எதிரி வரைக்கும் சொல்லுற முதல் பதில் "இனி சிறை வாழ்க்கை தான், சுதந்திரம் போய்டும், அப்டி இப்டினு போட்டு தாளி தாளின்னு தாளிச்சு விட்ருவாங்க..இன்னும் சிலபேர் ஒன்னுமே சொல்லாம , மேலையும்,கீழையும் பாத்துட்டு ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க,சொன்னவனுக்கு அடிவயிறே கலக்க ஆரம்பிச்சிடும்.

அட இன்னமுமா புரியல உங்களுக்கு?..அப்படி சொல்லுடி என் ராசாத்தி, அதே தாண்டிமா, அதேதான் கல்யாணத்த பத்திதாங்க சொல்ல வந்தேன். ஹலோ எனக்கும் தெரியும் கல்யாணத்த பத்தி, நாங்களும் சொல்வோம் உண்மை என்ன அப்டின்னு.இதுக்கு முன்னாடி எழுதி இருந்தா உனக்கென்ன தெரியும் அந்த கஷ்டத்த பத்தி அப்டின்னு கிளம்பி இருப்பீங்க, இப்ப அப்டி சொல்ல முடியாது,இருந்து கேட்டுட்டு தான் போகணும், வேற வழி இல்ல. கல்யாணத்த பத்தி சொல்றேன் அப்டினுட்டு பொய் எல்லாம் சொல்ல மாட்டேங்க, நிசத்த தான் அதுவும் என் கல்யாணத்த பத்தி தான் சொல்ல போறேங்க..அட வாங்க வந்து உட்கார்ந்து கேட்டுட்டு போங்க நண்பா.

கைய கிழிச்சுகிட்டு நீ இல்லனா செத்துடுவேன்,உன்ன கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிப்பேன், உனக்காக உயிருள்ளவரை போராடுவேன், நீ இல்லனா கல்யாணம் பண்ணிக்கமா உன்னையே நினைசுகிட்டு இருப்பேன்..அப்டின்னு எல்லாம் சொல்ற, செய்ற அளவுக்கு எனக்கு ஒன்னும் பெரிசா நடக்கல அப்டினாலும், கொஞ்சம் அழகான பொண்ண பாக்குறப்ப, அடடே இந்த பொண்ணு நம்ம மணைவியா வந்தா நல்லா இருக்குமே, அறிவாற்றல், திறமை அதிகமா இருக்குற பொண்ண பாக்குறப்ப, இந்த பொண்ண கட்டினா நம்ம எங்கையோ போய்டுவோம் அப்டினாவது நினைச்சு இருக்கேன். (அப்புறம் இப்படி என்னக்கு தோணவே இல்லைன்னு சொன்னா நீங்க அந்த பக்கம் போயி புளுகுறான் புளுகு மூட்டை அப்டின்னு சொல்லிற மாட்டீங்களா, அதான் உண்மைய சொல்லிட்டேன் இங்க,இப்படி சொன்னதால குடும்பத்துல பிரச்சனை வரலாம், அட வந்தா நீங்க வந்து தீர்த்து வைக்க மாட்டீங்களா?, அந்த தைரியத்துல தான் சொல்லிட்டேன் ).

இப்படி இருக்குறப்ப ஒருநாள் வீட்டுல இருந்து ஒரு போன், குமாரு இப்படி ஒரு பொண்ணு இருக்கு அப்டின்னு. பொண்ண எல்லாம் போயி பாத்து அவுங்க நம்மள பிடிக்கல அப்டின்னு சொன்னாலும், நம்ம அவுங்கள பிடிக்கல அப்டின்னு சொன்னாலும் வருத்தம் ,இதுதேவையா அப்டின்னு எனக்கு வேலை இருக்கு அப்டின்னு ஒரு கதைய விட்ட பிறகும், விடாம கூட்டிகிட்டு போயி நிப்பாட்டுரப்ப, வேர்த்து கொட்டும் பாருங்க..அய்யயோ இது அனுபவிச்சவனுக்கு தான் தெரியும்.பொண்ண பார்த்தா நம்ம நினைச்சு பாக்காத, கனவு காணாத ஒரு முகம்.பிடிச்சுருக்கா, பிடிக்கலையா நமக்கு அப்டினே புரியல.இதுல பட்டுன்னு பொண்ணு வீட்டுக்காரர் ஒருத்தர் பொண்ணுக்கு பிடிசுருக்குப்பா, மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்கா? அப்டின்னு ஒரு கேள்விய அணுகுண்டு மாதிரி அள்ளி போட்டருபாருங்க, அவ்ளவுதான் ..படபடனு இதயம் துடிக்கும் பாருங்க,பின்ன என்ன நண்பா ஐந்து நிமிசத்துல முடிவ சொல்லுனுமே, எப்படியா முடியும், நல்ல பொண்ணா, குணம் எப்படி,அனுசரிச்சு போவாங்களா ?,இது எல்லாத்துக்கும் மேல நமக்கு இந்த பொண்ண பிடிச்சுதா?..முக்கியமா நம்ம அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுப்பாங்களா ?.நம்ம பிடிக்கல அப்டின்னு சொன்னா அந்த பொண்ணு கஷ்டபடாத?..ஏகப்பட்ட கேள்விங்க.

இதுல பொண்ண வேற ஏதோ மின்னல் மாதிரிதான் பாத்தேன். அப்படி இப்படின்னு ஒரு ஐந்து நிமிஷம் அவ்வளவு தான், நம்ம ஆளு சரிஅப்டின்னு தலையசைசுட்டான்.அய்யயோ அப்புறம் அப்டின்னு நீங்க ஆர்வமா கேட்டாலும், கேட்குளைனாலும் பாவம் நம்ம பயனுக்கு வேற வழி இல்ல அந்த இடத்துல. அப்புறம் தான் தோணுது நம்ம பயலுக்கு, நம்ம செலக்ட் பண்ணின பொண்ணு நம்ம நினைச்சது மாதிரி சரியான பொண்ணு தான அப்டின்னு, டக்குனு போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பிச்ச ஒரு ஐந்து ஆறு நாளுல புரிஞ்சுது சூப்பர் பொருத்தம் அப்டின்னு.அப்பதாங்க வாழ்க்கைல ஒரு வெளிச்சம் வந்த மாதிரி ஒரு நிம்மதி.

அப்புறம் கல்யாண நாள் வந்துச்சுங்க,அப்பத்தான் நிறையா சின்ன சின்னதா தவறான புரிதல்கள்..அட பொன்னுக்கும் பயனுக்கும் இல்லைங்க.பொண்ணு
வீட்டுபக்கத்திலையும், பையன் வீட்டு பக்கத்திலையும்.இவுங்க ஒண்ணு சொன்னா அவுங்க வேண்டாம்ன்கிறாங்க,அவுங்க ஒண்ணு சொன்னா இவுங்க வேண்டாம்கிறாங்க.அய்யயோ என்ன நடக்குனே புரியல.இவுங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுங்க்றாங்க, அவுங்க காலே இல்லைங்கறாங்க, அட நம்ம நாளுகாளுண்ணுல படிச்சோம் அப்டின்னு குழப்பம் வேற எனக்கு.

இல்ல மாப்பிள எங்க வீட்ல தான் இருக்கணும் இன்னைக்கு அப்டின்னு ஒருபக்கம், இல்ல பொண்ணு எங்க வீட்ல தான் இருக்கணும் இன்னைக்கு.அப்டின்னு பல சின்ன தவறான புரிதல்கள் அப்டின்னு சொல்றத விட, ஒருவிட்டுக்கொடுக்க முடியா அளவுகடந்த அன்பு, தன்பையன் நல்லா இருக்கணும், தன்பொண்ணு நல்லா இருக்கணும் அப்டிங்கற ஒரு அதீத பாசம் அப்டின்னு கூட வைச்சுகலாம்ங்க.எல்லோரும் நல்லா இருக்கணும் அப்டின்னு போராடற ஒருநாள் யுத்தகளம் தானுங்க இந்த கல்யாண நாள்.

கல்யாணம் அப்டிங்கறது ஒரு சாதாரண விசியம் இல்லைங்க, இன்னைக்கு இருக்குற எத்தனையோ பிரச்னைக்கு தீர்வுங்க.கள்ளக்காதலனோட காதலி ஓட்டம், கணவனை கொன்றுவிட்டு காதலனை கரம் பிடித்தாள்,காதலி திருமணம்,காதலன் தற்கொலை.ரயில் நிலையத்தில் பிட்பாகட் அடிக்கும் சிறுவன் பிடிபட்டான்.தொடரும் சைக்கோ கொலைகள்,அறுபது பெண்களை சீரழித்தவன் பிடிபட்டான், இன்னும் எத்தனையோ அதிமுக்கிய நிகழ்வுகளுக்கும், சீரழிவுக்கும்,எதோ ஒரு மூலையில் நிச்சயம் அடிப்படை காரணமாய் அமைந்திருப்பது இந்த கல்யாணம் தான் என்பதை நம்பமுடிகிறதா ?.நம்பித்தான் ஆகவேண்டும் நாம்.

ஒரு பெண் ஆண் மேல் வயப்படுவதும், ஒரு ஆண் பெண்மேல் வயப்படுவதும் இயற்கையான, தவிர்க்க முடியாத ஒன்று தான், ஒரு சாதாரண மனிதன், தெய்வங்களை போல் ஒரு சக்தி,ஒரு வரம் இப்படி பிறக்காமல்,ஆணும் பெண்ணும் இணைந்து பிறப்பவன், நிச்சயம் காதல் உணர்வும், காம உணர்வும் பெற்றோரிடமிருந்து நாடி நரம்புகளில் இயற்கையாய் அமைந்திருந்தே ஆகவேண்டும்.அவற்றில் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு பைத்தியம்,சூடு சுரணை இல்ல,திருநங்கை, அரவாணி என்றெல்லாம் ஏதோ ஏதோ பட்ட பெயர்கள் வைத்து துரத்திவிடுவோம் என்பது வேறுகதை.

இப்படி இருக்க காதல் வரும், காமமும் வரும் வர வேண்டிய வயதில் சரியாய். அதற்க்கான தீர்வு என்பது முட்டுக்கட்டை இடுவது அல்ல.அவற்றை சரியான வழியில் பயணிக்க வைப்பது.ஒரு பதின் வயது பெண், அல்லது ஆண் காதல் வயப்படும்போது சரியான வழியில் பயணிக்க வைப்பது ஒரு பெற்றோரின் மிகமுக்கிய கடமை,இதற்க்கு சரியான பதில் இடாமல் கவனிப்பாரற்று விட்டுசெல்லும் பையனின்,பெண்ணின் கேள்விக்குறியாகிய வாழ்க்கைக்கு பெற்றோர் தான் முதன் பொறுபேற்க வேண்டும்.
இன்றைய செயிதித்தால்களில் " மாணவி தற்கொலை,நண்பர்கள் ஆபாசமாக எடுத்த வீடியோ வெளியிட்டதால்".இதற்க்கான அடித்தளம் வாழ்க்கைபற்றிய புரிதல், கல்யாணம் என்பது உலகத்தை பற்றிய புரிதல் , அதற்க்கான வயது, அதுவரை பயணிக்க வேண்டிய பாதை, சாதிக்க வேண்டிய தேவை,என்பதை பற்றிய தெளிந்த கருத்து அவர்களை சரியா சென்றடையாமை என்பதே.

பதின்வயதை தாண்டிய பெண் அல்லது ஆண் காதல் வையப்படுபோது, தன் துணையை தேர்ந்தெடுக்கும் பச்சத்தில்,சாதி, மதம், ஏழை, பணக்காரன், அந்தஸ்த்து, கௌரவம் இவைகளை தவிர்த்து, குணநலன், சரியான துணை,பழக்கவழக்கம் இவைகளை மட்டுமே அடிப்படையாய் வைத்து மனம் முடிக்கும் பட்சத்தில் ஒருமனிதனின் வாழ்க்கை சரித்திரத்தையே திரும்பி பார்க்கும் விதத்தில் மாற்றி அமைக்க முடியும். "கணவனை விட்டு காதலனை கரம் பிடித்தாள்",இந்த ஒற்றை வார்த்தையின் வலி பாதிக்கப்பட்டவனின் கரங்களில் ஒப்படைததிற்கு 'திருமணம் 'என்ற சரியாக தேர்ந்துடுக்கபடாத,தேர்ந்தெடுக்க அனுமதிக்கபடாத நிகழ்வு தான் காரணமாய் இருந்து ஆகவேண்டும்.

சரியான துணையை தேர்ந்துடுக்க அனுமதிக்க படாத பட்சத்தில் , "கள்ளதொடர்பை கண்டித்ததால் மனைவி கொலை, கணவன் வெறிச்செயல்'. இப்படிப்பட்ட நிகழ்வுகளின் தடங்கள் நமது தின செய்த்தால்களில் பதிந்து கொண்டு தான் இருக்கும். என்னப்பா இத்தனை நிகழ்வுக்கும் திருமணம் தான் காரணம் அப்டின்னு சொல்றியா, அவை சரியாக அமையாத பட்சத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் செய்திதாளில் தடம் பதிக்கிறன, சிறுவர்களுக்கு அவர்கள் காதல், காமம் போன்றவற்றில் தடம் மாறும் சமயத்தில் பெற்றோர்களின் அக்கறை மற்றும் அதை பற்றிய தெளிவான கருத்துகள் சென்றடயும் பட்சத்தில் சிறுவர்களின் வாழ்க்கையை சரியான பாதையில், சரித்திரம் உருவாக்கும் நிலையில் அமைக்க முடியும் என்கிறாயா?.. அட ஆமாங்க அதேதாங்க.

அட இந்த சமயத்துல நம்ம கதை பாதியிலே நிக்குதுங்கலே இதோ வரேன், இப்படி ரெண்டு வீட்லயும் போட்டி போடறத பாத்து அய்யயோ தப்பா கல்யாணத்த செலக்ட் பண்ணிட்டோமோ அப்டிங்கற பயத்துல,அய்யோ கல்யாணத்த பத்தி நண்பர்கள் பயமுறுத்தினது உண்மை தானோ அப்டின்னு யோசிச்சேன்.அட அப்புறம் ரெண்டு மூணு நாளுக்கப்புறம் தானுங்க புரிஞ்சுது,ஏங்க ரெண்டு பேறு உட்கார்ந்து பேசினாலே ஆயிரம் கருத்து வேறுபாடு வருது, இதுல ஐநூறு பேரு சேர்ந்து ஒரு நிகழ்வு நடத்தும் போது சின்ன சின்ன தவறான புரிதல் வரத்தானே செய்யும்ங்க.சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?..எல்லோரும் நல்ல இருக்கணும் அப்டின்னு நினைச்சு செய்யுற காரியத்துல சின்ன சின்ன சண்டை வந்தா தப்பு இல்லைங்க.அட எல்லாம் நம்ம நல்ல இருக்க தான் அப்டின்னு நினைக்கும் போது கல்யாணம் அப்டிங்கறது எல்லோருக்கும் தேவையான,விரும்பி ஏற்றுக்கொள்கிற,மென்மையாய் ரசித்து பழக வேண்டிய, சரியாய் தேர்ந்தெடுக்க படவேண்டிய,காதலித்து கல்யாணத்துக்கு ஒப்புதல் வாங்கும் நேரத்தில்-சரியான துணையாக இருக்கும் பட்சத்தில்-அங்கீகரிக்க படவேண்டிய,சிறுவர்களுக்கு தெளிந்த புரிதலை கொடுக்க வேண்டிய, மிக முக்கியமான என் இந்திய தேசத்தின் அங்கீகாரமான மாசற்ற தூய்மையான இன்பம் ததும்பும் கலாச்சாரத்தை பறைசாற்றும், அந்நிய நாடுகள் பொறாமைப்படும் ஒரு புனிதமான நிகழ்வு "கல்யாணம்"..கல்யாணம் .

"என்னங்க, என்னங்க , விஜய் விஜய்,டேய் டேய் , சீக்கிரம் கிளம்பு நேரம் ஆச்சு எட்டு மணிக்கு பஸ்,இப்போ போனாதான் சரியா இருக்கும் ஈரோடு பஸ் பிடிக்க."ஹ ஹ ஹ அட ஆமாங்க சொல்ல மறந்துட்டேன் என் கல்யாண வாழ்க்கை நல்லா போகுதுங்க அதிக அன்பு, கொஞ்சம் சண்டை அப்டின்னு. அட நீங்களும் கல்யாணம் பண்ணிப்பருங்கலே..பயப்படாதீங்க நான் இம்புட்டு சொன்னதுக்கப்புறம் நீங்க கல்யாணம் வேண்டாம்னா சொல்ல போறீங்க..மறக்காம பத்திரிக்கை அனுப்புங்க நண்பா..

சரி நான் கிளம்புறேன்.என்னது எங்க கிளம்பிட்டனா?.நண்பா இது நமக்கு தல பொங்கல், போயிட்டு வரேன், நமக்கு இன்னொரு அப்பா அம்மா கிடைச்சு இருக்காங்க போயி பாத்துட்டு வரேன்..

அப்போ வர்ட்டா (இந்த வார்த்தை தேவா அண்ணாகிட்ட இருந்து காபி அடிச்சுட்டேன் )..வர்ட்டா..

6 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் தலை பொங்கல் வாழ்த்துக்கள்..!!!

எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..!

All the very best...!! Enjoy your life together!! :))

சுபத்ரா said...

வாழ்த்துகள் விஜய் !!!!

ஜீவன்பென்னி said...

ANUBAVAM PESUKIRATHU...VIJAY WELCOME BACK... HEARTY WISHES..

dheva said...

என்னட டக்குனு முடிச்சிட்ட.. (பெரிய டக்காவுல்ல இருக்கு...)

மீண்டும் 5 வருடங்கள் கழித்து என் அருமை தம்பி தனது அனுபவங்களை எழுதுமாறும் அதற்கு பிறகு 8 வருடங்கள் கழித்தும், 10 வருடங்கள் கழித்தும் எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...!

இப்படிக்கு....
8வது வருடத்தில் நிற்கும்
உன் அண்ணன்...!

Balaji.D.R said...

கல்யாணம்!!! நல்லது!!!

Balaji.D.R said...

கல்யாணம்!!! நல்லது!!

Post a Comment